பொருத்தமான திருமணம்
திருமணத்திற்காகப் பொருத்தம் பார்ப்பது என்பது, ஜோதிட சாஸ்திரப் பயன்பாடுகளில், முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. ஆணோ, பெண்ணோ, அது யாராக இருந்தாலும் சரி, அவர்களது வாழ்கையில் திருமணம் என்பது ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன் மகத்துவத்தை உணர்ந்தே, நமது முன்னோர்கள், வேத ஜோதிடம் எனப்படும், நமது பழமையான ஜோதிட சாஸ்திரத்தின் துணை கொண்டு, திருமண வயதிலுள்ள ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பல வகையிலும் பொருத்தம் பார்த்த பின்னரே, அவர்களைத் திருமண பந்தத்தில் சேர்த்து வைத்தனர். இவ்வாறு திருமண பொருத்தம் பார்ப்பதை, ஒரு விதியாகவும், கடமையாகவும் நடைமுறைப் படுத்தி வைத்தனர். சம்மந்தப்பட்ட ஆண், பெண் இருவருடைய ஜாதகங்களை அலசி, ஆராய்ந்தே இந்தத் திருமணப் பொருத்தம் பார்க்கப்படுவதால், இதை ஜாதகப் பொருத்தம் என்று அழைப்பதிலும் தவறில்லை.
10 பொருத்தங்கள்
திருமணம் தொடர்பாக, சாதாரணமாக 10 பொருத்தங்கள் பார்ப்பது என்பது, இப்பொழுது உள்ள நடைமுறையாக உள்ளது. இந்தப் பொருத்தங்கள், அந்த ஆண், பெண் இருவருடைய உடல், மனம், இயல்பு ஆகியவற்றை ஆராய்ந்து, கணவன் மனைவியாக அவர்கள் ஒற்றுமையுடனும், சந்தோஷத்துடனும், தங்களுடைய வாழ்நாள் முழுவதையும் இனிமையாகக் கழிக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை, ஜோதிட ரீதியாகக் கணிக்கின்றன.
திருமண பொருத்தம் பார்க்க உதவும் இலவச மென்பொருள்
இந்தப் 10 பொருத்தங்கள் - தினப் பொருத்தம், கணப் பொருத்தம், வசியப் பொருத்தம், யோனிப் பொருத்தம், மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் மற்றும் வேதைப் பொருத்தம் என்பவை ஆகும்.
முக்கியப் பொருத்தங்கள்
இந்த ஜாதகப் பொருத்தங்கள் அனைத்தும் பொருந்தி இருப்பது என்பது, அந்தத் திருமணத்தை சிறக்கச் செய்யும் என்பது உண்மை தான் என்றாலும், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இவ்வாறு அனைத்து அம்சங்களும் பொருந்தி வருவது, நடைமுறையில் சாத்தியமில்லாதது. எனவே, இந்தப் பத்துப் பொருத்தங்கள் அனைத்தும் இல்லாவிட்டாலும், இவற்றில் சில முக்கிய திருமணப் பொருத்தங்கள் மட்டுமாவது இருக்கிறதா என்று பார்த்து, அவை அமைந்திருந்தால், அவர்களுக்கு இடையே திருமணத்தை நடத்துவது என்பது, வழக்கமாக உள்ளது.
இதன்படி, தினப் பொருத்தம், கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் மற்றும் வேதைப் பொருத்தம் என்ற 6 பொருத்தங்களும், முக்கிய திருமணப் பொருத்தங்கள் எனலாம்.
இவை மிக முக்கியமானவை எனப்படுவதால், ‘இந்தப் பொருத்தம் இல்லாமல் திருமணப் பொருத்தம் முழுமையடையாது’ என்பதற்கு இவை தான் பதிலாக இருக்கின்றனவா? அதாவது, ‘இந்த முக்கியப் பொருத்தங்கள் மட்டும் இருந்து விட்டால், திருமணப் பொருத்தம் முழுமையடையும்’ என்று அறுதியிட்டுக் கூறமுடியுமா?
இந்தக் கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் கூற வேண்டும் என்றால், அது ‘இல்லை’ என்பதாகத் தான் இருக்க முடியும்.
10 பொருத்தங்களில் பல பொருத்தங்கள் பார்த்து, ‘அம்மி மிதித்து, அருந்ததி எல்லாம் பார்த்துச்’ செய்யப்படும் பல திருமணங்கள் தோல்வி அடைவதும் கசந்து போவதும், ‘இல்லை’ என்ற இந்த பதிலுக்குச் சான்றாக அமைகின்றன.
இது போன்ற நிலை உருவாவதற்குப், பல காரணங்களைச் சொல்லலாம். தகுதியும், அனுபவமும் வாய்ந்த ஜோதிடர்களைக் கொண்டு, முறையாகக் கணிக்கப்படாத ஆண், பெண் ஜாதகங்களும், பொருத்தங்களும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் எனலாம். இது போல, இருவரது ஜாதகங்களையும் முழுமையாக ஆராயாமல், ராசி, நட்சத்திரப் பொருத்தம் போன்றவற்றை மட்டும் பார்த்து, திருமணத்திற்குப் பச்சைக் கொடி காட்டுவது என்பதும், தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் சிக்கலைச் சந்திப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
முழுமைக்குத் தேவையான மற்ற பொருத்தங்கள்
திருமணப் பொருத்தம் பார்க்கும் நேரத்தில், மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய ஒருவர், திருமணத்திற்கு அதிபதியான, களத்ர காரகன் எனப்படும் சுக்கிர கிரகமாகும். அத்துடன் கூட, மனோ கராகன் எனப்படும், மனதைக் குறிக்கக் கூடிய சந்திரனும், கல்யாண விஷயங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக உள்ளார். ‘ரசனை கிரகங்கள்’ என்று அழைக்கப்படும் இந்த இருவரும், கணவன், மனைவி இருவரது ஜாதகங்களிலும் சாதகமாகவும், சுபமாகவும் அமைந்திருப்பது, இனிய திருமண உறவுக்கு அவசியமாகிறது. எனவே, திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, சுக்கிர, சந்திர கிரக அமைப்புகளையும் மனதில் கொண்டு பொருத்தம் பார்ப்பது அவசியம்.
இவற்றுடன் கூட, திருமணம் தொடர்பாக முக்கிய பங்கு வகிக்கும் குரு, சனி, புதன் போன்ற கிரகங்களின் அமைப்பு, அவை இருக்கும் நிலை, கிரக பலன்கள் போன்றவற்றை அறிவதும், சம்மந்தப்பட்ட ஆண், பெண் இருவருடைய தசாபுக்தியைக் கருத்தில் கொள்வதும், திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது முக்கியமாக அனுசரிக்க வேண்டிய விதி முறைகளாகும்.
ஜோதிடத்தின் அடிப்படையிலான இந்தப் பொருத்தங்களுடன் கூட, திருமண உறவில் இணைய இருக்கும் ஆண், பெண் இருவருக்கும் இடையே மனப் பொருத்தம் இருப்பது என்பது மிக, மிக அவசியமான ஒன்றாகிறது. ஒருவருடன், மற்றவரது கண்ணோட்டம், மனப்பாங்கு போன்றவை ஒத்துப் போவதும், இருவரது ரசனையும் ஒன்றாக இருப்பதும், அவர்களை உணர்வு நிலையில் ஆழமாக ஒன்றிணைத்து, அவர்கள் மண வாழ்க்கையை அமைதியும், ஆனந்தமும் நிறைந்ததாகச் செய்யும் என்று உறுதியாக நம்பலாம்.
Leave a Reply