சிராத்தம் என்பது சம்ஸ்கிருத சொல்லில் இருந்து வந்த சொல். அப்படி என்றால் சிரத்தையுடன் செய்வது என்று பொருள். இதனைத் தமிழில் திவசம் என்று கூறுவார்கள். ஒருவர் இறந்து ஓராண்டு முடிந்த பிறகு அவர் இறந்த திதியில் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் சடங்கு ஆகும். பிறந்த நாள் நட்சத்திரம் கொண்டு கொண்டாடப்படுகிறது. இறந்த நாளின் திதியைக் கொண்டு சிராத்தம் அல்லது திவசம் மேற்கொள்ளப்படுகிறது.
சிராத்தம் என்பது இந்து மற்றும் பிற இந்திய மதங்களில் முன்னோர்களுக்கு மரியாதை மற்றும் நன்றியை வெளிப்படுத்தவும் அவர்களை நினைவுகூறவும் செய்யப்படும் ஒரு சடங்கு. இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கை என்னவென்றால், இன்று நாம் யாரால் இருக்கிறோம், யாரிடமிருந்து நமக்குப் பரம்பரையாக குணங்கள் மற்றும் திறமைகள் உள்ளன, அவர்களுக்கு நாம் ஈடுசெய்ய முடியாத அளவில் கடன்பட்டிருக்கிறோம். பித்ரு கடனை அடைக்க வேண்டும். அவர்கள் நமது மரியாதைக்குரிய முன்னோர்கள்.அவர்களை நாம் வணங்க வேண்டும் என்பதே.
சிராத்தம் என்னும் கர்மம்
எல்லா தர்மக்ளுக்கும் ஆதாரமாக, பிரதானமாக இருப்பது வேதங்கள். மனிதனின் வாழ்க்கை சுகமாக அமைவதற்கு என்னென்ன செய்ய செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறது வேதம். எந்தெந்த காரியங்களை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்பதனை விரிவாக சொல்கிறது. எதனை செய்ய வேண்டும் எந்தெந்த காரியங்களை எந்தெந்த காலத்தில் எந்தெந்த நேரத்தில் யார் யார் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்ற வழி முறைகள் தர்மம் எனப்படும், இதனை எடுத்து சொல்வது வேதம். எது தர்மம் எது அதர்மம் என்பதை வேத மாதா உபதேசிக்கிறாள். தர்மப்படி வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கூறும் பல உபதேசங்களில் சிராத்தம் செய்வதும் ஒன்று. மாத்ரு தேவோ பவ;, பித்ரு தேவோ பவ; அதிதி தேவோ பவ என்று உபதேசிக்கிறது தர்மம். தாயரையும் தந்தையையும் சந்தோஷப்படுத்துவது தெய்வத்திற்கு செய்வதற்கு சமம். அடுத்ததாகக் கூறுவது பித்ரு தேவோ பவ. பித்ருக்களை தெய்வமாகக் கருதி வணங்க வேண்டும். மனித உடலில் வாழ்ந்த நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் வேறுஉருவத்தில் இருக்கும் போது அவர்களையும் மகிழ்விக்க வேண்டும். பித்ருக்கள் என்பவர்கள் உயிர் நீத்த நமது முன்னோர்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை கடமைகளை நாம் சரி வர செய்ய வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும். அவர்களுக்கான சிரார்ததம் மற்றும் தர்ப்பணம் முறையாக தவறாமல் செய்ய வேண்டியது நமது கடமை. கடமை என்றால் நிச்சயமாக பலனும் இருக்கும்.
சிராத்தம் எவ்வாறு செய்ய வேண்டும்:
சிரத்தை என்ற வார்த்தையை குறிப்பது தான் சிரார்ததம். சிரத்தையுடன், நம்பிக்கையுடன், விசுவாசத்துடன் ஈடுபாட்டுடன் பித்ரு காரியம் செய்தால் தான் அதன் பலன் கிட்டும். அவநம்பிக்கை கொள்ளுதல் ஆகாது. தெய்வ காரியத்தைக் கூட தள்ளி வைக்கலாம். ஆனால் பித்ரு காரியத்தை சரியான நேரத்தில் செய்தே ஆக வேண்டும் என்று கூறுகிறது சாஸ்திரம். அதனை சரியாக அனுஷ்டானம் செய்வதன் மூலம் சௌக்கியமாக இருக்கலாம். நாம் பல பிறவிகளைக் கடந்து வந்துள்ளோம். இந்தப் பிறவியையும் நாம் கடக்க வேண்டும்.
