சிவன் படத்தை வீட்டில் வைக்கலாமா?

பொதுவாக நமது வீடுகளில் நாம் கடவுளுக்கு என்று ஒரு அறையை ஒதுக்கி அதாவது பூஜையறை ஒன்றை வைத்து அதில் நமக்கு பிடித்த கடவுளை எல்லாம் வைத்து வணங்குகிறோம். பூஜை அறை இல்லாவிட்டால் கூட இருக்கும் இடத்தில் ஒரு தூய தனி இடத்தை ஒதுக்கி இறைவனின் உருவப் படங்களை வைத்து வணங்குவது வழக்கம்.
சிவபெருமானை நாம் வணங்கினாலும், பெரும்பாலும் சிவன் படத்தை நாம் வீட்டில் வைத்துக் கொள்வதில்லை.ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் சாமபலைப் பூசி புலித்தோல் அணிந்தபடி காட்சி தருகிறார். சிவ வழிபாடு செய்பவர்கள் கூட சிவபெருமானின் தனி திருவுருவ படத்தை வீடுகளில் வைத்து வழிபடுவதில்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை என்பார்கள். எனவே சக்தி இல்லாத சிவ பெருமானின் படம் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதல்ல. சக்தியுடன் இணைந்த படத்தை வைத்து வழிபடலாம். ஆலயங்களில் கூட சிவனை லிங்க வடிவில் தான் வழிபடுகிறோம்.
நாம் வீட்டில் வைத்து வணங்கும் அனைத்து கடவுள்களுக்கும் பிறந்த நாள் அதாவது அவதார நாள் உண்டு. அவதார நோக்கமும் உண்டு. சிவன் ஆதியும் அந்தமும் அற்றவர். பிறப்பு இறப்பு அற்றவர். தாய் தந்தை அற்றவர். அழிக்கும் கடவுள். அழிவின் மூலம் முக்தி அளிப்பவர். அழிவில் இருந்து உருவாக்குபவர். சிவனை தியானிப்பதன் மூலம் பற்றற்ற நிலையை அளிப்பவர். சிவனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நாம் வீட்டில் வைத்து வணங்கும் இறைவனின் திருவுருவப் படங்களுக்கு நாம் பூஜை செய்யச் செய்ய ஆற்றல் அதிகரிக்கும். அதன் அதிர்வலைகள் நமது வாழ்வின் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும். முக்திக்கு வழி கோலும் தனிப்பட்ட சிவனின் படத்தை வைத்து வணங்குவதன் மூலம் இல்லற வாழ்வின் பற்று அகன்று குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகலாம். எனவே சிவனும் சக்தியும் இணைந்த படத்தை மட்டுமே வீட்டில் வைத்து வழிபடுவதற்கு உகந்தது என்ற கருத்து நம்முள் ஆழமாக பதிந்து இருப்பதும் உணமையானதாக இருக்கும்.
எது எப்படியாக இருந்தாலும் பாரம்பரியமாக நமது நம்பிக்கையின் படி சிவனின் உருவப் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது கூடாது என்பதை நாமும் பின்பற்றுவோம். சிவனும் சக்தியும் இணைந்த படத்தை வைத்து வழிபட்டு வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோம்.
