கார்த்திகை சோமவாரம்:
சிவபெருமான் குறித்து மேற்கொள்ளப்படும் விரதங்களுள் சோம வார விரதம் முக்கியமானதாகும். பொதுவாகவே திங்கட்கிழமைகள் சிவனை வணகுவதற்கு உகந்த நாளாகும். அதிலும் கார்த்திகை சோமவாரம் சிவபெருமானுக்கு மிகவும் ஏற்ற நாள் ஆகும். காரத்திகை சோமவாரத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சோமன் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் தட்சனால் சபிக்கப்பட்ட போது, தனக்கு நிவர்த்தி வேண்டும் என்று சந்திரன் சிவனை நோக்கி வணங்கி வழிபட்டார். சந்திரனின் மணிவியான ரோகிணியும் தன் கணவன் நலன் கருதி சிவபெருமானை வழிபட்டாள். சிவபெருமானும் சந்திரனை க்ஷய ரோகத்திலிருந்து காத்து அருளி சந்திரனுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பிறை நிலவாய் தன் தலையில் சூடிக் கொண்டார். சந்திரசேகர் என்ற பெயரையும் கொண்டார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணியும் அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்த காரணத்தால் அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த கார்த்திகை சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது..
விரதம் அனுஷ்டிக்கும் முறை :
சோமவார விரத நாளில் காலையில் எழுந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்து கொண்டு விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும். இறைவனுக்கு பூஜைகள் மற்றும் அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்யும் போது இறைவனின் திரு நாமங்களை வாயால் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். சஹஸ்ர நாமம் என்று சொல்லப்படும் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தல் வேண்டும். இவை யாவும் எளிய செயல்களே ஆகும். சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.
சோம வார விரதமும் ஆலய வழிபாடும் :
சோம வாரம் சிவனுக்கு உகந்த நாள் என்பதால் ஆலயங்களில் சிவனுக்கு விசேக்ஷ பூஜைகள் நடைபெறும். அதிலும் கார்த்திகை சோமவாரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் என்பதால் சிவனுக்கு விசேக்ஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த நாட்களில் சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்' நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர். எனவே திங்கள்கிழமையில் அருகில் இருக்கும் சிவத்தலங்களில், சிவனாரையும் உமையாளையும் வணங்கி, சோமவார தினத்தில் இறைவனின் அருளைப் பெறுவோம். கார்த்திகை சோமவார தினங்களில் பூஜை அபிஷேகம் போன்ற வைபவங்களை தரிசிப்பதுடன், சிவபெருமானுக்கு வில்வம் மற்றும் பூக்களை சூட்டி, வணங்குவதன் மூலம் தம்பதிக்குள் ஒற்றுமை சிறக்கும். குழந்தைப் பேறு மற்றும் செல்வ வளம், நீளாயுள் கிடைக்கும். மனதில் அமைதி பிறக்கும். மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும். மேலும் கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும்.
சோமவார விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை :
• சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவஸ்தலங்களை தரிசிப்பது நல்லது
• சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது
• சங்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது
• சிவனுக்கு பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது
• அன்னதனாம் நிகழ்சிகளில் பங்கு கொள்வது நன்று
• ஆலயத்தில் சந்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது.
சோம வார விரத பலன்கள் :
• திருமணம் கை கூடும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும்
• கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.
• திருமண உறவில் இருந்துவரும் கசப்புகள் நீங்கும்.
• பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.
• மனதில் அமைதி குடிகொள்ளும்
• குழந்தை பாக்கியம் கிட்டும். வம்சம் தழைக்கும்
• பாவங்கள் யாவும் அகலும்
• கல்வி மற்றும் செல்வா வளங்கள் கிட்டும்
• நம்பிக்கை பிறக்கும். பயன்கள் அகலும்
• ஆயுள் விருத்தி அடையும்
சோமவாரம் முழுவதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை இடைவிடாது ஜெபித்துக் கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
Leave a Reply