AstroVed Menu
AstroVed
search
search

திருப்பல்லாண்டு பாடல் வரிகள் | Pallandu Pallandu Lyrics In Tamil

dateDecember 8, 2020

பெரியாழ்வார் இயற்றிய திருப்பால்லாண்டு பாடல்:

இந்து மதத்தில் வைணவ நெறியை பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வரும் ஒருவர். இவர் திருவில்லிப்புத்தூரில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் விஷ்ணு சித்தர் என்பதாகும். திருவில்லிப்புத்தூரில் கோயில் கொண்டுள்ள எம்பெருமான் வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களை பறிந்து பூமாலையாக சாற்றுவதை கைங்கர்யமாக கொண்டிருந்தார் பெரியாழ்வார். அதோடு அல்லாமல் ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டளின் வளர்ப்பு தந்தையாகவும் விளங்கினார். ஆண்டாளை திருவரங்கத்தில் உறையும் அரங்கனுக்கு மணம் முடித்து வைத்து கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார். இவர் அரங்கனை வேண்டி பாடல்கள் பாடியுள்ளார்.  இவரது பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் 1 முதல் 12 வரை திருப்பால்லாண்டு பாடல்களாக இடம் பெற்றுள்ளன. அதோடு கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல ஆன்மிகம் தகவல் பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள் 

திருப்பல்லாண்டின் சிறப்பு:

கடவுளுக்கே கண்ணேறு கழிக்க முயன்ற பெரியாழ்வாரின் பக்தி மேன்மையைக் கண்ட, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசைக்கிராமத்தில் ஏழாமவராக வரும் பெரியாரின் பாடல்களை நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதற்பாடலாகத் தொகுத்தனர். மேலும் சாற்றுமறை என்னும் வைணவ தினசரி வழிபாட்டின் தொடக்கம் மற்றும் முடிவின் போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு மற்றும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும் போதும் இன்றளவும் கூட பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே சுவாமியை திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர். இந்த வழக்கமானது தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இராமானுசர் கொள்கைகளை பின்பற்றும் பிறபகுதிகளில் அமைந்துள்ள வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

வல்லபதேவ பாண்டியனின் ஐயம்:

மதுரையை ஆண்ட வல்லப தேப பாண்டிய மன்னனுக்கு மறுமையில் வாழ்க்கை என்பது பற்றி  ஒரு சந்தேகம் எழுந்தது. எந்த மதத்தைப் பின்பற்றினால் மறுமையில் மோட்சம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள அவனுக்கு ஆசை. அதற்கான சரியான பதிலைச் சொல்பவருக்கு பொற்கிழி பரிசு என்றும் அறிவித்தான். அவ்வாறு கிடைக்கும் பொற்கிழி, வழக்கம் போல் தன் கைகளால் வழங்கப்படமாட்டாது என்றும், அது மந்திரத்தால் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் என்றும், யாருடைய வாதம் இறைவனுக்கே ஏற்புடையாகிறதோ, அந்த பொற்கிழி தானாகவே கழன்று, கீழிறங்கி, விளக்கம் சொன்னவர் மடியில் வந்த விழும் என்றும் அறிவித்தான். இதையறிந்த பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளும் வந்து மன்னனுக்கு  தம் மதத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.

பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள்:

வல்லப தேவ பாண்டியனின் ஐயத்தை தீர்த்து வைக்க வேண்டி, பெருமாள் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி அந்த வாதத்தில் கலந்து கொண்டு மன்னனின் ஐயத்தைப் போக்கி பொற்கிழி பெறுமாறு கூறினார். அரங்கனின் ஆணையை ஏற்ற பெரியாழ்வார் மதுரை சென்று வைணவத்தின் பெருமைகளை எடுத்துரைத்து, பரதத்துவம் எனும் மோட்சத்தை அருளவல்லது வைணவமே என்றும் ஐயம் தீர விளக்கினார். அதுவரை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பொற்கிழி, தானாக கழன்று, கீழிறங்கி பெரியாழ்வாரின் மடி மீது விழுந்தது. இதைக் கண்டு மகிழ்ந்த மன்னன் விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரைப் பாராட்டி, ‘பட்டர்பிரான்’ என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கி மகிழ்ந்தான்.

திருப்பல்லாண்டு பாடல் பிறந்த கதை:

வல்லப தேப பாண்டியனின் ஐயத்தை தீர்த்து வைத்து,  சமய வாதத்தில் வென்ற பெரியாழ்வார் மன்னனால் அளிக்கப்பட்ட பட்டத்து யானை மீது அமர்ந்து வரும் பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் தோன்றி கருட வாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு  இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்து விடுமோ என்று அஞ்சி பாடப்பட்டதே திருப்பல்லாண்டு பாடல்.

திருப்பல்லாண்டு பாடல்:

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு (1)

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே (2)

வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே (3)

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே (4)

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே (5)

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே (6)

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (7)

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே (8)

உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (9)

எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே (10)

அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே (11)

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே (12)


banner

Leave a Reply