Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

அபிராமி அந்தாதி | Abirami Anthathi In Tamil

June 5, 2020 | Total Views : 3,975
Zoom In Zoom Out Print

அபிராமி அந்தாதி:

அபிராமி அந்தாதியை அருளியவர் அபிராமப் பட்டர் என்பவர் ஆவார். இவரின் இயற் பெயர் சுப்ரமணிய ஐயர்.  இவர் வாழ்ந்த காலம் 18-19 ஆம் நூற்றாண்டு ஆகும். அபிராமி அந்தாதி நூறு பத்திகள் கொண்ட  அற்புதமான தெய்வீக நூலாக இன்றளவும் பௌர்ணமி நிலவு போல பக்தர்களின் உள்ளத்தில் பிரகாசிக்கின்றது. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிகின்றதோ  அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்கும். .

அபிராமிப் பட்டர்:

 அபிராமிப் பட்டர் திருக்கடையூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள சிவாலயங்களுள் திருக்கடையூர் அபிராமவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். இவர் அன்னை பரா சக்தியின் தீவிர பக்தர் ஆவார். சிறு வயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து சித்தி அடைந்தார். 

அபிராமியின் மீது கொண்ட இவரது அதீத பக்தி காரணமாக தேவியை ஒளி வடிவில் கண்டு சதா சர்வ காலமும் அந்த பேரானந்தத்தில் மிதந்தபடி இருப்பார். இதனால் காண்பவர்கள் இவரை பித்தர் என்றும், பைத்தியம் என்றும் ஏளனம் செய்வார்கள். அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது பக்தியிலேயே இவர் தீவிரமாக இருப்பார்.அபிராமி அந்தாதி பாடல் பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்.

பட்டருக்காக அமாவாசையை  பௌர்ணமியாக ஆக்கிய அன்னை:

இந்த நிலையில் ஒரு நிறைந்த அமாவாசை நாளன்று, அந்த நாட்டு அரசர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் வந்தார். அன்னையிடம் பக்திப் பரவசத்தின் மிகுதியில் இருந்த அபிராமிப் பட்டர் மன்னர் வந்ததை கவனிக்கவில்லை. மன்னர் அன்னையை தரிசித்து விட்டு அபிராமிப் பட்டரிடம் இன்று என்ன “திதி” என்று வினவினார். ஒளிவடிவில் அன்னையை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமிப்பட்டர் சிறிதும் தாமதியாமல் இன்று “பௌர்ணமி” திதி என்று கூறி விட்டார். அப்படியானால் இன்று வானில் முழு நிலவு தெரியுமா என்று மன்னர் வினவ “ஆம்” என்று அபிராமிப்பட்டரும் பதில் அளித்து விட்டார்.  அதற்கு மன்னர் இன்று வானில்  முழு நிலவு தெரியாவிட்டால் உமக்கு மரண தண்டனை என்று கூறிச் சென்று விட்டார்.

தன்னை மறந்து இருந்த நிலையில் பௌர்ணமி என்று  கூறிவிட்ட அபிராமிப் பட்டர், தன்னிலை பெற்றார். நடந்ததை நினைத்து வருந்தினார். தன்னைக் காக்க வேண்டி அன்னையை நினைத்து அந்தாதி பாடத் தொடங்கினார். பட்டருக்கு காட்சி அளித்த அன்னை அபிராமி, தனது “தாடங்கம்” என்னும் தோடினை வானில் வீசி எறிய அது, பிரகாசமான ஒளியுடன் முழு நிலவாகப் பிரகாசித்தது. மன்னரும் மற்றோரும் அபிராமிப் பட்டரிடம் மன்னிப்பு வேண்டினர். மன்னர் அவருக்கு பரிசுகள் பல அளித்து அவைகளை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.