சிரார்த்தம் விதி முறைகள்
சிராத்தத்தை முன்னோர்கள் செய்த வழி முறையில் செய்ய வேண்டும். சம்பிரதாயப்படி செய்ய வேண்டும்.
தர்ப்பணம் செய்து மகிழ்விக்க வேண்டும். திருப்திப்படுத்த வேண்டும்.
கயாவிற்கு சென்று பிண்ட பிரதானம் செய்ய வேண்டும்.
இந்த மூன்று கடமைகளை செய்வதன் மூலம் இந்த கர்மம் நிறைவேறும் என்று கூறலாம்.
திவசம் என்றால் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (தசமி என்றால் அந்த மாத தசமி) பிராமணரை அழைத்து செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு. எனவே சரியான திதி அறிந்து செய்ய வேண்டும். இறந்தவர்களுக்கு அவர்கள் இறந்து போன திதிதான் முக்கியம். அன்றைய தினத்தில் மட்டுமே அவர்கள் நம்மை நாடி வருகிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை மற்றும் இறந்து போன திதியில் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். எனவே அதை விடுத்து அவர்கள் இறந்து போன தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானது எனக்கூறப்படுகிறது.
ஹோமம் வளர்த்து முதலில் அவர்களை திருப்தி செய்ய வேண்டும்.
பின்னர் 3 தர்ப்பை புல்லில், இறந்து போனவர் மற்றும் அவர்களது முன்னோர்கள் என அனைவரையும் மானசீகமாக வரவழைத்து அவர்களின் மேல் பிண்டம் வைத்து உணவளிக்க வேண்டும்.
அந்த பிண்டத்தை பசுக்களுக்கு அளித்து பிராமணருக்கு அரிசி, காய்கறிகள், தட்சிணை அளித்து ஆசி பெற வேண்டும்.
பின்னர் படையல் இட்டு, காக்கைக்கு உணவிட்டு, அதன் பிறகே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். இதுவே திவசம் எனப்படுகிறது. வசதியில்லாதவர்கள் அந்தத் திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
சிராத்தம் எப்படி செய்ய வேண்டும்.
சிராத்தம் மிகவும் முக்கியமான செயல். நம்முடன் வாழ்ந்த தாத்த பாட்டி போன்றவர்கள் தங்கள் சரீரத்தை தியாகம் செய்து பித்ருக்களாக மாறி இருக்கிறார்கள். அவர்களுக்கு கர்மா செய்யவேண்டிய கடமை ஒவ்வொரு நபருக்கும் உள்ளது.
சிராத்தம் செய்யும் போது அதிகபட்சம் ஒரு மாதம் முன்னதாகவே குறைந்த பட்சம் மூன்று நாட்கள் முன்னதாக தயாராக வேண்டும்.
வெளியில் உண்ணுதல் கூடாது
பிரம்மச்சாரியம் கடை பிடிக்க வேண்டும்.
சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.
முதல் நாள் ராத்திரி போஜனம் செய்தல் கூடாது
சிராத்தம் அன்று காலையில் முன்னதாக எழுந்து நித்ய அனுஷ்டானங்களை செய்ய வேண்டும்.
இடத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அந்தணர்களுக்கு கொடுக்க வேண்டிய வஸ்திரங்களை நனைத்து காய வைத்துக் கொள்ள வேண்டும்.
சிராத்தத்திற்கு தேவையான சமித்துக்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
பய பக்தியுடன் செய்ய வேண்டும்.
கொண்டாட்டமாக இல்லமால் கர்மமாக செய்ய வேண்டும்.
கோபம் கொள்ளுதல் கூடாது
பொறுமையாக செயல்பட வேண்டும்.
மந்திரங்களை சரியாக உச்சரிக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
பித்ரு சாபம்:
முறையாக சிராத்தம், மற்றும் தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ருக்களின் (முன்னோர்களின்) ஆசிகள் நமக்கு கிடைக்கும். அதில் இருந்து அதாவது இந்தக் கடமைகளில் இருந்து நாம் தவறும் பொழுது பித்ரு சாபம் ஏற்படுகிறது. பித்ரு சாபம் காரணமாக காரியத் தடைகள் மற்றும் தாமதங்களை நாம் எதிர்கொள்ள நேரலாம். வாழ்வில் தொடர் தோல்விகள் மற்றும் தொடர் அவமானங்களை நாம் சந்திக்க நேரலாம். வாழ்வின் முன்னேற்றத்திலும் தடைகள் இருக்கலாம்.
Leave a Reply