கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு அஷ்ட ஸ்தானம் என்று கூறப்படும் 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 10ஆம் வீடு, 12ஆம் வீடு, மற்றும் 2 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 10 ஆம் வீடு என்பது, வேலை, தொழில், செயல்கள், பூஜை, கௌரவம், சமுதாய நிலை, சாதனைகள், வெற்றிகள் போன்றவற்றையும், 12 ஆம் வீடு, மோட்சம், நஷ்டம், செலவுகள், ரகசியங்கள், வெளிநாடுகளில் குடியேறுதல், முதலீடு, தான தர்மம் ஆகியவற்றையும், 2 ஆம் வீடு என்பது செல்வம், குடும்பம், பேச்சு மற்றும் குரல், எண்ணங்கள், ஆரம்பக் கல்வி, உலக உடைமைகள், சொத்து, ஆடைகள், கோபம், வாத விவாதங்கள் போன்றவற்றையும் குறிக்கிறது.
துலாம் ராசி அன்பர்களுக்கு இந்தப் பெயர்ச்சி, முற்றிலும் சாதகமான பெயர்ச்சி என்று கூற முடியாது. வேலை, தொழில், சொத்து, வெளிநாட்டு வாய்ப்புகள் போன்ற விஷயங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தவிர்க்க முடியாத சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற போதிலும் சிறப்பாக செயலாற்றி தடைகளை சமாளித்து விடுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாத போதும் உங்கள் திறமை மூலம் நீங்கள் முன்னேறுவீர்கள். வருமானம் கணிசமாகவும், நிலையாகவும் இருக்கும். இது உங்கள் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இருக்கும்.
இந்த குரு பெயர்ச்சி காலக்கட்டத்தில் உங்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு, குடும்ப சொத்து அல்லது பரம்பரை சொத்து வந்து சேரும் பிரகாசமான வாய்ப்புகளும் உள்ளன. சிலர், பெரிய சொத்துக்கு சட்ட வாரிசாக இருக்கும் சாத்தியமும் உள்ளது. உங்கள் பொருளாதார நிலையிலும் நீங்கள் ஏற்றத்தையும் நல்ல மாற்றத்தையும் காணும் வாய்ப்பு உள்ளது. சிலர் பணி தொடர்பாக வெளி நாடு செல்லும் வாப்பினையும் பெறுவீர்கள். அதே சமயத்தில் இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் சுப செலவுகள் செய்யும் வாய்ப்பும் உள்ளது. என்ற போதிலும் அந்த செலவுகள் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும். மனதில் அமைதி நிலவும் காரணத்தால் நல்ல உறக்கமும் உங்களுக்கு கிட்டும். உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் நீங்கள் இருப்பீர்கள். பிரியமானவர்களுடன் நீங்கள் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவைப் பெறுவீர்கள். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சில தேவையற்ற போட்டி, பொறாமைகளும் இப்பொழுது தலைதூக்கி, உங்கள் மன அமைதியைக் குலைக்கலாம்.
வேலை, தொழில்
பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு தக்க பலன்களைப் பெறுவீர்கள். கடின உழைப்பு உங்களுக்கு விருப்பமான பலன்களை பெற்றுத் தரும். வேலை விஷயமாக நீங்கள் வெளி நாடு செல்ல நேரலாம். அல்லது வெளி நாட்டினருடன் தொடர்பு ஏற்படலாம். உங்களில் ஒரு சிலர் வெளி நாடு சென்று அங்கு குடியேறும் வாய்ப்பும் உள்ளது. நீங்கள் வியாபாரம் அல்லது தொழில் செய்பவராக இருந்தால் இந்த காலக் கட்டத்தில் சாதாரண பலன்களையே எதிர்பார்க்க இயலும். தொழிலில் போட்டிகளும் பொறாமைகளும் இருக்கும். நீங்கள் சூழ்நிலையை திறமையாகக் கையாள வேண்டியிருக்கும். புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோர், அவ்வாறு செய்வதற்கு முன், நன்கு யோசித்துச் செயலாற்றுவது அவசியம்.
நிதி
நீங்கள் கணிசமான வருமானத்தைப் பெறுவீர்கள். அதே சமயத்தில் செலவுகளும் சந்திக்க நேரும். வீடு வண்டி வாகனம் போன்ற வகையில் செலவுகள் தவிர்க்க முடியாமல் போகலாம். மருத்துவ செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த செலவுகளை சமாளிக்க நீங்கள் உங்கள் சேமிப்பில் கை வைக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் உங்கள் சேமிப்பும் கரைய வாய்ப்புள்ளது. எனவே செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரித்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
குடும்பம்
குடும்ப உறவு முறைகள் சாதாரணமாக இருக்கும். சில சமயங்களில் கருத்து வேறுபாடு காரணமாக ஒற்றுமையின்மை தலை தூக்கும். என்றாலும் அவர்களிடம் இருந்து விலகிக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து அனுசரணையுடன் நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் நிலைமையை சமாளிக்க இயலும். வயதில் மூத்த உறுப்பினர்களுடன் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அவர்களை மதித்து நடந்து கொள்வதன் மூலம் சுமூக உறவை பராமரித்து பிரச்சினைகள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும்.
கல்வி
கல்வி பயிலும் மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதீத தன்னம்பிக்கை உங்கள் முயற்சியைக் குலைத்து விடும். அதனால் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை அடைய இயலாமல் கூட போகலாம். எனவே விடா முயற்சி ஒன்றே பலன் அளிக்கும். கவனம் சிதற விடாமல் மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பதன் மூலம் நீங்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவீர்கள்.
காதலும், திருமண வாழ்க்கையும்
திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நல்லிணக்கம் ஏற்பட இது ஏதுவான சமயம் இல்லை என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அன்பும் அரவணைப்பும் உறவை வலுவாக்கச் செய்யும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கான தக்க துணையை தன்னம்பிக்கையுடன் தேடி அமைத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியம்
இந்தக் காலக் கட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். தொற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடலின் மேற்பகுதியில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. உடல் உபாதைகள் சிறிய அளவில் இருக்கும் போதே மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். சாதாரண உபாதைகள் என்றாலும் அலட்சியம் வேண்டாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
எளிய பரிகாரங்கள்
- ‘ஓம் ப்ரஹம் ப்ருஹஸ்பதயே நமஹ’ என்ற குரு ஸாத்விக் மந்திரத்தை, வியாழக்கிழமைகளில் 108 முறை ஜபம் செய்யவும்
- குரு காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யவும்
- சிவபெருமானை வழிபடவும்
- ருத்ராபிஷேகம் செய்யவும்
- முடிந்தால், 5 முக ருத்ராட்சம் அணியவும்
- வியாழக்கிழமைகளில் எளிய, சாத்விகமான உணவு உட்கொள்ளவும்
- நீங்கள் அசைவம் உண்பவராக இருந்தால், வியாழக்கிழமைகளில், அசைவ உணவைத் தவிர்க்கவும்
Leave a Reply