 அபிராமி அந்தாதி பாடல்:

அபிராமி அந்தாதி பாடல் நூறு பத்திகள் கொண்டது. இந்தப் பாடலை பாராயணம் செய்தாலும், கேட்டாலும் அன்னையின் பரிபூரண அருளுக்கு பாத்திரம் ஆகலாம். ஒவ்வொரு பத்தியும் பாராயணம் செய்வதன் மூலம் வெவ்வேறு ஆசிகளைப் பெற வழி வகுக்கின்றது. 
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி
 
1.    ஞானமும் நல்வித்தையும் பெற
வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள, நாம் கற்ற வித்தையும், ஞானமும் தான் நமக்கு கை கொடுக்கும் .  அந்த ஞானமும் நல்வித்தையும் பெற கீழே உள்ள பாடலை பாராயணம் செய்யலாம். 

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

2.    பிரிந்தவர் ஒன்று சேரவாழ்வில் எதிர் பாராத விதமாகவோ, அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நாம் யாரையாவது பிரிந்து இருந்தால் அவர்களுடன் இணைய வேண்டி இந்தப் பாடலைப் பாராயணம் செய்யலாம். 
துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
குடும்ப வாழ்வில் நாம் பல எண்ணங்களால் அலை கழிக்கப்பட்டு கவலையுறும் போது அதிலிருந்து விடுபட இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம். 
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே.

4. உயர் பதவிகளை அடைய
நமது வேலையோ, தொழிலோ எதுவாக இருந்தாலும் நாம் வகிக்கும் பதவி நமக்கு சமூகத்தில் அந்தஸ்தைப் பெற்றுத் தருகின்றது. உயர் பதவி பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம். 
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

5. மனக்கவலை தீர
வாழ்க்கையில் எதையாவது  நினைத்துக் கொண்டு கவலைப்படுவது சிலர் வழக்கம். சில சமயங்களில் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை கவலைக்கு உள்ளாக்குவதும் உண்டு. மனக் கவலை தீர இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம். 
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

6. மந்திர சித்தி பெற
வாழ்வில் நாம் நினைத்தை அடைய மந்திரங்கள் ஜெபிக்கிறோம். மந்திர சித்தி பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
சென்னியது உன்பொன் திருவடித் தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே.

7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
தாங்கொணாத துனம் வாழ்வில் வரும் போது அன்னையை சரணடைவது அதிலிருந்து தப்ப எளிய வழி. உங்கள் வாழ்வில் மலை போல வரும் துன்பங்கள் சூரியனைக் கண்ட பனி போல விலக இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
வாழ்வில் நாம் சந்திக்கும் துயரங்கள், கவலைகள் யாவும் ஆசை அல்லது பற்று. புத்தர் கூட ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார். ஒரு பொருளின் மீதே, அல்லது பிற உயிரின் மீதோ நாம் கொள்ளும் அதீத பற்று நீங்கி நம் மனதில் பக்தி பெருகிட இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம். 
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
கந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

9. அனைத்தும் வசமாக
நாம் விரும்பும் அனைத்தும் நம் வசமானால் வாழ்வே இன்பம்தான். நியாமான வகையில் அனைத்தையும் நம் வசமாக்க இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்துஎன் முன்நிற்கவே.

10. மோட்ச சாதனம் பெற
ஜெனனம் மரணம் என்ற பிறவித் தலையில் இருந்து நீங்கி வீடுபேறு எனும் மோட்ச சாதனம் பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பதுஉன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
இல்வாழ்க்கையில் இன்பங்கள் என்றும் பொங்கிட இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வானந்த மான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

12. நெஞ்சம் தியானத்தில் நிலைபெற
அலை பாயும் மனதை தியானத்தில் நிலை நிறுத்த இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.

13. வைராக்கிய நிலை எய்த
வைராக்கியம் பெறும் வகையில் மனதை பக்குவப்படுத்த இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!

14. தலைமை பெற
முன்னின்று பிறரை வழிநடத்த தகுதியான தலைவராக இருக்கும் தலைமைக் குணம் பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
பொருளிலார்க்கு இவ்வுலகில்லை. அருளிலார்க்கு அவ்வுலகில்லை.  எனவே இவ்வுலகிற்கு தேவைப்படும் பெருஞ்செல்வமும் அவ்வுலகிற்கு தேவைப்படும் பேரின்பமும் பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
தண்ணளிக் கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.

