நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணத்தையும், செயல்பாடுகளையும் அறியலாம்:
ஒருவரது வாழ்க்கையில் பிறந்த ஜாதகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனனம் முதல் மரணம் வரை ஜாதகமே பேசுகிறது. வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளப் போகும் ஏற்றங்கள், இறக்கங்கள், சுகங்கள், துக்கங்கள், இழப்புகள், பெருமைகள், ஆரோக்கியம் என சகலத்தையும் இந்த ஜாதகத்தின் வாயிலாக முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இந்த ஜாதகத்தை ஆராய்ந்து சொல்வதே ஜோதிடக் கலை. ஜோதிடம் ஒருவரது ஜாதகத்தில் 12 கட்டத்திலும் அமர்கின்ற 9 கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தே பலாபலன்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படும் கிரக பெயர்ச்சி மூலம் ஏற்படும் மாற்றங்களை ஜாதகரின் ராசி, லக்னத்திற்கு ஏற்ப சொல்லப்படுகிறது. உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.
பிரசன்ன ஜோதிடம், திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம், எண் கணிதம், நாடி ஜோதிடம் என பல வழிகளிலும் ஒருவருக்கு ஜோதிடம் சொல்லப்படுகிறது. இது அவரது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், வரக்கூடிய பிரச்னைகளையும், சிக்கல்களையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருப்பதற்கும் சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் நியூமராலஜி என்று சொல்லப்படுகின்ற எண் கணிதம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவரது ஜாதகத்தில் ராசி, லக்னம் எப்படி முக்கியமோ, அதே போன்று எண் கணிதத்தில் ஒருவரது பிறந்த நாள், மற்றும் பிறந்த கிழமை முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒருவரது பிறந்த கிழமையை அடிப்படையாக வைத்து அவரது குணங்கள் எப்படி இருக்கும், செயல்பாடுகள் எப்படி அமையும் என்பதையும் எண் கணிதத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் பற்றி இக்கட்டுரையில் நாம் அறிந்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக் கிழமை:
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சூரியனின் அருளைப் பெற்றவர்கள். உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சொன்னதை செய்பவர்களாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் நேர்த்தியாக செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். பிரகாசமான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள். தன்னால் முடியாது என்ற தெரிந்தால் ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். எந்த நிர்வாகத்தையும் நடத்தக்கூடிய அறிவாற்றலைப் பெற்றிருப்பார்கள். தனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்.
திங்கட்கிழமை:
சந்திரனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் சாந்தமும், அமைதியும் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரையும் கவரக்கூடிய விதத்தில் அழகாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை எந்த குறுக்கீடுகள் வந்தாலும் செய்து முடிக்காமல் விடமாட்டார்கள். எதிரியைக் கூட நண்பனாக கருதும் குணம் கொண்டவர்கள். நல்ல கற்பனை வளமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சொந்த தொழில் நன்றாக கைகொடுக்கும்.
செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் போர்க்குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். கடின உழைப்புக்கு சொந்தக்காரர்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும் விடா முயற்சியுடன் எடுத்த காரியத்தை முடிப்பார்கள். தனது மனதில் ஒருவர் நல்லவர் என நினைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பார்கள். தான் சொல்வதைத்தான் வேத வாக்கு என வாதிடுபவர்கள். எதிலும் நியாயம், தர்மத்துடன் நடந்து கொள்வார்கள்.
புதன்கிழமை:
புதன்கிழமை பிறந்தவர்கள் கல்வியையும், செல்வத்தையும் தரக்கூடிய புதன் பகவானின் அருளாசிகளைப் பெற்றவர்களாக இருப்பார்கள். உண்மையை உயிர்மூச்சாக கொண்டு செயல்படுவார்கள். சிறந்த கல்வி ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். ஜோதிடம், துப்பறிதல், இயந்திரத் துறையில் சிறந்து விளங்குவார்கள். பல திறமைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் மதிநுட்பத்தைப் பெற்றிருப்பார்கள்.
வியாழக்கிழமை:
குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் நீதி, நேர்மையையும் இரு கண்களாக பாவித்து நடப்பார்கள். நேர்மையே இவர்களது சொத்தாக இருக்கும். சட்டென்று உணர்ச்சிவசப்படுபவர்களாக இருந்தாலும் பரந்த மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்கள். இதனால் சில சமயங்களில் அருகிலிருப்பவர்களின் வருத்தத்தை சம்பாதிக்க வேண்டி வரும். எந்த துறையாக இருந்தாலும் அதில் தனித்து ஜொலிப்பார்கள்.
வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் சுக்கிர பகவானின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல தோற்றத்துடன் காணப்படுவார்கள். தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். எந்த துறையிலும் முழு மனதுடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தனது துணையிடமிருந்து அளவற்ற அன்பையும், ஆதரவையும் பெறுவார்கள். பேச்சாற்றல்மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த வேலையையும் தானே எளிதாக முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
சனிக்கிழமை:
சனிக்கிழமை பிறந்தவர்கள் நீதிமானான சனி பகவானின் அருளைப் பெற்றவர்களாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். நல்ல புத்திசாலிகளாக இருப்பார்கள். எவரையும் எளிதில் கவரக்கூடியவர்களாக இருப்பவர்கள். பெரியவர்களிடம் மரியாதையோடு நடந்து கொள்வார்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்கள். தன்னம்பிக்கைமிக்கவர்களாக இருப்பார்கள்.
Leave a Reply