தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து 16 வகையான தெய்வீகப் பொருட்கள் வெளிப்பட்டது. அவற்றில் வலம்புரிச் சங்கும் ஒன்று. வலம்புரிச் சங்கு மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலட்சுமியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே. வீட்டில் இந்த வலம்புரிச் சங்கை வைத்து பூஜித்து வந்தால் குபேரன் அருளும், மகாலட்சுமியின் நித்திய வாசமும் தொடர்ந்து இருக்கும். பாற்கடலில் இருந்து வெளியான இந்த சங்கை திருமால் தனது கரங்களில் தாங்கிக் கொண்டார். ஓம்கார பிரணவ மந்திரத்தால் தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். பிரணவ மந்திரத்தின் அடையளமாகப் புனிதப் பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
சங்கின் வகைகள்:
சங்கில் பல வகைகள் உண்டு. அவை, மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகும். வலம்புரியாக கிடைக்கும் சங்குகளுக்கு விசேஷ சக்தி உள்ளது என்கின்றன ஆகம சாஸ்திரங்கள்.
தெய்வங்களும், சங்கும்:
ஆகமத்தில், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய சங்குகள் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. திருமலை வேங்கடவன் கைகளில் மணி சங்கும், ரங்கநாத சுவாமியின் கைகளில் துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமியின் கைகளில் பாருத சங்கும், பார்த்த சாரதி பெருமாளின் கைகளில் வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாரது கைகளில் பார் சங்கும், சவுரி ராஜ பெருமாள் கையில் துயிலா சங்கும், கலிய பெருமாளின் கரங்களில் வெண் சங்கும், ஸ்ரீநாராயண மூர்த்தியிடம் பூமா சங்கும் இருப்பதாக ஆகமம் குறிப்பிடுகிறது.
பாஞ்சஜன்யம் சங்கு:
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குரு குலம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், ‘குருதட்சணையாக என்ன வேண்டும்?’ எனக் கேட்டார். அவரும், அவரது மனைவியும் பஞ்சஜனன் எனும் அசுரன் தங்களது ஒரே மகனை கடத்திச் சென்று கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தருமாறும் வேண்டினர். கிருஷ்ணரும் அந்த அசுரனோடு போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால் அதற்கு பஞ்சஜன்யம் என்று பெயர் வந்தது. கிருஷ்ணரும் அதை தன் கரங்களில் தாங்கிக் கொண்டார்.
மகாபாரதத்தில் சங்கு:
மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. யுதிஷ்டிரர் (தர்மர்) 'அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் 'மணிபுஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
பூஜையில் வலம்புரிச்சங்கு:
வலம்புரிச் சங்கு மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும். சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம்.
வலம்புரிச் சங்கை வைத்து பூஜை செய்பவர்களின் பிரம்மஹத்தி தோஷம் விலகும். இந்த சங்கிருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் ஒவ்வொரு செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்தால் தோஷம் விலகி திருமணம் கைகூடும். கடன் தொல்லையால் அவதிப்படுவோர் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம் அர்ச்சனை செய்து வந்தால் கடன் காணாமல் போகும்.
வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.
வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது. வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.
கிருமிகளை அழிக்கும்.
சங்கிற்கு உடலை பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால்தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாக கருதப்பட்டது. குழந்தைகளுக்கு அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றி தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது. சங்கநாதம் கேட்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மேலும் பெண்கள் வளையல்கள் அணிவதை பார்த்திருப்போம். ‘வளை’ என்பது சங்கு என பொருள்படும். ஆரம்ப காலங்களில் சங்கின் மூலமாகத்தான் இது தயாரிக்கப்பட்டது. பின்னர் கண்ணாடி, தங்கம், வெள்ளி என உபயோக முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. சங்கு ஆபரணமாக பயன்படுத்தப்பட்டதோடு, ஆயுர்வேத வைத்தியத்தில் பஸ்பமாகவும் பயன்படுகிறது.
வலம்புரிச்சங்கு காயத்ரி மந்திரம்:
“ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குரு தேவாயாகம்
பின்ற பின் ஓம் பாஞ்ச ஜன்பாய வித்மஹே
பாவமானாய தீமஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்”
Leave a Reply