நல்லவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் நயவஞ்சகர்களும் நிறைந்திருக்கிறார்கள் என்பது இன்றைய கலியுகத்தில் மட்டுமல்ல, அன்றைய புராண இதிகால காலங்களிலேயே உண்டு. நன்மை - தீமை, சூரியன் - சந்திரன் என இரண்டு விதங்கள் மற்றும் எதிரெதிர் துருவங்கள் உண்டு என்பதை கண்கூடாக பார்க்கிறோம். அதே போன்று இறைவன் நீக்கமற நிறைந்திருப்பதாலேயே அங்கு இறை தன்மைக்கு எதிரான சாத்தான் என்னும் தீய தன்மை வசிப்பதும் உறுதியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் இறை நம்பிக்கையில் உள்ள சிலர். ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
ஏவல், பில்லி, சூனியம் என்பது கட்டுக்கதையல்ல. கலியுகத்தில் இல்லாத ஒன்றும் அல்ல. தனக்குப் பிடிக்காத ஒருவரது நிம்மதியை செயலிழக்கச் செய்யும் பொருட்டு கெட்டதை உண்டாக்கும் மந்திரங்களை உச்சரித்து உருவேற்றி அதன் மூலம்பாதிப்புகளை ஏற்படுத்த இயலும். இந்த மந்திரங்களை அபிசார மந்திரங்கள் என்கின்றனர். இது குறித்து நான்கு வேதங்களில் ஒன்றான மற்றும் நான்காவதாக விளங்கும் அதர்வண வேதத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யார் மீது ஏவினாலும் இவையெல்லாம் பயன்தருமா என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். இறை சிந்தனையில் மூழ்கியிருப்பவர்களிடமும், வாழ்வில் இன்பமும், துன்பமும் சகஜம் என்னும் நிலையில் மனதை பக்குவமாக வைக்கும் போதே ஒரு வித நேர்மையும், கம்பீரமும் வந்து விடுபவர்களிடமும் இவை எளிதில் நெருங்காது. ஆனால் அச்சம் கொண்ட மனதோடு வளைய வருவதும், மனதில் எதிர்மறை எண்ணங்கள் வலுக்கும் நேரங்களிலும் ஏவிவிடப்படும் போது மகான்களாக இருந்தாலும் பாதிப்பு அடைகிறார்கள் என்பதே உண்மை.
செய்வினை ஏவல் செய்யப்பட்டதற்கான அறிகுறி என்ன?
வீட்டில் நிம்மதி இருக்காது சதாகாலம் சண்டையும் சச்சரவுமாகவே இருக்கும். அடிக்கடி வீட்டில் உள்ளோருக்கு உடல் நிலை பாதிப்புக்குள்ளாகும். வீட்டு விளக்கில் கரும்புகை படரும். வீடே ஒளியிழந்து காணப்படும். தூக்கம் வராது. தரித்திரம் கஷ்டம் நிலவும்.
இதுவே ஒரு குறிப்பிட்ட நபருக்கு செய்திருந்தால் அவன் தூக்கத்தை இழப்பான் கெட்ட கனவுகள் வரும். உடல் நிலை அடிக்கடி பாதிக்கும் ஆனால் மருத்துவ சோதனையில் ஒன்றுமே இல்லை என்று இருக்கும். யாரோ எழுப்புவது, கூப்பிடுவது போன்றவையும் இருக்கும். எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் படுத்தே கிடக்க தோன்றும். பொருளாதாரம் வீழ்ச்சி, செய்யும் தொழிலில் நஷ்டம் தரித்திரம் உண்டாகும். முகம் கறுத்துப் போகும்.
ஜாதக ரீதியாக செய்வினை, பில்லி சூனியம் யாரையெல்லாம் பாதிக்கும்?
சந்திரன் நீசம் சனி சேர்க்கை லக்னம் மற்றும் லக்னாதிபதி 6,8,12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது. சந்திரன் லக்னத்திற்கு 4,8,12 ஆகிய வீடுகளில் நிற்பது. சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது. சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6,8,12 வீடுகளில் நிற்பது போன்ற அமைப்புகள் உள்ள ஜாதகருக்கு செய்வினை, பில்லி சூனியம் பாதிப்புகள் வரலாம்.
யாரையெல்லாம் செய்வினை, பில்லி சூனியம் பாதிக்காது?
ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6,8,12 வீடுகளில் நிற்பது. தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது. சட்பலத்தில் சந்திரன் குறைந்த பக்ஷ பலம் பெற்று நிற்பது. தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அணுகாது. ரத்த சொந்தங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள், கிரஹண காலங்களில் பிறந்தவர்கள், தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள், யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது.
விடுபடுவது எப்படி?
குலதெய்வ வழிபாடு சிறந்தது. அதோடு பித்ருக்கள் வழிபாடும் செய்யலாம். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு, ப்ரத்தியங்கிரா தேவி வழிபாடு, காளி வழிபாடு, துர்க்கை வழிபாடுகளின் மூலம் செய்வினை, பில்லி சூனியத்திலிருந்து விடுபடலாம். சித்தர்கள் வழிபாடும் சிறந்த பலன்களைத் தரும். மனோ பலத்தை தரும் திருக்கடையூர் அபிராமியை வழிபட்டாலும் செய்வினைகள் அண்டாது. சந்திரனுக்கு வரமளித்த சந்திரமௌலீஸ்வரர் மற்றும் காமாட்சி அம்மனையும் வழிபடுவது நலம் பயக்கும்.
Leave a Reply