Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

நல்ல கணவன், மனைவி அமைய திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

May 31, 2021 | Total Views : 2,160
Zoom In Zoom Out Print

திருமணம்

திருமணம் என்பது இரு மனங்கள் இணைவதினால் உருவாகும் ஒரு இனிய உறவு ஆகும். ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று போற்றப்படும் இது, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு புனிதமான பந்தமும் ஆகும். ஒரு ஆணும், பெண்ணும், ஒருவர் வாழ்க்கையை மற்றவருடன் முழுமையாகப் பகிர்ந்து கொண்டு, கருத்தொருமித்துக், கணவன் மனைவியாகச் சங்கமிக்கும் இந்த நிகழ்வு, இருவருக்கும் ஒரு புதிய வாழ்வின் துவக்கமாகவே அமைகிறது. இது போன்ற பெரும் சிறப்பு வாய்ந்த திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தே, நமது முன்னோர்கள், ‘அந்த இருவரும், அனைத்து வகையிலும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் தானா?’ என்று அறிந்து, நிச்சயத்த பின்னரே, அந்த ஆணையும், பெண்ணையும் திருமண உறவில் இணைத்தனர். 

இவ்வாறு, திருமணத்திற்கான பொருத்தத்தை ஆராய்ந்து முடிவு செய்வதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த சாதனம், நமது மிகத் தொன்மையான ஜோதிட சாஸ்திரம் ஆகும். வேத ஜோதிடம் என்று போற்றப்படும், நமது பழமை வாய்ந்த இந்த ஜோதிடக் கலையில் விவரிக்கப்பட்டுள்ள திருமணப் பொருத்தத்திற்கான சில வழிமுறைகளை இங்கு நாம் சுருக்கமாகக் காண்போம்.   

திருமண பொருத்தம் பார்க்க உதவும் இலவச மென்பொருள்

நட்சத்திரப் பொருத்தம் 

திருமணத்தைப் பொருத்தவரை, ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முதலில் நட்சத்திரப் பொருத்தம் அமைந்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக, சில நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியவை என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே, ஆணின் ஜன்ம நட்சத்திரமும், பெண்ணின் ஜன்ம நட்சத்திரமும் இவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்தியவையாக இருப்பது அவசியம். இவ்வாறு அமைந்தால், அந்த இருவருக்கும் நட்சத்திரப் பொருத்தம் இருக்கிறது என்று கொள்ளலாம்.  

களத்திர ஸ்தானம் மற்றும் களத்திர காரகன்

ஆனால், திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது, அதில் நட்சத்திரப் பொருத்தம் என்பது ஒரு ஆரம்பம் தான். இந்த விஷயத்தில் நாம் தொடர்ந்து, ஆராய்ந்து பார்க்க வேண்டியற்றில் மிக முக்கியமானது, களத்ர ஸ்தானமும், களத்ர காரகனும் ஆவர். ‘களத்ரம்’ என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல் ஆகும். எனவே, களத்திர ஸ்தானம் என்பது, ஒருவரது ஜாதகத்தில் திருமணத்தைக் குறிக்கும் வீட்டையும், களத்திர காரகன் என்பவர், திருமணத்திற்கு அதிபதியாக கிரகத்தையும் குறிக்கிறது.       

ஒருவரது ஜாதகத்தில், லக்னத்திலிருந்து 7 ஆவது இடம் அல்லது வீடு களத்திர ஸ்தானம் ஆகும். ‘இது எந்த ராசியில் அமைகிறது? அந்த ராசி அதிபதியான கிரகம் எங்கு, எவ்வாறு அமைந்திருக்கிறார்? இந்த களத்திர ஸ்தானமான 7 ஆவது வீட்டில், என்ன கிரகங்கள் அமைந்துள்ளன? இந்த வீடும், அதில் உள்ள கிரகங்களும், வேறு எந்த கிரகங்களால் பார்க்கப்படுகின்றன?’ இது போன்றவற்றை வைத்து, திருமணத்தைக் குறிக்கும் அந்த 7 ஆவது வீடும், அதன் அதிபதியான கிரகமும், ஒருவரது ஜாதகத்தில் நன்றாக அமைந்திருக்கின்றனவா என்பது தெரிய வரும். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணப் பொருத்தம் அமைவதற்கு, அவர்களது களத்திர ஸ்தானம் நன்றாகவும், பலமாகவும், இருவருக்கிடையே பொருத்தமாகவும் இருப்பது அவசியம். 

