சந்திரன் ஒரு அறிமுகம்:
ஒளிக் கோளாகத் நமது கண்களுக்கு புலப்படும் சந்திரனை ஜோதிடத்தில் ஒரு கிரகமாகவே கருதுகின்றனர். மேலும் சந்திரனை மனோகாரகன் என்று அழைக்கின்றனர். அதாவது சந்திரன் நமது மனதிற்கு காரகமாக அமைக்கின்றார். சந்திரன் தேய்வதும் வளர்வதும் இயல்பு என்று நமக்குத் தெரியும். முழு நிலவாக சந்திரன் விளங்கும் நாளை பௌர்ணமி என்றும், வானில் நிலவு தோன்றாமல் இருக்கும் நாள் அமாவாசை என்றும் கூறப்படுகின்றது. பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடலில் மாற்றங்கள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து நிரூபித்தும் உள்ளனர். அது போல அந்த நாட்களில் சந்திரன் நம் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றார். அதாவது சந்திரனின் ஒளிக் கற்றைகள் நம் உடலில் விழும் போது அது நம் மனதில் சில வினைகளைப் புரிந்து நமது மனோ நிலையை பாதிக்கின்றது. இந்த பாதிப்பு நேர்மறை அல்லது எதிர்மறை என இரண்டில் ஒன்றாக அமைவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சந்திரன் ஒரு சாபத்தின் காரணமாகத் தான் தேய்ந்துவளரும் நிலையைப் பெற்றது என்லாம். அதற்கு முன்பு வரை சந்திரன் முழு நிலவாக, ஜொலிக்கும் நிலவாக அழகுடன் காணப்பட்டது.
சந்திரனின் சாபம் நீங்கப் பெறுதல் :
சூரியனுக்கு அடுத்த படியாக புகழ் வாய்ந்த நட்சத்திரமாக சந்திரன் காணப்பட்டது. தானும் மங்காத ஒளி கொண்டு, தனது ஒளிக்கற்றைகளை வீசி, உலகுக்கு ஒளி கொடுக்கும் சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தன்னுடைய 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். ஆனால் சந்திரன், தனது 27 மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
தனது பெண்களின் வருத்தத்தை போக்க நினைத்த தட்சன், சந்திரனை அழைத்து, ‘உனது மனைவியர் அனைவரிடமும் நீ அன்பாக இரு’ என்று கூறினார். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்து விட்டார்.
தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
சந்திரனின் சாபம் போக்கிய கார்த்திகை சோமவாரம்:
சிவபெருமான், சந்திரனின் சாபத்தைக் குறைத்து அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் பிறை சந்திரனாக தன்னுடைய சடைமுடியில் வைத்துக் கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அதனால் தான் கார்த்திகை சோமவாரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
கார்த்திகை சோமவார விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை
• சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவஸ்தலங்களை தரிசிப்பது நல்லது
• சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது
• சங்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது
• சிவனுக்கு பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது
• அன்னதனாம் நிகழ்சிகளில் பங்கு கொள்வது நன்று
• ஆலயத்தில் சந்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது.
கார்த்திகை சோம வார விரத பலன்கள் :
• திருமணம் கை கூடும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும்
• கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.
• திருமண உறவில் இருந்துவரும் கசப்புகள் நீங்கும்.
• பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.
• மனதில் அமைதி குடிகொள்ளும்
• குழந்தை பாக்கியம் கிட்டும். வம்சம் தழைக்கும்
• பாவங்கள் யாவும் அகலும்
• கல்வி மற்றும் செல்வா வளங்கள் கிட்டும்
• நம்பிக்கை பிறக்கும். பயன்கள் அகலும்
• ஆயுள் விருத்தி அடையும்
Leave a Reply