திருமண சுபமுகூர்த்தத்தை விட சாந்தி முகூர்த்த நேரம் முக்கியமானது ஏன் தெரியுமா?
நல்ல நாடு அமைய வேண்டும் என்றால், நல்ல சமுதாயம் அமைய வேண்டும். நல்ல சமுதாயம் அமைய வேண்டுமென்றால் நல்ல குடும்பங்கள் அமைய வேண்டும். ஏனென்றால் சமுதாயம் என்பதே பல குடும்பங்களின் தொகுப்புதான். ஒருவரது பிறப்பு என்பதை யாராலும் நிர்ணயம் செய்துவிட முடியாது. காரணம் அந்த உயிரின் பிறப்பு சுழற்சியில் என்ன அமைப்பு உள்ளதோ அதன்படியே அந்த உயிர் பிறக்கிறது. ஒருவரது வாழ்க்கையில் அவர்களது முதல் பாதி பெற்றோர், கல்வி என்று அமைந்து விடும். அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிர்ணயிப்பது திருமணம் தான். நல்ல கணவனோ, மனைவியோ அமைந்துவிட்டால் அந்த திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆதலால் தான் திருமணத்திற்கான முகூர்த்தத்தை மிகச் சரியான நேரத்தில் குறிக்க வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.
நல்ல சந்ததி :
திருமணமான ஆணும், பெண்ணும் இணைவது என்பது சாதாரணமானதல்ல. அவர்கள் விட்டுப் போகின்ற வருங்கால சந்ததிகள் இந்த உலகத்தில் நன்றாக வாழ வேண்டும் என்பது மிக முக்கியம். நல்ல பிள்ளைகளை உருவாக்குவதற்கு நல்ல எண்ணங்களை விதைப்பது அவசியம். அந்த நல்ல குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்காக இணையும் நேரமும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. உயிர்கள் இன்றி உலகம் இயங்காது. ஒரு ஆணும், பெண்ணும் தங்களது வாழ்வில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது.
சாந்தி முகூர்த்தம் நடைபெறக் கூடாத நட்சத்திரங்கள்:
வம்ச விருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாந்தி முகூர்த்தத்தை காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்களில் வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மூன்றும் காலற்ற நட்சத்திரங்கள். அதே போல மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றும் உடலற்ற நட்சத்திரங்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இம்மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரம் உள்ள நாட்களில் சாந்திமுகூர்த்தம் குறிக்கக் கூடாது என கூறப்படுகிறது.
சரியான முகூர்த்தம் நேரம் குறிப்பது ஏன்?
திருமணத்திற்கு லக்னம் நிச்சயிக்கும் போது எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு இந்த சாந்தி முகூர்த்த லக்னத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த முகூர்த்தமானது தனிப்பட்ட கணவன் - மனைவி சந்தோசத்துக்காக நிர்ணயிக்கப்படுவது அல்ல. முகூர்த்தமற்ற நேரத்தில் புதுமண தம்பதிகள் இணைந்தால், பிறக்கப் போகிற குழந்தைக்கு செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் என அமைந்துவிட்டால் அந்த குழந்தையின் வாழ்க்கை கஷ்ட காலமாகி போய்விடும். அதோடு மட்டுமல்லாமல் ரத்த வெறி, பாலியல் வன்முறை பிடித்த சைத்தான்களாக பிறந்து சமூகத்திற்கு கேடு செய்யும் அபாயம் நிகழ கூட வாய்ப்புண்டு. இதனால் தான் சாந்தி முகூர்த்தத்திற்கான நேரத்தை கவனமாகக் குறிக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
உத்தராயண காலம்:
‘உத்தர்’ என்றால் வடமொழியில் வடக்கு என்றும், ‘அயனம்’ என்றால் வழி என்றும் பொருளாகிறது. சூரியன் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயண காலம் எனப்படுகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். உத்தரயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதம் வாய்ந்த காலமாக போற்றப்படுகிறது.
சாந்தி முகூர்த்த காலமானது இந்த கால கட்டத்தில் இருப்பது சிறப்பு. அதே போல சேரக்கூடாத கிரகங்கள் சேர்ந்திருக்கக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. சந்திரன், கேது இணைவு, சூரியன் + ராகு + சனி, சனி + செவ்வாய் + குரு உடன் ராகு, கேது, சனி சேர்ந்திருக்கக் கூடாது. கிரகங்களின் சேர்க்கை சரியாக இருந்தால் தான் சாந்தி முகூர்த்தம் சிறப்பாக நடைபெற்று, நல்ல புத்திசாலியான, ஆரோக்கியமான, நல்ல எண்ணங்களையேக் கொண்ட குழந்தைகள் கருவாகி உருவாகும்.
சுபகிரகங்களின் பார்வை அவசியம்:
சாந்தி முகூர்த்தம் நடைபெறும் அன்றைய திதி துவிதியை, திரிதியை, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசியாக இருக்க வேண்டும். சாந்தி முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ள வேளையில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னங்கள் உதயமாகியிருக்க வேண்டும். சுபர்களின் பார்வையும் இருக்க வேண்டும். மேற்படி லக்னத்துக்கு 1,7,8 பாவங்கள் காலியாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
பிரஜோத்பத்தி கடமை:
பூமியில் பிறந்த அனைவருக்குமே தங்களுடைய பித்ருக்கள், அதாவது முன்னோர்களை திருப்திபடுத்த வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உள்ளது. அதுதான் பிரஜோத்பத்தி. அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது. படைக்கும் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவின் அருளாசிகள் இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. வம்சம் விருத்தியடையும் போது தான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் மோட்ச கதிக்கு செல்ல இயலும். இதற்கு தம்பதிகள் இணைவது அவசியம். அதனால் தான் சாந்தி முகூர்த்த நேரத்தை குறிப்பது இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது.
Leave a Reply