அற்புதம் நிகழ்த்த அனுமன் பெற்ற வரங்கள்:
குழந்தைகளுக்கு நிலவு என்றால் மிகவும் பிடிக்கும். அதைக் காட்டி உணவு ஊட்டும் காலமும் இருந்தது. இறை ஆற்றல் மிக்க குழந்தையாக இருந்த ஆஞ்சநேயருக்கு காலையில் உதய வேளையில் சிவப்பு நிறத்தில் இருந்த சூரியனை மிகவும் பிடித்திருந்தது. அதனை சிவந்த பழம் என்று கருதி அதனை சாப்பிடும் எண்ணம் கொண்டார். வாயுவின் மைந்தன் என்பதால் வாயு வேகத்தில் பறந்து சூரியனை பறிக்கச் சென்றார்.
இதைக் கண்டு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் விசனமுறுகின்றனர். அச் சமயத்தில் தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அனுமனின் முகத்தில் தாக்கினார். அது அவரது தாடையில் பட்டு தாடை உடைந்து அவர் கீழே விழுந்தார். இதனால் அவர் தந்தை வருத்தமுற்று காற்றை நிறுத்தி விடுகிறார். காற்று இல்லாத காரணத்தால் உயிர்களுக்கு மிகுந்த தொல்லை ஏற்பட்டு விடுகின்றது. எனவே அனைவரும் சிவனை நாடுகின்றனர். சிவ பெருமான் தலையிட்டு அனுமனை உயிர்ப்பிக்கிறார். வாயு பகவானும் காற்றை மீண்டும் உயிர்களுக்கு அளிக்கிறார்.
வஜ்ராயுதத்தால் தாக்கப் பட்டதானால் அனுமனின் உடலும் வஜ்ரம் போலே இருக்கும் என்று சிவன் வரமளிக்கிறார்.
அனுமனுக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என இந்திரன் வரமளிக்கிறார்.அனுமனுக்கு நெருப்பினால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்று அக்னி தேவன் வாரமளிக்கிறார்.அனுமனுக்கு நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வருணன் வாரமளிக்கிறார்.அனுமனுக்கு காற்றினால் எந்தத் தீங்கும் ஏற்படாது என வாய் தேவன் வரமளிக்கிறார்.
அனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் எனவும் அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் பிரம்மா வரமளிக்கிறார்.விஷ்ணு பகவான் "கதா என்னும் ஆயுதத்தை வழங்கினார்.
எனவே இந்த வரங்களினால் அனுமனை ஒரு சிரஞ்சீவியாகவும், தனித்துவமான சக்திகளையும் பலத்தையும் கொண்டவரகவும் மாறுகிறார்
ராம நாமமும் அனுமனும்:
ஸ்ரீ மகா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக விளங்கும் பகவான் ஸ்ரீ ராமச் சந்திரனின் பக்தனும் தொண்டனுமாகிய அனுமன் என்னும் ஆஞ்சநேயர் இந்துக்களின் முக்கியக் கடவுளாக போற்றப்படுகிறார்.
அனுமன் வலிமை, துணிவு, புகழ், ஆரோக்கியம், வீரம் அறிவு என அனைத்தும் இணைந்த ஒரு அற்புத வானர வீரனாய் இருந்தவர். குறிப்பாக இவர் வாக்கு சாதுரியம் மிக்கவர். அதனால்தான் இவரை சொல்லின் செல்வர் என்று கூறுவர்.
நித்திய சிரஞ்சீவியாகத் திகழும் அனுமன் இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கும் தெய்வம். மனமுருகிப் பிரார்த்திப்பவர்க்கு பிரத்யட்சமாகத் தோன்றி அருள்புரியும் தெய்வம். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் தோன்றுபவர்.
அனுமனை நினைத்தால் பிரச்சினைகள் தீரும். கடினமான காரியங்களைக் கூட மிக எளிதாக மேற்கொல்லாம்.
மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் ஏதாவது ஒரு பிரச்சினையை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்ஸத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை என்று கூட கூறலாம். கல்வி, வேலை, திருமணம், குழந்தைப் பேறு இப்படி பல பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளை தீர்க்கும் அற்புத கடவுள் ஆஞ்சநேயர் என்றால் அது மிகையாகாது.
