சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் ஏற்படும் நன்மைகள்!
நமது அன்றாடப் பணிகளில் குளியல் முக்கியத்துவம் பெறுகிறது. உடலில் உள்ள வெப்பத்தை குளிர்விப்பதால் அதற்கு குளியல் என்ற பெயர் வந்தது. உதாரணமாக ஒரு இயந்திரம் இயங்குகிறது என்றாலே அது எளிதில் வெப்பமடைவது இயல்பு. அது போல தான் மனித உடல் இயங்கிக் கொண்டிருக்கும் போது உடலில் வெப்பம் உண்டாகும். இந்த உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்வதற்காகவே தினமும் காலையில் குளிக்க வேண்டும். அவ்வாறு வாரம் இரண்டு முறை ஆண்களும், வாரம் ஒரு முறை பெண்களும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். ஆண்கள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமையிலும், பெண்கள் வெள்ளிக்கிழமையிலும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.
ஆயுர் வேதம் கூறும் இரண்டு:
நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்திற்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்கிறது ஆயுர்வேதம். நாளுக்கு இரண்டு என்பது ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும் என்று பொருள். வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது. மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறை தான் மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். வருடத்திற்கு இரண்டு என்பது வருடம் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.
சனி நீராடு:
ஔவையார் இயற்றிய ஆத்திச்சூடியில் சனி நீராடு என குறிப்பிடுகிறார். நாள்தோறும் குளிக்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒரு நாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதே இப்பாடலுக்கு கூறப்படும் பெருவாரியான கருத்தாக உள்ளது.
சரி அது ஏன் நல்லெண்ணெய்யை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது? எல்லாவிதமான எண்ணெய்களுக்கும் சனி பகவான் தான் காரகன் ஆவார். என்றாலும் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் தான் சனிக்கு உகந்த எண்ணெயாக கருதப்படுகிறது. உடல் கட்டு, எலும்பிற்கு காரகன் சனி பகவான். எனவே உடல் கட்டுக்கோப்பாக இருக்க நல்லெண்ணெய் குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.
புதன் மற்றும் சனிக்கிழமை ஏன் நீராட வேண்டும்?
வாரத்திற்கு ஏழு நாட்கள் இருக்கும் போது, குறிப்பிட்டு ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமையும், பெண்களுக்கு வெள்ளிக்கிழமையும் என்று ஏன் பரிந்துரைக்கப்படுகிறது? சனி பகவானும், புதன் பகவானும் வாத கிரகமாவர். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் பகவான் கபம் மற்றும் வாத கிரகமாவார். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணெய் மசாஜ் மற்றும் குளியல் சிறந்தது என்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனீஸ்வர பகவானுக்கு புதனும், சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் இவ்வாறு கூறப்படுகிறது.
நல்லெண்ணெய் குளியலால் ஏற்படும் நன்மைகள்:
• சனி தோஷங்கள் விலகும்.
• சனியினால் ஏற்படும் வாதம் மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும்.
• புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.
• சுக்கிரனின் காரகமான முடி கொட்டுதல் நின்று நன்றாக வளரும்.
• சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் பலன்கள்:
முன்பெல்லாம் வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக எண்ணெய் குளியல் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இன்று அது அரிதாகிவிட்டது. தீபாவளி அன்று மட்டும் தான் எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில் கூட சாஸ்திரங்கள் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து நீராடினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.
- திங்கட்கிழமை புத்துணர்ச்சி அளிக்கும்.
- செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவை நீக்கும்.
- புதன்கிழமை செல்வத்தை பெருக்கும்.
- வியாழக்கிழமை உடல்நலத்தைப் பாதுகாக்கும்.
- வெள்ளிக்கிழமை செலவுகளைக் குறைக்கும்.
- சனிக்கிழமை விரும்பியவற்றை அடையலாம்.
ஓய்வு அவசியம்:
சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம். நல்லெண்ணெய் குளியல் செய்யும் நாளில் அசைவம், தயிர்சாதம் சாப்பிடக் கூடாது. உறங்கவும் கூடாது. ஏனென்றால் எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு நமது உடலில் உள்ள வெப்பம் கண்கள் வழியாக வெளியேறும். அந்த சமயம் தூங்கினால் அது உடல்நலத்திற்கு தீங்கை விளைவிக்கும். அன்றைய உணவில் மிளகு ரசம் சேர்த்துக் கொண்டால் நலம் பயக்கும்.
எப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது?
சஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தி, அஷ்டமி, பிரதமை, பௌர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளிலும், உத்தரம், கேட்டை, திருவோணம், திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களிலும் எண்ணெய் குளியல் செய்யக் கூடாது. இருந்த போதும் அந்த நாட்களில் குளியல் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என்கிறது சாஸ்திரம்.
பொதுவாக அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும், மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply