நமது கலாசாரத்தில் தமிழ் மாதம், நட்சந்திரங்கள், திதிகள் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. தமிழ் மாதங்களில் 12 வது மாதம் பங்குனி மாதம். நட்சத்திரங்களில் பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் நாளே பங்குனி உத்திரம் ஆகும். உத்திர நட்சத்திரத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது தமிழர்களாகிய நமது வழக்கம். பல தெய்வத் திருமணங்கள் இந்த மாதம் நடைபெற்றுள்ளதாக நாம் பல நூல்கள் வாயிலாகவும். ஆலய வரலாற்று வாயிலாகவும் அறிகிறோம்.
எண்ணிக்கையற்ற பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திரத்திற்கு அதிபதி சூரியன் ஆவார். அதே நாளில் பௌர்ணமி பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சூரியன் தந்தையாகவும் சந்திரன் தாயாகவும் போற்றப்படுகின்றனர். இருவரும் இணையும் நாள் திருமண வைபவம் காண சிறந்த நாளாக அமைகின்றது.
பங்குனி உத்திரத்தில் தெய்வீகத் திருமணங்கள்:
சிவபெருமான் சக்தி ஸ்வரூபமாய் விளங்கும் அன்னை பார்வதியோடு திருமணக் கோலத்தில் மதுரையில் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு காட்சி அளித்த நாள். இந்த நாளில் தான் ஒவ்வொரு வருடமும் மதுரையில் மீனாட்சி சுந்தரேசன் திருமண விழா மிகவும் கோலாகலமாக நடக்கும்.
மங்களங்கள் பொங்கிப் பெருகும் பங்குனி உத்திர நாளில் தான் முருகப் பெருமான் சூரனை வென்று வதம் செய்து தெய்வானையை மணம் புரிந்து கொண்டார்.
சிவனின் தவத்தை கலைத்த குற்றத்திற்காக நெற்றிக் கண்ணால் மன்மதனை எரிதார் சிவன். ரதி சிவனை வேண்ட, அதன் பெயரால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இந்த நாள் தான்;
இந்த நாளில் தான் வைணவ கோவில்களில் திருமாலும் தாயாரும் மனக் கோலத்தில் காட்சி தருவார்கள்.
மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
தேவேந்திரன்-இந்திராணி, நான்முகன்-கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.
அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான்.
தட்சனின் 27 மகள்களை சந்திரன் மனைவியாக ஏற்றுக் கொண்ட தினமும் இது தான்.
அயோத்தியை ஆண்டு வந்த தசரதனின் புத்திரனாகிய ஸ்ரீ ராமன் சீதை திருமணம் நடைபெற்றதும் இந்த மாதம் தான்.
பழனியும் பங்குனி உத்திரம் விழாவும்:
தமிழ்க் கடவுள் என்று ஒளவையாரால் போற்றி வணங்கப்பட்ட முருகனுக்கு அறுபடை வீடுகள் உண்டு. இந்த அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திர விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். 12 என்ற எண்ணுக்குச் சிறப்பு சேர்க்கும் இந்த நாள், பன்னிரு கையும், பன்னிரு விழியும், பன்னிரு செவியும் கொண்ட வேலவனின் சிறப்பான நாளாகக் கருதப்பட்டு, முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள்தோறும் சிறப்பான விழா கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூன்றாம் படை வீடாகத் திகழும் பழனியில் பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு கொடுமுடிக்குச் சென்று அங்கு பாயும் காவிரி நதியில் தீர்த்தம் எடுத்து வந்து விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. காவிரியைப் பெருமைப்படுத்தும் நாள் இந்த நாள்.
பங்குனி மாதமும் மாரியம்மன் விழாவும்:
பங்குனி மாதம் மாரியம்மன் கோவில்களில் கொடியேற்றி பூசாட்டுத்தல் என்னும் பண்டிகை பதினைந்து நாட்கள் நடைபெறும். சமயபுரம் மற்றும், பண்ணாரி மாரியம்மன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்களும் ஊர்வலமும் நடைபெறும். சேவை புரியும் வண்ணம் மக்களுக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும். வருடம் முழுவதும் மழை பெய்து மக்கள் சுபிட்சம் அடைய அன்னை மாரியம்மனிடம் மக்கள் வேண்டி வழிபடுவார்கள். இந்த கோவில் மட்டுமின்றி இதர பிற மாரியம்மன் கோவில்களிலும். திருவிழாக்கள் நடைபெறும்.
பங்குனியின் பிற விழாக்கள்.:
நமது முன்னோர்கள் வாழ்க்கையே கொண்டாடட்டமாக, உற்சவமாக விழாவாக கொண்டாடினர். அவரது வழி வந்த நாமும் அதனை நம்மால் முடிந்த வரை இன்றும் பின்பற்றுகிறோம். தமிழ் மாதங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விதமான விழாக்களை கொண்டாடுகிறோம். மேலே சொன்ன ஆலய விழாக்கள் மட்டுமின்றி
அந்தந்த இடங்களில் இருக்கும் வழக்கத்திற்கேற்ப சிறிய வகையிலும் நடை பெறும் வழக்கம் உண்டு.
அது போல ராம நவமி விழா பல ஆலயங்களில் இந்த மாதம் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
மேலும் இந்த மாதத்தில் நாம் நமது இல்லங்களிலும் பல விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம்.
காமன் எரிப்பு பண்டிகையாம் ஹோலி பண்டிகையும் வஸோந்தற்சவமும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. கணவனின் நலன் கருதி பெண்கள் நோற்கும் காரடையான் நோன்பும், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதி பண்டிகையும் இந்த மாதத்தில் வரும் பண்டிகைகள் ஆகும்.
நமது உள்ளத்திலும் உடலிலும் உற்சாகம் பெருக உற்சவங்கள் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் நமக்கு பேருதவி புரிகின்றன. ஒற்றுமையாய் நாம் வாழ இந்த நாட்கள் நமக்கு வழி வகுக்கின்றன. நமது முன்னோர்கள் வழி நடத்திச் சென்ற இந்த பாதையில் நாமும் பயணித்து அடுத்த தலைமுறையும் பயன் பெற நாம் உதவுவோம். மேலும் AstroVed.com நடக்கும் பங்குனி உத்திரம் தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணவும்
Leave a Reply