சுப்பிரமண்ய புஜங்கம்
புஜங்கம்’ என்றால் பாம்பு என்று பொருள். மேலும் இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இந்தப் பாடலைப் பாடும் போது மனமானது லயிக்கும். பாம்பு வளைந்து வளைந்து செல்வது போல இந்தப் பாடலின் வார்த்தைகளை நாம் பாடப் பாட சொற்கோவைகள் ஏற்ற இறக்கத்துடன் வருவது பாம்பின் வளைவு போல இருப்பதால் இந்தப் பாடலுக்கு புஜங்கம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தப் பாடல் சுப்பிரமணியன் எனப்படும் முருகரைக் குறித்துப் பாடப்படும் பாடல் ஆதலால் சுப்பிரமண்ய புஜங்கம் என்று கூறப்படுகிறது.
ஒரு தடவை ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் காச நோயால் அவதிப்பட்டார். சிவனின் திருவருளை நாடி பிரார்த்தனை மேற்கொண்டார். ஒரு நாள் இரவு சிவ பெருமான் இவரது கனவில் தோன்றி ‘ஜயந்தி புரம்’ எனும் திருத்தலத்தில் சூரபத்மனை வென்றழித்துவிட்டு, ‘ஜய வினப வடிவமாய்’ விளங்கும் என் குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித் திருநீறும் அளித்தருளினார். மறு நாள் ஆதிசங்கரர் ஜெயந்திபுரம் சென்றார்.
எதிரிகளால் ஏற்படும் பிரச்சைகளை தீர முருகர் ஹோமம் செய்யவும்
தற்போதைய திருச்செந்தூர் நகரமே ஜெயந்தி புரம் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. அங்கு ஆதிசேஷன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே ‘பாம்பு’ எனும் பொருளைத் தரும் ‘புஜங்கம்’ என்னும் பெயரைக் கொண்ட புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத் திருச்செந்தில் நாதனின் திருவடிக்குச் சூட்டினார். இது தான் ‘திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்’ தோன்றிய வரலாறாகும்.
இந்தப் பாடலின் ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு பலனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும். இந்தப் பாடல் தீய கர்ம வினைகள் மற்றும் திருஷ்டி தோஷங்களை நீக்கவல்லது. பிறவிப் பிணி தீர்க்கும் இந்தப் பாடலைப் பாடுவது அல்லது கேட்பதன் மூலம் வாழ்வில் மேன்மையும் முக்தியும் கிட்டும்.
சுப்ரமண்ய புஜங்கம்
1.விநாயகர் வணக்கம் : தீராத இடர் தீர்க்கும் பாடல்
எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான்
இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான்
பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன்
பொன்றாத திருவாள னருள்பேணு வோமே .....1
என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும்
சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன்
நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும்
உதவும் மங்கள மூர்த்தமதே.
2. அவையடக்கம் : புலமை அளிக்கும் பாடல்
சொல்லேது பொருளேது கவியேது வசனந்
துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே………2
சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொளி
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.
3. செந்தில் நாயகன் வணக்கம் : திருவடி தரிசனம் கிட்டும் பாடல்
மயிலூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
மனந்தன் வசங்கொள் மகானுள்ள முறைவோன்
பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்
பனவர்க்கு மெய்த்தேவை நினைவின்கண் வைத்தேன். ………..3
மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து
மனதை கவரும் உடலான்
பயில்வோர்கள் உள்ளக் குகைக் ஆகாயில் தங்கி
பார்ப்பவர் தெய்வ மானான்
உயிராகும் மறையின் பொருளாகி நின்று
உலகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக்
கந்தன் பதம் பணிகுவாம்.
4. பிறவிப் பிணி தீரும்
என் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை
யினை யேறி னாரென்று நிலமேல் விளக்கி
துன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்
துங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம். …………..4
என்றன் சந்நிதி யடையும் மனிதர்
எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை
எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச்
செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்
தூயன் பாதம் துதிக்கின்றேன்.
