அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில்
| திருத்தலம் | வடபழநி ஆண்டவர் திருக்கோவில் அருள்மிகு |
| மூலவர் |
வடபழநி முருகன் |
| அம்மன் |
ஸ்ரீவள்ளி, தேவசேனா |
| தலமரம் |
அவதும்பரவிருக்ஷம் (அத்திமரம்) |
| ஆகமம் | சிவாகமம் |
| தீர்த்தம் |
குகபுஷ்கரணி (திருக்குளம்) |
| ஊர் |
வடபழநி |
| மாவட்டம் |
சென்னை |
முன்னுரை:
தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு பல்வேறு ஸ்தலங்களில் ஆலயம் இருகின்றன என்றாலும் ஒரு சில ஆலயங்கள் தொன்மை வாய்ந்தவையாகவும் மிகவும் சிறப்புத் தன்மை கொண்டும் விளங்குகின்றன. அத்தகைய ஆலயங்களுள் ஒன்று தான் தமிழ் நாட்டின் தலை நகரமாக விளங்கும் சென்னை மாநகரின் மையப் பகுதில் அமைந்திருக்கும் வடபழனி ஆண்டவர் திருக்கோவில் ஆகும். அந்தக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.
ஆலயம் தோன்றிய வரலாறு:
இந்த ஆலயம் தோன்ற மூல காரணமாக இருந்த அண்ணாசாமி என்பவர் முருகப்பெருமானின் தீவிர பக்தர். இவர் ஒரு சமயம் தீராத நோயினால் அவதிப்பட்டார். எனவே ஒரு சாதுவின் அறிவுரைப்படி அவர் தனது வீட்டில் முருகன் படம் வரைந்து முருகனை வழிபட்டார். நோய் குணமானதும் திருத்தணி முருகனுக்கு பாவாடம் செலுத்தினார். பாவாடம் என்றால் நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துவது. நோய் குணமானதும் இவரது பக்தி அதிகமானது. எனவே பழனி சென்று முருகனை தரிசித்து வந்தார். அங்கிருந்து முருகன் படத்தை வாங்கி வந்து சிறிய ஓலை கூரையின் கீழ் வைத்து வழிபட்டு வந்தார். முருகன் அருளால் அவருக்கு தெய்வீக சக்தி வந்தது. அதன் மூலம் பக்தர்களுக்கு குறி சொல்லும் பாக்கியம் கிடைத்தது. அண்ணாசாமி முருகன் படம் முன் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார்.

இரத்தினசாமி தம்பிரான் என்பவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். இவரும் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர்.அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோவில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.
பாக்யலிங்க தம்பிரான்: இப்போதுள்ள வடபழநி கோவிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோவிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோவில் மிகவும் புகழ் பெற்று விளங்கத் தொடங்கியது.
இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோவில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.
கோவிலின் அமைப்பு:
கோயிலில் நான்கு திசைகளில் ராஜகோபுரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மேலே கட்டப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கில் இராஜகோபுரம் 112 அடி உயரமுடையது. கிழக்கு கோபுரத்தில் 108 பரதநாட்டிய நடனத்தையும் காணலாம். இராஜகோபுரத்தினையடுத்து பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மண்டபம், வாகன மண்டபம், உற்சவர் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன இக்கோவில்களின் கட்டிட அமைப்புகளாக உள்ளன.
கோயில் தெய்வங்கள்
கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.கோயிலில் விநாயகர், சொக்கநாதர் (சிவன்), மீனாட்சி உட்பட கருவறைத் திருச்சுற்றில் ஏராளமான தெய்வங்கள் உள்ளன. தட்சிணாமூர்த்தி, சண்முகர், சண்டிகேசுவரர், துர்க்கை, வீரபாகு, வீரபத்திரர், பைரவர், காளி, வையாபுரி பாண்டியன், தேவார மூவர், மாணிக்கவாசகர் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. திருச்சுற்றில் அங்காரகன் (செவ்வாய்), சண்முகர், மீனாட்சி ஆகிய தெய்வங்களின் சிற்றாலயங்கள் வடக்குப்பக்கத்திலும், அருணகிரிநாதர் மற்றும் அனுமனின் சிறுகோவில்கள் கிழக்குப்பக்கத்திலும் அமைந்துள்ளன.
