Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

விஜயதசமி சிறப்புகள்

October 23, 2020 | Total Views : 1,027
Zoom In Zoom Out Print

விஜயதசமி என்றால் வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்கா தேவி மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போர் செய்து, ஒன்பதாம் நாள் நவமியில் மகிஷாசூரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை விஜயதசமியாக கொண்டாடினார்கள்.

கல்விக்குரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்குரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவதே நவராத்திரி பண்டிகை. அன்னை ஆதிபராசக்தியை வெவ்வேறு வடிவங்களில் ஒன்பது நாட்களும் வழிபாடு செய்து,  10ம் நாள் வெற்றி மங்கையாக, வீரலட்சுமியாக ஆராதிக்கப்படுகிறாள். அந்நாளே விஜய தசமி என்பதாகும்.

பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்று தான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாகக் கொண்டாடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். 

மஹிசாசூரன் வதம்

பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வந்தான் மஹிசாசூரன் எனும் அசுரன். அவனது தவத்தை மெச்சிய பிரம்மா அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மஹிசாசூரன் சாகாவரம் வேண்டும் என்றும், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒரு பெண்ணால் தான் நேர வேண்டும் என வேண்டினான். பிரம்மாவும் அவ்வரத்தையே அவனுக்கு வழங்கினார். வரம் கிடைத்ததும் மஹிசாசூரன் தனது வேலையை காட்ட ஆரம்பித்தான். தேவர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். துன்பம் தாள முடியாமல் அவர்கள் அன்னை ஆதிபராசக்தியை சரணடைந்து தங்களை காப்பாற்ற வேண்டினார்கள். அன்னை ஆதிபராசக்தியும் மஹிசாசூரனை அழிப்பதற்காக துர்கா தேவியாக உக்கிர அவதாரம் எடுத்தாள். கடுமையான போர் நடைபெற்றது.  ஒன்பது நாட்கள் நடைபெற்ற போரில், ஒன்பதாவது நாள் மஹிசாசூரனை தனது சூலத்தால் வதம் செய்தாள் துர்கா தேவி. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும், சக்தியை போற்றும் விதமாகவும் 10வது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.

ராமாயணத்தில் விஜயதசமி

இராவணன் சீதையின் அழகில் மயங்கி கவர்ந்து சென்று சிறை வைத்தான். இதனையறிந்த ராமர் சீதையைத் தேடி கானகம் வந்தார். போரில் வெற்றி பெறுவதற்காக சண்டி ஹோமம் செய்து அன்னை துர்கா தேவியின் அருளைப் பெற்றார். அதன்படியே இராவணனை வதம் செய்து போரில் வெற்றி பெற்றார். இந்த நாளையே விஜயதசமியாக கொண்டாடப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

காமம், கோபம், தவறான வழி, பேராசை, கர்வம், பொறாமை, மன கட்டுப்பாடின்மை, ஞானமின்மை, மன உறுதியின்மை, அகங்காரம் ஆகிய இந்த தீய குணங்களே ராவணனின் அம்சமாக கருதப்படுகிறது. ராமபிரான் இராவணனை வதம் செய்து இந்த பத்து தீமைகளையும் அழித்தார். இதன் மூலம் துர்கா தேவியை மனமுருக பிரார்த்தனை செய்து எந்த செயலையும் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என அறியப்படுகிறது.

மகாபாரதத்தில் விஜயதசமி

மகாபாரதத்தில் சூதாட்டத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலத்தையும் கௌரவர்களிடம் இழந்த பாண்டவர்கள், 12 ஆண்டு வனவாசம், 1 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும், தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும்  பெற்றனர். இந்த நாளும் விஜயதசமியாக கொண்டாடப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

ஜெயம் தரும் விஜயதசமி

கல்வி, கலைகள், புதிய தொழில்கள், புதிய பயிற்சிகள், புதிய முயற்சிகள் என எதையும் இந்த விஜயதசமி நாளில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என கூறப்படுகிறது. குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பதற்கும், கலைகளில் தேர்ச்சி பெற பயிற்சி மையங்களிலும் விஜயதசமி அன்று சேர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நமது மக்கள். ஏனெனில் அன்றைய தினம் ஞானத்தின் தெய்வமான அன்னை சரஸ்வதியின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

மைசூர் தசரா திருவிழா

உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின் போது மைசூர் அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டம் தூரம் உள்ள மண்டபம் வரை யானைகள் ஊர்வலம் (ஜம்போ சவாரி)  நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்றது. 

குலசை தசரா விழா

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.  இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். மேலும் பலன்கள் மற்றும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள

banner

Leave a Reply

Submit Comment