ஆஞ்சநேயர், தன்னை வழிபடுவோரின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்துபவர் என்றாலும் அவர் புரிந்த அற்புதங்கள் ஏராளம்.
அனுமனின் அற்புதங்கள் :
களைப்பில்லாத, ஓய்வில்லாத முயற்சி ஒன்றே வெற்றியை அளிக்கும் என்று அனுமன் தன் செயலால் அறிவுறுத்திய அற்புதம் காண்போமா? சீதையைத் தேடி அனுமன் சென்ற போது களைப்பு நீங்க ஓய்வெடுக்க வேண்டி சமுத்திரதைக் கீறி வெளி வந்தது மைநாக பர்வதம். முன் வைத்த காலை பின் வைப்பதோ, இடையில் தடைப் படுத்துவதோ செயலை முடிப்பதில் இடையூறாக இருக்கும் என்று தன் இலக்கு ஒன்றையே கருத்தில் கொண்டு மலைக்கு நன்றி கூறி பயணம் மேற்கொண்டான் அனுமன். என்னே அற்புதம். முயற்சியில் வெற்றி பெறும் வரை ஓய்வென்பது ஒதுக்கப்பட வேண்டியது என்று உணர்த்திய அற்புதம் தான் என்னே !
அனுமனின் லட்சிய பயணத்தில் அடுத்த இடையூறு அரக்கி வடிவில் வந்தது. சுராசா என்னும் அரக்கி இந்தக் கடலை தாண்டும் எவராகிலும் என் வாயுள் புகுந்து வெளி வந்து பின்னர் தான் செல்ல வேண்டும் என்ற போது, பிரம்மாண்ட வடிவம் காட்டி, அரக்கியின் வாயை அகட்டச் செய்து, திடீரென குறும் வடிவில் வாயுள் நுழைந்து காதின் வழியே வெளி வந்து பயணம் தொடரும் சாதுர்யமான நடவடிக்கை. எதிரியால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வெல்லும் உபாயம் அறிந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய விதம் மிக அற்புதம்.
கடலைத் தாண்டிய அனுமன் இலங்கையில் அரக்கியர் புடை சூழ இருந்த சீதையின் நம்பிக்கை பெற மேற்கொண்ட சமயோஜிதமான உபாயங்கள் தான், அவர் மேற்கொண்ட குறிக்கோளில் வெற்றியை அளித்தது.
இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் அடிப்பட்டு மூர்ச்சையான இலக்குவன் மற்றும் வானர வீரர்களைக் காப்பாற்ற அனுமன் இமயத்திலிருந்து பெயர்த்துத் தூக்கிவந்த அரிய மூலிகைகளைக்கொண்ட சிறிய மலை. அனுமனால் மூலிகைகள் நிறைந்த மலையைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் தேவைப்பட்ட மூலிகையை இனம் கண்டுக்கொள்ள முடியாததால் அந்த மலையையே பெயர்த்து இலங்கைக்கு எடுத்துச் சென்றார். அடிப்பட்ட, மூர்ச்சையான எல்லாரும் குணமானபிறகு மீண்டும் அந்த மலையை பெயர்த்த இடத்திலேயே கொண்டுவைத்துவிட்டார். அந்த மூலிகைக்கு சஞ்சீவி அல்லது சஞ்சீவினி எனப் பெயராகும். அம்மூலிகை இருந்த மலையே சஞ்சீவி மலை அல்லது சஞ்சீவி பர்வதம்.மூலிகையை இனம் கண்டு கொள்ள இயலாவிட்டாலும் மாற்று வழி ஒன்று கண்டு காரியத்தை முடித்த அற்புதம் தான் என்னே!
இப்படி அனுமனின் மகிமையும் அற்புதங்களும் அடுக்கிக் கொண்டே போகலாம். அனுமன் ஜெயந்தி அன்று அவன் தாள் பணிந்து அவனருளால் நம் வாழ்விலும் அற்புதங்கள் அடையும் பாக்கியம் பெறுவோம்.
Leave a Reply