5. மேன்மை, உயர்ச்சி : போகாத துன்பம் போக்கும் பாடல்
திரைபொன்று மாபோலும் வினைபொன்று மின்றே
திருமுன்பு வம்மின்களென நின்ற வன்போல்
திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்திற்
சேயோனை யிதயத்தி லேவைத் துளேனே. …5
கடலில் தோன்றும் அலையும் அழிந்து
காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்
தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய
பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்
ஏற்றித் தியானம் செய்கின்றேன்.
6. மேன்மை : கயிலை தரிசன பலன் கிட்டும் பாடல்
இதிலேறி னோர்கைலை யதிலேறி னோரே
என்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்
மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே. .... 6
என்றன் இருக்கை யறிந்தே யெவரும்
இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும்
இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்
கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்
திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.
7. கயிலாய கதி : கரையாத பாவம் கரைக்கும் பாடல்
பெருவேலை யோரத்தி லேபாவ நீக்கும்
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கொ ருயிர்செம்பொ னடிபற்று வோமே. …….7
கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே
பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர்
கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய்
குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான்
அவனைச் சரண மடைகின்றேன்.
8. முருகன் திருமேனிச் சிறப்பு :மன அமைதி அளிக்கும் பாடல் பொற்கோயி லிற்பொன் மணிக்கட்டி லேறிப்
பொலிகின்ற ஒருகோடி ரவிமங்க வீசும்
விற்கோல நற்செந்தி லிற்கார்த்தி கேயன்
விபுதேச னைச்சிந்தை விழைகின்ற தாலோ. …………..8
மன்னும் இளமை யாயிரம் ஆதவர்
மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்
சித்தம் சாந்தி யுறும்.
9. திருவடிச் சிறப்பு : புகலிடம் கிட்டும் பாடல்
அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே
அமுதம் பொழிந்தே பிறப்பென்ற கோடை
வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா
மரைமேவு மளிநெஞ்ச மலைவாயின் முருகே. ……….9
மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.
10. திரு அரைச் சிறப்பு : அக இருள் நீக்கும் பாடல்
இலகும்பொன் உடைமீது கணகண்க னென்றே
இசைகிண்கி ணீகச்சை யொடுபட்டை யம்பொன்
அலகில்வி லதுவீசு செந்தூரி லம்மான்
அரைநீடு மழகென்றன் அகமேவி யுனுமே. ………..10
பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை
பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க
மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித்
தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.
11. திருமார்பின் சிறப்பு : ஆபத்து விலக்கும் பாடல்
குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன். …………11
வேடவேந்தன் திருமகள் வள்ளி
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.
12. திருக் கைகளின் சிறப்பு : ப்ரம்ம ஞானம் கிட்டும் பாடல்
அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே
ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே
துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை
துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே. ……..12
வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும்
கந்தா என்னைக் காத்திடுக.
13. திருமுகச் சிறப்பு : தாபங்கள் நீக்கும் பாடல்
பனியென்று முளவாயோர் பங்கம் படாமல்
பரிபூர்ண வொளியோடு பலதிக்கு நிலவை
நனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்
நளிர் செந்தி லோனாறு முகமொக்கு மாலோ. ……..13
சந்திரர் அறுவர் வான் வெளியில்
சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும்
தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு
என்றும் உதயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும், நின்
கருணை முகத்திற் கெதிராமோ.
14. அமுத லாபம் ஏற்படும்
சிவன் மைந்த நகையென்ற அனமென்று மேவித்
திகழுங் கடைக்கண்களெனும் வண்டுலாவித்
தவவின்சொ லமுதூறு கொவ்வைச்செ விதழ்சேர்
சலசங்க ளெனுமாறு முகமென்று காண்பேன். ………..14
அன்னம் அசைதல் போல் நின் புன்னகை
அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச்
சிவந்த உதடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து
பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கள் ஆறும் தாமரை
நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.
