மேஷ ராசி கால புருஷனின் முதல் வீடு என்று கூறுவார்கள். இந்த ராசியில் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம் வரும். மேஷ ராசியில் பிறந்தவர்கள், நடுத்தர உயரமும், மெலிந்த தேகமும், உறுதியான உடற்கட்டும், சற்று நீண்ட கழுத்தும், அகன்ற தலையும் கம்பீரமான தோற்றமும் நிமிர்ந்த நடையும், கனிவான பார்வையும் அழகிய நீண்ட புருவங்களும், அழகான பல்வரிசையும் கொண்டவர்கள். அடர்த்தியான தலை முடியிருக்கும். காதுகள் எடுப்பாக இருக்கும். பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகமிருக்கும்.
இவர்கள் உடல் வலிமையுடன் உள்ள வலிமையும் இணைந்து மிகுந்த ஆற்றலுடன் செயல்படும் சக்தி உடையவர்கள். யதார்த்த போக்கு இவர்களுக்கு இருக்காது என்றாலும் தனக்கு வேண்டியதை அடைவதில் தீவிரமாக இருப்பார்கள். எடுத்த முடிவில் திடமாக இருப்பார்கள். மூர்க்கத்தனமான கோபமும், பயமற்ற போக்கும் பிறரிடம் அடி பணியாத நிலையும் இவர்களிடம் இருக்கும். கடந்த காலத்தை நினைக்காமல் எப்போதும் எதிர் கால கற்பனையில் திளைப்பவர்கள். இவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள். சுவையான உணவில் விருப்பம் கொண்டவர்கள். தாய் தந்தையை மதித்துப் போற்றுவதும் காப்பதும் இயற்கையான அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள்.
இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரியென்று வாதிடுவார்கள். இவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் தைரியமானவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் எதிர் கொண்டு ஜெயிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் தங்களின் கௌரவத்தை ஒரு நாளும் விட்டு கொடுக்காதவர்கள். தான் ஏற்றுகொண்ட பணிகளில் எவ்வளவு தடைகள் வந்தாலும் பொறுமையுடன் இருந்து அதை முடித்தும் காட்டுவார்கள். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். கோபத்தில் மன அமைதியை இழந்து விடுவார்கள். என்றாலும் இவர்களின் கோபம் வந்த வேகத்திலேயே மறைந்து விடும். இவர்களில் சிலர் தான் என்னும் அகங்கார குணத்தை கொண்டவர்கள். பிறரை கலந்தாலோசிக்காமல் தானே சுயேச்சையாக முடிவுகளை எடுப்பார்கள்.
மேஷ ராசி மேடான ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான அந்தஸ்துடன் பெயர், புகழ் செல்வாக்குடன் திகழ்வார்கள். பூமி, நிலம், விவசாயத் தொழில் மேன்மை, ஆள் அதிகாரங்களுடன் இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவார்கள். இவர்கள் வாக்கு வன்மை உடையவர்கள்.
Leave a Reply