ஆறுமுகனும் எண் ஆறும்:
சிவன் மற்றும் பார்வதியின் மகனான முருகன், சுப்பிரமணியர், கார்த்திகேயன், ஸ்கந்தன், தேவசேனாதிபதி, ஷண்முகா, சிக்கல் வாஹனா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். சங்க காலம் தொட்டே தமிழகத்தில் முருக வழிபாடு இருந்துள்ளது. இதனால் முருகனை தமிழ்க்கடவுள் என போற்றி மகிழ்கின்றனர் தமிழர்கள். சூரனை வதம் செய்ய வேண்டி, சிவபெருமானின் ஆறு முகங்களில் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிப்பட்டு அவதரித்தவர் இந்த ஆறுமுகப்பெருமான். ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாற, ஆறு கார்த்திகைப் பெண்கள் முருகனை பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அன்னை பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் அணைத்துக் கொண்டாள். உடனே ஆறு குழந்தைகளும் ஒரே உடலாகி ஆறு முகங்கள் கொண்டு, பன்னிரெண்டு கரங்களுடன் ஒரே வடிவமாகினர். இப்படி முருகப்பெருமானுக்கும், ஆறாம் எண்ணுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அது என்னவென்று இக்கட்டுரையில் காண்போம். ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
ஆறுமுகம் பெயர்க் காரணம்:
சமயங்களில் ஆறு, கோசங்களில் ஆறு, ஆதார கமலங்கள் ஆறு, சாஸ்திரங்கள் ஆறு, நான்கு வேதங்களும், ராமாயணமும், மகாபாரதமும் சேர்ந்து ஆறு, ஞான சாதனைகள் ஆறு (சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை). இப்படி பல விஷயங்கள் ஆறாகிப் பெருகி நிற்பதால், சிவன் தன் சிந்தையுள் நிறைந்துள்ள பஞ்சாட்தரி மந்திரத்துடன் ஓம் என்ற ஓங்காரத்தையும் சேர்த்து ஆறாக்கி ஆறுமுகனை படைத்தான். இது வடமொழியில் சடக்கரம் என்று வழங்கப்பெறும். இதுவே ஆறுமுகனின் பெயர்க்காரணம்.
ஆறும், முருகனும்:
ஆறுதலை தருபவன் ஆறு தலை கொண்ட முருகன். கங்கையில் தாமரையில் இருந்ததால் காங்கேயன். ஆறு பெண்கள் (கார்த்திகை பெண்கள்) வளர்த்ததால் கார்த்திகேயன். ஆறு நட்சத்திரங்கள் கார்த்திகையானது. திதியில் ஆறாவது சஷ்டி. முருகனுக்கு ஆறுமுகம். காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் எனும் ஆறு பகைவர்களை அழித்து ஞானம் அருளும் அறுபடை வீரர் முருகனே.
ஆறு தீப்பொறிகள்:
சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்த ஆறு பொறிகள் ஆறுமுகங்களாக மாறியதால் ‘ஆறுமுகன்’ எனப் பெயர் பெற்றார். முதல் ஐந்து முகங்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. ஆறாவது முகம் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்குள் இருக்கும் ஆன்மாவைக் குறிக்கிறது. முருகன் அம்மையும், அப்பனுமாக இருப்பவன். ஆகையால் அம்மையின் ஒரு முகமும், அப்பனின் ஐந்து முகமும் சேர்ந்து ஆறுமுகமானான் என்றும் ஒரு விளக்கம் உள்ளது.
ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று, கோரும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று, குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று, மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்று, மற்றும் வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று என்று முருகப் பெருமானே மொழிந்ததாக ஒரு விளக்கம் உள்ளது.
ஆறு குண்டலினிகள்:
ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன. திருப்பரங்குன்றம் மூலாதாரமாகவும், திருச்செந்தூர் ஸ்வாதிஷ்டானமாகவும், பழனி மணிபூராகமாகவும், சுவாமி மலை அனாஹதமாகவும், திருத்தணிகை விசுத்தியாகவும், பழமுதிர்ச்சோலை ஆக்ஞையாகவும் விளங்குகிறது.
சரவணபவ விளக்கம்:
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளையும் உச்சரித்துப் போற்ற ஒரு மந்திரம் உள்ளது. சிவனுக்கு ஐந்தெழுத்தாகிய நமசிவாய, திருமாலுக்கு நமோ நாராயணாய என்றும், அம்மனை ஓம் சக்தி என்றும் பக்தர்கள் உச்சரித்து அருளாசிகளைப் பெறுகின்றனர்.
அந்த வகையில் கலியுக கடவுளான சுப்பிரமணியனை சரவண பவ எனும் மந்திரத்தால் பக்தர்கள் வழிபடுகின்றனர். இதில் “ச” என்பது மங்கலத்தையும், “ர” என்பது ஒளிக்கொடை என்ற பொருளையும், “வ” என்பது சாத்வீகம் என்ற பொருளையும், “ண” என்பது போர் என்ற பொருளையும், “பவ” என்பது உதித்தவன் என்பதையும் உணர்த்துகிறது.
ஆறுபடை வீடுகள்:
1) திருப்பரங்குன்றம் - இங்கு முருகனை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
2) திருச்செந்தூர் - இங்கு முருகனை கடலில் நீராடி பின் வழிபடுவது நல்லது. வியாதி, பகை நீங்கும். மனத்தெளிவு உண்டாகும்.
3) பழனி - ஞானப்பழமாக வீற்றிருக்கின்ற பழனி ஆண்டவரை வழிபட்டால் ஞானம் கிடைக்கும்.
4) சுவாமிமலை - தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுக வாழ்வு, மகிழ்ச்சி ஆகியன பெறலாம்.
5) திருத்தணி - குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) நீங்கும்.
6) பழமுதிர்ச்சோலை - இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனையில் (சிறு அருவி) நீராடுதல் மிகவும் சிறப்பு.
கந்தசஷ்டி விரதம்:
எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. எனவே ஆறுமுகனுக்குரிய விரதங்களுள் முக்கியமான விரதம் கந்தசஷ்டி விரதம் எனக் கூறப்படுகிறது. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. இந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படும்
நாட்கள் ஆறு நாட்களே.:
இப்படி எண் ஆறு, ஆறுமுகனோடு பல விதங்களில் தொடர்புடையதாயிருக்கிறது. ஆகவே ஆறுமுகனை அனுதினமும் வழிபட்டு, அவனது அருளாசிகளைப் பெறுவோம்
Leave a Reply