தலப் பெருமை :
பழனிக்கு செல்ல இயலாதவர்கள் இந்த தலத்தில் முருகனை வழிபடலாம். சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு. சென்னை மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள முருகன், பாதணிகள் அணிந்துள்ளார். இந்தக் கோவிலில் சுவாமி தனது ஒரு பாதத்தை முன் வைத்து இருப்பார். இந்தக் கோவில் பழனிக்கு சமமாக கருதப்படுகிறது.
திருக்குளம்:
இராஜகோபுரத்தின் எதிரே திருக்குளம் அமைந்துள்ளது.கோவிலுக்கென்று பிரத்யேக தீர்த்தக்குளத்துடனும் பெரிய வளாகத்தை கொண்டதாகவும் வடபழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த குளத்து நீருக்கு பிணி தீர்க்கும் குணம் உள்ளதாக நம்பிக்கை உள்ளது.
ஸ்தல விருட்சம்
தலமரமான அத்திமரம் ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது
மண்டபங்கள் :
வாகன மண்டபத்தில் மயில், பூதம் ஆகிய வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சுற்றில் வடபுறம் உள்ள திருமண மண்டபத்தில் மேடை போன்ற அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இங்கு திருமணங்கள் நிகழ்த்தப்படுகின்றன. திருச்சுற்று முழுவதும் முழுத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டு மண்டபங்களாக பிரிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் முன்புறம் அடியவர்கள் நின்று வணங்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
மகாமண்டபத்தின் மேற்கூரையின் விதானப்பகுதியில் முருகனின் பிறப்பு முதலான திருவிளையாடல்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. முருகனின் பிறப்பு, கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பு உள்ளிட்ட திருவிளையாடல்களும், முருகனின் அறுபடை வீடுகளான திருத்தலங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. ஒரு வருடத்தில் சுமார் 7000 திருமணங்கள் நடைபெறுகின்றன.
திருவிழா:
தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, வைகாசி விசாகம், நவராத்திரி கந்த சஷ்டி, மாசிமகம், பங்குனி உத்திரம் ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா, கிருத்திகை லட்ச்சார்ச்சனை தெப்பதிருவிழா.
பிரார்த்தனை:
திருமணத் தடை நீங்க இங்குள்ள முருகனை வழிபடலாம். முருகப்பெருமான் திருமணத்திற்கு மட்டுமின்றி குழந்தை பேறுக்கும் அருள்பாலிக்கிறார் என்று பக்தர்கள் மரத்தில் தொட்டில் கட்டுகிறார்கள்.
திருமணம் தடை நீங்க வேண்டுமானால் வடபழனி முருகன் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும். வடபழநி ஆண்டவரை வழிபட்டால் ஐஸ்வர்யம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் சன்னதியின் முக்கிய நேர்த்திகடன் முடி காணிக்கையாகும். வேல் காணிக்கை, ரொக்கம் போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள். தவிர உண்டியல் காணிக்கை இக்கோவிலின் மிக முக்கிய வருமானம் ஆகும். பால், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் ஆகிவற்றாலான அபிசேகங்கள் சுவாமிக்கு நேர்த்திகடனாக நடைபெறுகின்றன.
பூஜைக்காலம்
1. பள்ளியறை – காலை 5.30 மணி
2. கால சந்தி – காலை 6.30 மணி
3. உச்சிக் காலம் – பகல் 12.00 மணி
4. சாயரட்சை – மாலை 5.00 மணி
5. அர்த்த ஜாம பூஜை – இரவு 9.00 மணி; செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 09.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.
கோவில் திறக்கும் நேரம்:
காலை 05:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.