16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
முக்காலமும் உணரும் முழுமையான திறன் பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்தொளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
கன்னிப் பெண்கள் மனம் விரும்பும் வகையில் மணவாளனைப்  பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசயமாக வன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

18. மரண பயம் நீங்க
அந்தகன் வரும் நேரம் அவனியில் துணை இருப்பார் யாரும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. மரண பயம் நீங்க  இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
வவ்விய பாகத்திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே.

19. பேரின்ப நிலையடைய
வாழ்வில் பேரின்ப நிலை அடைய இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்பார்கள். சொந்த வீடு வாசல் போன்ற சுக சௌகரியங்கள் பெருக இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
உறைகின்ற நின் திருக்கோயில்நின் கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
அறிந்தோ அறியாமலோ அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
மங்கலை! செங்கல சம்முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கைச்! சகல கலாமயில்! தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும்பெண் கொடியே.

22. இனிப் பிறவா நெறி அடைய
இந்த மண்ணுலகில் மீண்டும் பிறவா நிலை அடைய, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்துஆண்டு கொள்ளே.

23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
சதா சர்வ காலமும் மனமது மகிழ்ச்சியாய் இருக்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது; அன்பர் கூட்டந் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.

24. நோய்கள் விலக
நோய்கள் நீங்கி ஆரோக்கியம் நீடிக்க இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

25. நினைத்த காரியம் நிறைவேற
நினைத்த காரியம் எளிதில் நிறைவேற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
சமுதாயத்தில் சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

27. மனநோய் அகல
மன நோய்கள் நீங்க இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.


28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
இக பர உலக வாழ்வாகிய இம்மை, மறுமை என இரண்டு நிலைகளிலும் இன்பங்கள் பெருக இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

29. அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற
அனிமா, லகிமா, மகிமா, ..... போன்ற அஷ்டமா சித்திகளைப் பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.

30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
அடுக்கடுக்காய் துன்பங்கள் அடுத்தடுத்து வரும் போது அவைகள் நீங்க இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டது அல்லவென்கை
நன்றே உனக்கு இனிநான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பலஉருவே! அருவே! என் உமையவளே!

31. மறுமையில் இன்பம் உண்டாக
அடுத்து வரும் பிறவிகளில் இன்பம் உண்டாக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்துஇங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.

32. அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க
அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க. இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லலற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
சாகும் தருவாயிலும் அன்னை பராசக்தியின் சிந்தனை மனதில் எழ , இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

35. திருமணம் நிறைவேற
திருமணம் கண்டு இல்லார வாழ்வை இனிதே துவக்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

36. பழைய வினைகள் வலிமை பெற
அறிந்தும் அறியாமலும் செய்த பழமை நல் வினைகள் வலிமை பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும்தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!

37. நவமணிகளைப் பெற
நவமணிகளைப் பெற,  இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
வாழ்வில் நல்ல விஷயங்களை வேண்டியதை வேண்டியவாறு அடைய, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
கருவிகளைக் கையாளும் வலிமை பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடையுண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!

40. பூர்வ புண்ணியம் பலன்தர
பூர்வ வினைப் புண்ணியங்கள் பலன் தர, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

41. நல்லடியார் நட்புப் பெற
நல்லடியார் நட்புப் பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப்பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

42. உலகினை வசப்படுத்த
உலகம் உங்கள் வசமாக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.

43. தீமைகள் ஒழிய
தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
பரிபுரச் சீறடிப்! பாசாங்குசை! பஞ்சபாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

44. பேதபுத்தி நீங்க
பேதைமை மிக்க புத்தி நீங்க,இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே.

45. உலகோர் பழியிலிருந்து விடுபட
உலகோர் பழியிலிருந்து விடுபட, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்திச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.

46. நல்நடத்தையோடு வாழ
வாழ்வில் தேவை நல்ல நடத்தை, நல்ல நடத்தையோடு வாழ, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!

