ரிஷபம் கால புருஷனின் இரண்டாவது வீடு ஆகும். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். இந்த ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம், முகத்தில் பிரகாசம், கண்களில் கூர்மை, கோரையான முடி, சற்று அகன்ற நெற்றி, உறுதியான பற்கள், தடித்த மூக்கு அகன்ற காது அழகான வயிறு உடையவர்கள். பெண்களுக்கு உருண்டையான முகம், சுருண்ட கேசம், கவர்ச்சியான பிரகாசமான கண்கள் விரிந்த இமைப் பகுதி, நேர்த்தியான பற்கள், அழகான கழுத்து, அழகான பாதம் மற்றும் உடல் உறுதி கொண்டவர்கள்.
ரிஷப ராசியின் சின்னம் காளை என்பதால் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். இயற்கையாக சாதுவான குணத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் சண்டை என்று ஒன்று வந்துவிட்டால் இவர்களை வீழ்த்துவது கடினம். இவர்களை நம்பி எந்த விஷயத்தை ஒப்படைத்தாலும் அதில் தனி அக்கறை செலுத்தி பொறுப்பாக இருந்து முடிப்பார்கள். இவர்கள் சுயநலம் அற்றவர்கள்.
இவர்கள் நிதானமாக செயல்படுவார்கள். நேர்த்தியான போக்கு இவர்களிடம் காணப்படும். எதார்த்தமான சிந்தனையுடன் செயல்படுவார்கள். இவர்கள் பேச்சில் உண்மை இருக்கும். இனிமையான குணமும் சகிப்புத்தன்மையும், சாதிக்கும் குணமும் இவர்கள் சிறப்புத்தன்மை ஆகும். இவர்கள் பொருளாசை உடையவர்கள் என்றாலும் நியாயமான வழியில் பொருளைத் தேடுவார்கள். பாசம் மிக்கவர்கள். ஆனால் விட்டுக்கொடுக்கும் தன்மை உடையவர்கள். உணவில் அதிக விருப்பம் உள்ளவர்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என தங்கள் காரியங்களை செவ்வனே செய்வார்கள். எப்போதும் எதற்கும் கலங்காத மனம் உடையவர்கள். தாயிடம் அன்புடன் இருக்கும் இவர்களுக்கு தந்தையிடம் பகை இருக்கும். இவர்கள் யாருக்காகவும் உண்மையை மறைக்க மாட்டார்கள். குடும்பத்தின் கௌரவத்திற்காக பாடுபடுவார்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செயல்படுவார்கள். இவர்கள் வண்டி வாகனங்களுடன் செல்வத்துடனும் செல்வாக்குடனும் இருப்பார்கள். இவர்களுக்கு சுக போகங்களில் குறைவிருக்காது.
Leave a Reply