15. திருக்கண்களின் சிறப்பு : கிருபா கடக்ஷம் கிட்டும் பாடல்
குறைவென்கொ லோசெந்தி லாய்கா தளாவிக்
குறையாத அருள்வீசு விழிபன் னிரண்டில்
இறையேயொர் விழியின் கடைப்பார்வை தொழுமிவ்
வெளிநாயி னேன்மீதி லொருபோது விழுமேல். …………….15
விண்ணிலும் விரிந்த கருணை யதால்
வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும்
படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய
விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால்
ஏது குறைதாந் உனக்கெய்தும்.
16. திருமுடிச் சிறப்பு :இஷ்டசித்தி ஏற்படும் பாடல்
எனதங்க நீமைந்த வாழ்கென்று மோந்தே
ஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்
நினதிங்கள் முகமாறு மறவாது பணிவேன்
நிலைநின்ற செந்தூரில் வெளிநின்ற தேவே. ………16
மறைகள் ஆறு முறை யோதி
வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உடலில் இருந்தே பின்
எழுந்த கந்தா, முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள்
திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.
17. வேண்டுகோள் : சத்ருபயம் போகும்
வரவேணு மடியேன் முனெசெந்தி னாதன்
மணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்
பிரகாச மிகமாடை யுடையோடு கையிற்
பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச. …………..17
இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ
நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உயர்ந்த நின் குண்டலங்கள்
வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா,
செந்தில் தலைவா, வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி
வருக என்றன் கண்முன்னே.
18. தோத்திரங்கள் :ஆனந்தம் தரும் பாடல்
குமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
குதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்
டமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்
அழகான மழமேனி மறவாது நினைவேன். ……18
வருக குமரா, அரு கெனவே
மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே
பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே, பரமன் மகிழ்ந் தணைக்கும்
முத்தே, இளமை வடிவுடைய
ஒரு சேவகனே, கந்தா, நின்
உபய மலர்த்தாள் தொழுகின்றேன்.
19. கர்மவினை தீர்க்கும் பாடல்
குமாரா சிவன்சேய் குறக்கன்னி நாதா
குகாகந்த சேனாப தீசத்தி பாணீ
எமார்வ ப்ரபோ தாரகாரீ மயூரா
இனாநீவு வாய்செந்தி லாயஞ்ச லென்னே. ...... 19
குமரா, பரமன் மகிழ் பாலா,
குகனே, கந்தா, சேனாபதியே,
சமரில் சக்தி வேல் கரத்தில்
தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா, எம்
குறைகள் தீர்க்கும் வேலவனே,
அமரில் தாரகன் தனை யழித்தாய்
அடியன் என்னைக் காத்திடுக.
20. திவ்ய தரிசனம் கிட்டும் பாடல்
ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
அறிவின்றி யுளமஞ்சி யுயிர்மங்குபோதே
நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
நினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே. …………..20
தயவே காட்டும் தன்மை யனே
தங்கக் குகையில் வாழ்பவனே,
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப்
பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுகா, நீ தோன்றுகவே.
21. எமபயம் தீரும் பாடல்
யமதூதர் சுடுவெட்டு பிளவென் றதட்டி
எனைவெஞ் சினத்தோ டொறுக்கென்று வந்தால்
நமதன்ப அஞ்சே லெனச்சத்தி யேந்தி
நவிரத்தின் மிசைசெந்தி லாய்வந்து காவே. ………….21
காலப் படர்கள் சினம்கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன்
உயிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து
பயமேன் என்னத் தோன்றுகவே.
22. அபயம் கிட்டும் பாடல்
உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே. …….22
கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.
23. கவலை தீர்க்கும் பாடல்
அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
மண்டும் பலஞ்செற்ற வடிவேல அலைவாய்
மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே. …………..23
அண்ட மனைத்தும் வென் நங்கே
ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை
மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ
தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும்
ஒருவனக் கொல்லுத லாகாதோ?
24. அடைக்கலம் :மனநோய் போக்கும் பாடல்
அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்
அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
மிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்
மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே………………24
துன்பச் சுமையால் தவிக்கிறேன்
சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்
கருளும் கருணைப் பெருவாழ்வே
உன்னை நாடித் தொழு வதால்
ஊமை, நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும்
நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.
