மஹிசாசூரன் என்ற அசுரனை அழிப்பதற்காக அன்னை பார்வதி துர்கா தேவியாக அவதரித்தாள். அன்னை பார்வதியின் உக்கிரமான வடிவமாக துர்கா தேவி தோன்றினாள். துர்க்கை என்றால் துக்கங்களை போக்கக் கூடியவள் என்று அர்த்தமாகிறது. வடமொழியில் ‘துர்க்கை’ என்றால் ‘வெல்ல முடியாதவள் என்று பொருள். தீமைகளையும், பாவங்களையும் அழித்து தனது பக்தர்களை பாதுகாக்க அனைத்து சிவாலாயங்களிலும் துர்க்கா தேவி வீற்றிருக்கிறாள். இந்தியாவிலும் அனேக இடங்களில் அன்னை துர்க்கா தேவி ஆலயம் உள்ளது. ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
துர்க்கை வழிபாடு:
அன்னை துர்க்கா தேவியை எந்நாளும் வழிபடலாம். இருந்த போதும் ராகு கால வேளையில் வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் ராகு காலத்தில் அன்னை துர்க்கா தேவியின் ஆட்சியே பலம் பெறுகிறது. கிரகங்களில் ராகு கேது தோஷங்களினால் பாதிக்கப்பட்டிருந்தால், ராகு கால வேளையில் அன்னை துர்க்கையை சரணடைந்து விளக்கேற்றி வழிபட்டால் சகல தோஷங்களிலிருந்தும் காப்பாற்றுவாள்.
துர்க்கை வழிபாட்டில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முக்கியமாக கருதப்படுகிறது. குடும்பத்தில் தீராத பிரச்னைகள், தீராத நோய்கள், பில்லி, சூனியம், செய்வினை பிரச்சினைகள், திருமண பாக்கியம், குழந்தைப் பாக்கியம் என எந்த பிரச்சி னையாக இருந்தாலும் அன்னை துர்க்கையின் சன்னதியில் எலுமிச்சை விளக்கேற்றி மனமுருக வேண்டினால் துர்க்கை அம்மன் நம்மை காத்து ரட்சிக்கிறாள்.
ஆன்மீகத்தில் எலுமிச்சைக் கனி:
சக்தி ஆலயங்களில் தேவியின் முன்பாக உள்ள சூலங்களிலும், காவல் தெய்வங்கள் அருகில் இருக்கும் சூலங்களிலும் எலுமிச்சை சொருகியிருப்பதை பார்த்திருப்போம். நமது மண்ணின் முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு பதிலாக ஏன் எலுமிச்சைக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
ஆன்மீகத்தில் எலுமிச்சையை தேவ கனி என்று அழைப்பார்கள். மற்ற கனிகளைக் காட்டிலும் மனித எண்ணங்களை ஈர்க்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு என்பதால் சூலத்தில் குத்தப்பட்டிருக்கும். நீண்ட கால பிரச்னைகள் தீர்வதற்கு அம்மனுக்கு கனி மாலை சாத்தி வழிபாட்டால் கைகூடும் என்பது நம்பிக்கை. அதற்கு எலுமிச்சை கனி மாலையைத் தான் அம்மனுக்கு சாத்துவார்கள். எலுமிச்சம்பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆகவே இவ்வளவு சிறப்பம்சங்கள் எலுமிச்சை கனிக்கு இருப்பதால் தான் ஆன்மீகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஆலயத்தில் எலுமிச்சை விளக்கேற்றும் முறை:
துர்க்கையின் சன்னதியில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாகத் தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு இருக்க வேண்டும்.
இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்கி சார்த்த வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் அன்னை பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்றுவது கூடாது.
வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும். வீட்டில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடக் கூடாது.
எலுமிச்சை விளக்கேற்றினால் ஏற்படும் பலன்கள்:
எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களில் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம்.
துர்கா காயத்ரி மந்திரம்:
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்.
Leave a Reply