அடுத்து, களத்திர காரகன் எனப்படும் திருமணத்தைக் குறிக்கும் கிரகமான சுக்கிரன், முக்கியத்துவம் பெறுகிறார். இவர் சுப கிரகமாக இருந்தாலும், ஒருவரது ஜாதகத்தில் இவரது அமைப்பு, இவருடன் சேர்ந்து இருக்கும் மற்ற கிரகங்கள், இவர் மேல் தங்கள் பார்வையைச் செலுத்தும் கிரகங்கள் போன்றவை ஒருவரது திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கும் அம்சங்களாக உள்ளன. மண வாழ்க்கை நன்றாக அமைவதற்கு, ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைந்திருப்பது அவசியம். எனவே, சுக்கிரனது அமைப்பும், திருமணப் பொருத்தத்திற்கு இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது.     

ஜாதகப் பொருத்தம்

இவ்வாறு களத்திர ஸ்தானம் மற்றும் களத்திர காரகன் தவிர, திருமணப் பொருத்தத்திற்கு, ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும் அவசியம்.   

ஜாதகத்தில், லக்னம் எனப்படும் மிக முக்கியமான முதல் வீடு மற்றும் அந்த வீட்டின் அதிபதியான லக்னாதிபதி ஆகியவற்றின் அமைப்பு, திருமணப் பொருத்தத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தவிர, ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீடு என்பது தன, குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானம் ஆகும். இந்த இடம் நன்றாக அமைந்திருந்தால் தான், இருவரும் அன்பு மற்றும் செல்வ வளத்துடன், மனமொத்த தம்பதிகளாகக் குடும்பம் நடத்த முடியும். இது போல, போகஸ்தானம் என்ற மூன்றாவது இடமும், நன்றாகவும், பொருந்தியும் இருப்பது, திருமணப் பொருத்தத்திற்கு அவசியம். மேலும், 8 ஆம் இடம் என்பது ஆயுர் ஸ்தானம் ஆகும். பொதுவாக இது சுபமான இடமாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும், திருமணப் பொருத்ததிற்கு, இந்த வீடும் நன்றாக அமைந்திருப்பது அவசியம் ஆகிறது.              

இவை தவிர, அந்த ஆண், பெண் இருவருக்கும், ராசிப் பொருத்தம், யோனிப் பொருத்தம் இருப்பதும், தினம், கணம், ரஜ்ஜூ போன்ற பொருத்தங்கள் இருப்பதும், அவர்களுக்கு இடையே திருமணப் பொருத்தம் அமைவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. திருமணத்திற்கான 10 விதமான பொருத்தங்களில், மேற்கண்ட பொருத்தங்கள் உட்பட, 6 அல்லது 7 பொருத்தங்களாவது அமைந்திருப்பது, அந்த தம்பதிகள் நல்ல திருமண வாழ்க்கை நடத்த உதவும்.  

மேலும், திருமணப் பொருத்தத்திற்கு, இது போன்ற வீடு, கிரகம், பொருத்தம் போன்றவை தவிர, இருவரது கிரக நிலை, தசா புக்தி ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இது போல, அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ மண வாழ்க்கையை பாதிக்கக் கூடிய செவ்வாய் தோஷம் போன்ற அமைப்பு இருந்தால், அதற்கு ஏற்ற ஜாதக அமைப்புக் கொண்டவரை அவருக்குப் பொருத்தமான ஜோடியாக, மண வாழ்க்கையில் ஒன்று சேர்க்கலாம். 

இவ்வாறு, அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, நன்கு பொருத்தம் பார்த்து திருமண பந்தத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஆணும், பெண்ணும், கருத்தொருமித்த கணவன் மனைவியாகக், குழந்தை பாக்கியம், அமைதி, ஆனந்தம் ஆகியவற்றுடன், நீண்ட மண வாழ்க்கை  நடத்த வாய்ப்பு உள்ளது என்பதில் ஐயமில்லை. 

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

தவிர, ‘திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி’ என்பது குறித்து, விருப்பமுடையவர்கள், தகுந்த ஜோதிடரை அணுகியோ, அல்லது புத்தகங்கள், இணையதளம் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்

banner

Leave a Reply

Submit Comment