காக்கும் தெய்வம் கருப்பசாமி வரலாறு:
அருள்மிகு கருப்பசாமி காவல்தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார். தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் கருப்பசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார். கருப்பசாமி அவர் அமர்ந்த இடங்களுக்கேற்றார் போல் பல நாமங்களில் அழைக்கப்படுகிறார். சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களில் தமிழக கிராமங்களில் மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனர். கருப்பசாமி அருளை பெற, ஜோதிடம் குறித்த தகவல்களை பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
கருப்பசாமி அவதாரம்:
வால்மீகி முனிவரின் குடிலில் சீதை தங்கியிருந்து லவனை பெற்றெடுத்தாள். ஒரு நாள் சீதை தண்ணீர் எடுக்க செல்லும் போது, வால்மீகி முனிவரிடம் லவணை பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டு சென்றாள். திரும்ப வந்து குழந்தை லவணை தூக்கிக் கொண்டு வால்மீகியின் பர்ணசாலைக்கு வெளியே வந்து உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். இதை வால்மீகி முனிவர் அறியவில்லை. திடீரென்று பார்க்கும் போது குழந்தை அங்கு இல்லை என்பதை உணர்ந்த வால்மீகி முனிவர், குழந்தையை காணவில்லை என்றால் சீதை எங்கு தன்னை சபித்துவிடுவாளோ என எண்ணி தனது தவ வலிமையால் உருவேற்றி கீழே கிடந்த தர்ப்பை புற்களை கொண்டு லவணைப் போலவே ஒரு குழந்தையை உருவாக்கினார். அந்தக் குழந்தையின் பெயர் தான் குசன். ஆக லவண், குசன் என இருப்பிள்ளைகள் ஸ்ரீராமருக்கு.
ராமர் ஒரு நாள் காட்டுக்கு வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை எனக் கேட்டார். உடனே தீக்குளித்த சீதை தன் குழந்தைகளையும் அதையே செய்யச் சொன்னாள். லவண் பிழைத்து வர, குசன் மட்டும் யாகத் தீயில் கருகினான். ஸ்ரீராமர் மீண்டும் உயிர் தந்து குசனைக் காக்க, தீயில் கருகியதால் கருப்பா என அழைத்தாராம். அன்று முதல் அவர் கருப்பண்ண சாமியானார் என ஒரு கதை கூறப்படுகிறது.
கருப்பசாமியின் உருவம்:
கருப்பசாமி நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம் என இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சியளிக்கிறார். கம்பீரமான உருவம், தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கு மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்புரிவதை காண முடிகிறது.
பதினெட்டாம்படி கருப்பர்:
சுவாமி ஐயப்பருக்கு துணையாக நிற்கிறார் கருப்பசாமி என்று புராணங்கள் கூறுகின்றன. சிறுவனாக இருந்த ஐயப்பர் மகிஷியை வதம் செய்ய புறப்பட்ட போது, சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து, “ஐய்யப்பன் சிறுவயதினன். அவர் படைக்கு நீ சேனாதிபதியாக தலைமையேற்று, அவன் வெற்றி பெற உதவி செய்” என ஆணையிட்டாராம். அதன்படியே ஐயப்பரின் வெற்றிக்கு துணை நின்றாராம் கருப்பசாமி.
சபரிமலையில் 18ம் படியில் அருகே வலப்புறத்தில் பதினெட்டாம்படி கருப்பராக சந்நிதி கொண்டிருக்கிறார் கருப்பசாமி. முந்திரி நைவேத்தியமும், கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் என கூறப்படுகிறது. ஐயப்பரை தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வணங்கிவிட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றே 18ம் படிகளில் ஏறுவார்கள். சாஸ்தாவின் சித்தத்தை ஆணையை நிறைவேற்றுகின்ற இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் போற்றுகிறார்கள்.
கருப்பசாமி பூஜை:
காக்கும் தெய்வம் கருப்பசாமி பூஜைக்கு சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்தவுடன் திருவிளக்கேற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம், நாள், நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்து பூஜையைத் தொடங்க வேண்டும். முன்னதாக சத்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமியை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம். ‘ஓம் நமோ பகவதே ஸ்ரீமுக கருப்பசாமியே நமஹ’ எனக் கூறி வழிபடலாம்.
சைவ நைவேத்தியம்:
கருப்பசாமி சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். பரம்பொருளாக விளங்கும் சிவபெருமான் அம்சமாக விளங்கும் கருப்பசாமிக்கு சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது என்பது நியதி. மது, மாமிசம் யாவும் காமியார்த்தத்தில் உள்ளவை. துன்பம் கொடுப்பவை. உதாரணமாக ஒரு ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ வெட்டினால் அந்த உடலிலிருந்து உயிர் பிரிகிறது. எந்த அளவுக்கு துன்பப்பட்டு அந்த உயிர் பிரிகிறதோ, அதைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு துன்பம் கொலை செய்வதனுக்கு சந்தேகமே இல்லாமல் வந்து சேரும். அதனால் கருப்பசாமிக்கு உகந்த படையல் பொருட்களாக, சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப்பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.
கருப்பசாமி வழிபாட்டின் பலன்கள்:
கருப்பசாமிக்கு பொய் என்பது சுத்தமாக பிடிக்காது. அவர் தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்பவர். தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றை விட வேகமாக வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பவர் கருப்பசாமி. கருப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளிலிருந்து காப்பாற்றுகிறார். நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குகிறார். தர்மத்தின் நியாயத்தை கருப்பசாமியிடம் நிச்சயமாகப் பெறலாம்.
Leave a Reply