25. இலை விபூதி மகிமை : பிணிகள் போக்கும் பாடல்
கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
காசங் கயம்குட்ட முதலாய நோயும்
விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே. ………………25
கொடிய பிணிகள் அபஸ் மாரம்
குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம்
வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள்
குமரா உன்நன் திருநீறு
மடித்த இலையை பார்த்த வுடன்
மாயம் போலப் பறந்திடுமே.
26. பிரார்த்தனை :சரணாகதி தரும் பாடல்
செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க. …………..26
கண்கள் முருகன் தனைக் காணக்
காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும்
பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உடலும் குற்றேவல்
எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம்
கலந்து மகிழ்ந்து குலவட்டும்.
27. வரம் தரும் வள்ளல்
முருகனே ஏழை பங்கன்
பிறதேவர் முனிவர்க்கு மிகுபத்தி யோர்க்கும்
பிரியங்க டருவார்கள் புலையர்க்கு மருள்வார்
பிறர்யாவர் மணிவாரி யலை வீசு செந்திற்
பிரானன்றி யறியேன் சொனேன் நம்பு வீரே. ……….27
முனிவர் பக்தர் மனிதர்கட்கே
முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள்
தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும்
மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று
கருணை வடிவைக் காண்கிலனே.
28. வழிவழி அடிமையாக வேண்டுதல் :குடும்பம் இன்புறும் பாடல்
மனைமக்கள் உறவாள ரடியார்கள் தோழர்
மற்றுள்ள பேர் என்றன் மனைவாழும் யாரும்
உனையன்பு கொடுபூசை புரிவோர்கள் தொழுவோர்
உனையோது வோராக அருள்செந்தி லானே. ………28
மக்கள் மனைவி சுற்றம் பசு
மற்ற உறவினர் அனை வோரும்
இக்கணத் தென்னுடன் வசித்திடு வோர்
யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ்
குமரா எமக்குக் கதிநீயே.
29. விஷம், நோய் போக்கும் பாடல்
கொடிதென்ற மிருகங்கள் பறவைக் குலங்கள்
கொடுநஞ்ச வகையென்னை மெலிவிக்க வந்தால்
வடிவிக்ர மச்சத்தி யாலே யழித்தே
வாழ்விக்கவே செந்தில் வாழ்கந்த வேளே. …………..29
கொடிய மிருகம் கடும் பறவை
கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உடலில் தோன்றி வுடன்
கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உன்றன் வேல் கொண்டு
நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரெளஞ்ச கிரி பிளந்த
முருகா வருக, முன் வருக.
30. பிழை பொறுக்க வேண்டுதல் : குற்றம் குறை தீர்க்கும் பாடல்
மகார் செய்த பிழைபெற்ற பேர் மன்னி யாரோ
மகனல்ல னோயான் விண் மண் பெற்றதந்தாய்
மகாதேவ செந்தூரில் வாழ்கந்த வேளே
மன்னிக்க யான் செய்த புன்மைக் குழாமே. ………….30
பெற்ற குழந்தை பிழை பொறுக்கும்
பெற்றோர் உலகில் உண்டன்றோ
உற்ற தேவர் தம் தலைவா,
ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ
நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக்
குறை யில்லாமல் காத்தருள்க.
31. போற்றி: ஆனந்தப் பெருமிதம்
மயில்போற்றி வேல்போற்றி மறியாடு போற்றி
வன்காற் படைச்சேவ லும்போற்றி நந்தூர்
உயர்வெண் டிரைச்சிந்து வும்போற்றி முருகோன்
உபயப் பதம்போற்றி யுரைசெந்தில் போற்றி. ...... 31
இனிமை காட்டும் மயிலுக்கும்
இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும்
தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே
இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும்
கந்தா வணக்கம் வணக்கமதே.
32. வெற்றி கூறுவோம்
ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்
திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம்
முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம் ………….32
33. வாழ்த்து
எந்த மனிதன் பக்தி யுடன்
எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்……….33
Leave a Reply