விளக்கில் இருந்து தீபத் திரியை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை:
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு தினமும் ஏற்றி மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். தினந்தோறும் அதிகாலையிலும், அந்தி மாலையில் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டால் மனதிற்கு நிம்மதியும், ஆனந்தமும் கிடைக்கும். மன அழுத்தங்கள் நீங்கி கஷ்டங்களும் விலகும். தினமும் விளக்கேற்றி வழிபடும் போது அன்னை மகாலட்சுமி அந்த இல்லத்தில் வந்து வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அவ்வாறு விளக்கேற்றி வழிபடும் போது நம்மையறியாமல் சில தவறுகள் செய்து விடுகிறோம். அவ்வாறு செய்தால் மகாலட்சுமி நாம் வாசலுக்குக் கூட வரமாட்டாள். அதோடு துஷ்ட சக்திகளும் வீட்டிற்குள் வந்துவிடும். குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்படும்.
நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பழக்க வழக்கங்களின் பின்னால் பல நல்ல நன்மைகள் இருப்பது நமது கண்ணுக்குத் தெரிவதில்லை. அவர்கள் விட்டுச் சென்ற நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் அதற்கான பலன்களையும், நன்மைகளையும் நம்மால் உணர முடியும். அதை நம்பாமல் செயல்படுபவர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் என்பது கண்கூடு.உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.
விளக்கேற்றும் நாட்கள்:
நமது இந்து சமயத்தில் சிலர் செவ்வாய், வெள்ளிக்கிழமை என இரு நாட்கள் விளக்கேற்றி வழிபடுவார்கள். அதே சமயம் ஒரு சிலர் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விளக்கேற்றியும் வழிபடுகிறார்கள். அனுதினமும் விளக்கேற்றி வழிபடுவது இல்லத்திற்கு பிரகாசத்தையும், சுத்தத்தையும் அளிக்கிறது. அதோடு எதிர்மறை ஆற்றல்கள் மாயாமாய் மறைந்து போகும். துஷ்ட சக்திகளின் ஆற்றல் எடுபடாமல் போகும்.
விளக்கின் வகைகள்:
அகல் விளக்கு - சர்வ மங்கலங்களையும் அளிக்கும்
வெண்கல விளக்கு - தோஷங்களை நீக்கும்
செம்பு விளக்கு - மனதில் அமைதி தரும்
பித்தளை விளக்கு- குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்
வெள்ளி விளக்கு - அமைதி நிலவும்
தங்க விளக்கு - ஆயுள் நீட்டிக்கும்
எவர்சில்வரில் விளக்கு ஏற்றுவது நல்லதல்ல.:
அதே போன்று விளக்குகள் குத்து விளக்கு, தூண்டா மணி விளக்கு, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு என பிரிவுபடும். இதில் குத்து விளக்கினை பிரம்மா, விஷ்ணு, சிவன் சேர்ந்த ரூபமாகக் கூறுவர்.
விளக்கேற்ற பயன்படும் எண்ணெய் வகைகள்:
நெய்யை பயன்படுத்தி விளக்கேற்றினால் சுகமும், ஞானமும் அதிகரிக்கும். இலுப்ப எண்ணெய் கடன் தொல்லையை நீக்கும். ஆமணக்கு எண்ணெய் சகல சம்பத்தும் கிடைக்கும். தேங்காய் எண்ணெயில் தீபமேற்றினால் கணபதி மற்றும் குலதெய்வத்தின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். நல்லெண்ணெய் சகல தோஷங்களையும் நீக்கும். இந்த ஐந்து எண்ணெய்யை கலந்தும் தீபமேற்றலாம்.
விளக்கேற்றும் முறை:
ஒருமுகமாக ஏற்றினால் - மத்திமம்
இரு முகம் - குடும்ப ஒற்றுமை ஏற்படும்
மூன்று முகம் - பிள்ளைகள் மேன்மை
நான்கு முகம் - சொத்து சேரும்
ஐந்து முகம் - செல்வ நிலை உயரும்
விளக்கு ஏற்றும் திசைகள்
கிழக்கு - லட்சுமி கடாட்சம் ஏற்படும், துன்பம் விலகும்
வடகிழக்கு - தான தர்மங்கள் செய்வர்
மேற்கு - பகை தீரும், கடன் நீங்கும்
தென் கிழக்கு - அறிவு பெருகும்
வடக்கு - காரிய சித்தி ஏற்படும்
வடமேற்கு - ஒற்றுமை நிலவும்.
தெற்கு புறமாக விளக்கு ஏற்றக் கூடாது.
விளக்கேற்றும் போது செய்யக் கூடாதவை:
விளக்கேற்றி வழிபடுபவர்கள், சில மணி நேரம் கழித்து திரி கருகும் முன்போ அல்லது எண்ணெய் தீர்ந்து விடும் முன்போ மலர்களால் தீபத்தை அணைத்து விடுவர். அவ்வாறு செய்யும் போது திரி கருகி விட்டாலோ, திரி பச்சை நிறமாக மாறிவிட்டாலோ வேறு திரியைக் கொண்டு தான் தீபமேற்ற வேண்டும்.
தீபத் திரியானது பச்சை நிறமாக மாறிவிட்டால் அது வீட்டிற்கு நல்லதல்ல என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதோடு மட்டுமல்லாது பணத்தட்டுப்பாட்டையும் கொண்டு வந்து விடும். எனவே தீபமேற்றும் முன்பாக விளக்கை நன்கு தேய்த்துவிட்டு அதன்பிறகு விளக்கேற்றலாம்.
பழையத் திரியை குப்பையில் போடாதீர்கள்:
விளக்கேற்றும் போது தீபத்திரியை மாற்றும் போது பழைய திரியை எக்காரணம் கொண்டும் குப்பையில் போடக் கூடாது. அப்படி செய்தால் மகாலட்சுமியும் இல்லத்தை விட்டு சென்று விடுவாள் என்கின்றனர். பழைய திரிகளை சேர்த்து வைக்க வேண்டும். சிறிதளவுத் திரிகள் சேர்ந்த பின்பு நமக்கு வசதியான நாளில் இரவு தூங்கச் செல்லும் முன் வீட்டிலுள்ள அனைவரையும் ஒன்றாக கிழக்கு பார்த்து உட்கார்த்தி வைத்து, சேர்த்து வைத்துள்ள திரிகளை தூபக்காலில் போட்டு அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மூன்று தடவையும், இடமிருந்து வலமாக மூன்று தடவையும் திருஷ்டி கழிக்க வேண்டும்.
திருஷ்டி கழித்த பின்பு அந்த திரிகளை தலைவாசலின் முன்பாக வைத்து கொளுத்திவிட வேண்டும். திரிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிடும். அத்தோடு நம்மை பீடித்திருந்த துஷ்ட சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் அந்த தீயில் எரிந்து காணாமல் போய்விடும் என்பது நம்பிக்கை. எனவே தினமும் வீட்டில் தீபமேற்றி வழிபட்டு இறையருள் பெறுங்கள்.
Leave a Reply