47. யோகநிலை அடைய
யோக நிலை அடைய, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
வாழும்படியொன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படியன்று, விள்ளும்படியன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

48. உடல் பற்று நீங்க
உடல் பற்று நீங்கி, புலன்களை அடக்கி வாழ, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
மரணம் எனும் துன்பத்தை மனம் அறியாதிருக்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பையடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

50. அம்பிகையை நேரில் காண
அபிராமிபடடருக்கு காட்சி அளித்த, அம்பிகையை நேரில் காண, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்றாய
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

51. மோகம் நீங்க
மோகம் என்னும் மாய வலை நீங்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
அரணம் பொருள் என்று அருள் ஒன்றிலாத அசுரர்தங்கள்
முரண்அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகிதன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

52. இம்மையில் பெருஞ்செல்வம் அடைய
இவ்வுலக வாழ்வில், பெருஞ்செல்வம் அடைய, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்புமுன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

53. பொய்யுணர்வு நீங்க    
மனதில் பொய்யுணர்வு நீங்கி, சத்தியம் நிலைக்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவமில்லையே.

54. கடன் தொல்லைகள் தீர
கடன் தொல்லைகள் தீர, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

55. விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த
விருப்பு வெறுப்பு அற்ற சமமான மனநிலை பெற்று மோன நிலை காண, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.

56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
சகலரையும் வசீகரிக்கும் ஆற்றல் பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என்ஐயனுமே.

57. வறுமை ஒழிய
வாழ்வில் வறுமை நீங்கி செல்வம் பெருக இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே.

58. மனஅமைதி பெற
மனதில் அமைதி பொங்கிப் பெருக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர
குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை; நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்குஅலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

60. மெய்யுணர்வு பெற
மெய்யுணர்வு பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
பாலினும் சொல்இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடை நாய்த்தலையே?

61. மாயையை வெல்ல

மன இருள் பெருக்கும், மாயை வென்று வாழ, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.

62. எத்தகைய அச்சமும் அகல
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. தேவையில்லாத எந்த வகையான அச்சமும் நீங்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், மலரும் எப்போதும் என் சிந்தையதே.

63. அறிவு தெளிவோடு இருக்க
குழப்பங்கள் நீங்கி, அறிவு தெளிவோடு இறுக்கம் இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில்கொட்டும் தறி குறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

64. பக்தி பெருக
பக்தி பரவசத்தில் மனம் லயிக்க இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.

65. ஆண்மகப்பேறு அடைய
வம்சத்தை வளர்க்க, ஆண் வாரிசு பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீசெய்த வல்லபமே!

66. கவிஞராக
கவி எழுதும்  புலமைப் பெற , இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

67. பகைவர்கள் அழிய
பகைவர்கள் அழிய, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலா நிற்பர் பாரெங்குமே.

68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவையொளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.

69. சகல சௌபாக்கியங்களும் அடைய
வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் அடைய , இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும்; தெய்வ வடிவுந் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

70. நுண் கலைகளில் சித்தி பெற
நுண் கலை புலமை பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம் பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

71. மனக்குறைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெற
மனக் குறைகள் யாவும் தீர்ந்து மனதில் மகிழ்ச்சி பொங்க. இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே!

72. பிறவிப் பிணி தீர

பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட , அதாவது பிறவிப் பிணி நீங்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார்குறை காண்; இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.

73. பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாக
தாய்மை என்னும் பாக்கியம் பெற, குழந்தைப் பேறு உண்டாக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.

74. தொழிலில் மேன்மை அடைய
செய்யும் தொழிலில் மேன்மை பொங்க , இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

75. விதியை வெல்ல
விதியை வில்ல, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

76. தனக்கு உரிமையானதைப் பெற
தனக்கு உரிமையானதை பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.

77. பகை அச்சம் நீங்க
பகை அச்சம் நீங்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வாராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.

78. சகல செல்வங்களையும் அடைய

சகல விதமான செல்வங்களையும். அதாவது பதினாறு பேறுகளையும் அடைய,, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி! அணிதரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.

