முருகன் அவதாரம் செய்த நாள் வைகாசி விசாகம் நாள் ஆகும். எனவே வைகாசி மாதத்தில் வரும் விசாக நடசத்திர நாள் முருகனை வழிபடும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான். தை மாதத்து பூசம் போல, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல, பங்குனி மாதத்தின் உத்திரம் போல, வைகாசி மாதத்தில் விசாகம் முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள். தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவரின் புத்திரர்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது பற்றி வைகாசி விசாகம் நாளில் அறிந்து கொள்வோம்.
வைகாசி விசாகம் புராண வரலாறு
பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு குழந்தைகளும் மிகவும் புத்திசாலிகள் மற்றும் சுட்டிக் குழந்தைகள். அவர்கள் அறுவரும் ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் . நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.
ஆனால் அந்த ஆறு குழந்தைகளும் தங்கள் தந்தையின் சொல்லைக் கேட்காமல் நீரில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் சேட்டையால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த அவர்களின் தந்தையான பராசர முனிவர் கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கேட்டு தந்தையிடம் மன்றாடினார். மனம் இறங்கிய முனிவர் உங்களுக்கு பார்வதி தேவியின் அருளால் விமோசனம் கிடைக்கும், அதுவரை காத்திருங்கள் என்றார்.
மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு மீன்களும் முனிவர்களாக மாறினார்கள்.
ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக சிவனை நோக்கி வழிபட்டனர் அப்போது "நீங்கள் ஆறு பேரும் திருச்சந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் உங்களுக்கு அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அவர்கள் அறுவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் அவர்களுக்கு கிடைத்தது.
வைகாசி விசாகம் திருநாள் சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாக சிறப்புகள்
வைகாசி விசாகம் நன்னாளில் திருச் செந்தூர் ஆலயத்தில் முருகனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா நடத்தபடுவது உண்டு. மேலும் முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த ஆறு மீன்களாக இருந்து சாப விமோசனம் பெற்ற பாரச முனிவரின் குமாரர்களை நினைவு படுத்தும் விதமாகஆலயத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை இடுகின்றனர். ஆறு முனிவர்களின் ஆறு உருவ பொம்மைகளை வைகின்றனர். முருகப் பெருமானுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள். பன்னிரு ஆழ்வார்களில் ஓருவரான நம்மாழ்வார் பிறந்த தினம்.
வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.
Leave a Reply