79. கட்டுகளில் இருந்து விடுபட
அறியாமை என்னும் கட்டுக்களில் இருந்து விடுபட, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

விழிக்கே அருளுண்டு; அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.

80. நிலையான மனமகிழ்ச்சி நிலைத்திட
நீர்க்குமிழி போல மறைந்து செல்லும் தன்மை அல்லாது, நிலையான மகிழ்ச்சி என்றும் னியாளித்திட இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
கூட்டியவா! என்னைத் தன் னடியாரில் கொடியவினை
ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.

81. நன்னடத்தை உண்டாக
நன்னடத்தை உண்டாக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனதுஉனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.

82. மன ஒருமைப்பாடு அடைய
அலை பாயும் மனது ஒருமைப்பாடு அடைய, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும்
களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக், கரைபுரண்டு,
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.

83. ஏவலர் பலர் உண்டாக
வேலை ஆட்கள் பலர் இருக்கவும், அவர்களை வேலை வாங்கவும், இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

விரவும் புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

84. தர்ம சங்கடங்கள் நீங்க
நாம் வாழ்வில் சந்திக்கும் தர்ம சங்கடங்கள் மற்றும் தர்ம சங்கமான நிலை நீங்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத், தயங்கும் நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

85. துன்பங்கள் நீங்க
வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.

86. ஆயுத பயம் நீங்க
ஆயுதன் சார்ந்த பயன்கள் மனதில் இருந்து நீங்க, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.

87. செயற்கரிய செய்து புகழ் பெற
பிறரால் ஆற்ற முடியாத செயற்கரிய செயலை செய்து புகழ் பெறுவதற்கு, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படியொரு பாகம் கொண்டாளும் பராபரையே.

88. எப்போதும் அம்பிகை அருள் பெற
வாழ்வில் எப்போதும் எந்த நிலையிலும் அம்பிகையின் அருள் பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன்பத்தருக்குள்
தரமன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர்தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!

89. யோக சித்தி பெற
வாழ்வில் யோக சித்தி பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென் முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
கணவன் மனைவி கருத்தொருமித்து மனதில் வேற்றுமை இன்றி வாழ, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
வருந்தா வகைஎன்மனத் தாமரையினில் வந்துபுதுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற
அரசு மற்றும் அரசாங்க காரியங்களில் வெற்றி பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
மெல்லிய நுண்ணிடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.

92. மனநிலை பக்குவமடைய
மனது பக்குவ நிலை அடைய, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம்பற்றி, உன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.

93. உள்ளத்தில் ஒளி உண்டாக
உள்ளத்தில் இருள் நீங்கி ஒளி உண்டாக,  இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

94. மனநிலை தூய்மையாக
தூய்மையான மனநிலை பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித், ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம்நன்றே.

95. தூய மனநிலை பெற
மாசில்லாத தூய மன நிலை பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!

96. எங்கும் தலைமையும் புகழும் பெற
சென்றவிடமெல்லாம் சிறப்பு பெரும் வகையில் தலைமையும் புகழும் பெற இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

கோமள வல்லியை அல்லியந் தாமரைக்கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.

97. புகழும் அறமும் வளர
புகழும், அறமும் பெருக, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
ஏமாற்ற நினைக்கும் வஞ்சகர் செய்யும் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பு பெற, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்ததெங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகலறியா மடப் பூங்குயிலே.

99. அருள் உணர்வு வளர
பொருளாசை மட்டுமன்றி, மனதில் அருள் உணர்வு வளர, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத் திடை; வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீதன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

100. அம்பிகையை மனத்தில் காண
அம்பிகையின் சிந்தனை மனம் முழுவதும் நிரம்பி, அவளையே அகத்தில் காண, இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருமப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும்; வெண்ணகையும்,
உழையைப் பொருக்கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

101. நூற்பயன்
அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்வதன் மூலமும் அன்னையை தொழுவதன் மூலமும் வாழ்வில் ஒரு தீங்கும் அண்டாமல் காத்துக் கொள்ள இயலும். 
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!


 

banner

Leave a Reply

Submit Comment