தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் தேவேந்திரன், நாரதர் மற்றும் பிற முனிவர்கள் வணங்கிப் போற்றப்படுபவரும், நாகங்களை முப்புரி நூலாகக் கொண்டவரும் கருணையே வடிவாக விளங்குபவருமான கால பைரவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு கருணைக் கடலாகவும், அருள் மழையை அள்ளித் தருபவராகவும் விளங்குகிறார். அத்தைகைய சிறப்பு வாய்ந்த கால பைரவரை வணங்கி வழிபட்டால் உண்டாகும் நன்மைகள் அளவிடற்கரியது.
தேவராஜ சேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யால யக்ஞ சூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோக வ்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகாபுராதி நாத கால பைரவம் பஜே!!
கால பைரவர் யார்?
பஞ்ச குண சிவ மூர்த்தங்களில் பைரவர் ஒருவர் ஆவார். பஞ்ச குணங்கள் என்பன வக்ரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம் மற்றும் கருணை. இந்த பஞ்ச குணங்களில் வக்ர மூர்த்தியாக பைரவர் காணப்படுகிறார். கால பைரவர், ருத்திர வடிவம் தரித்தவர் ஆவார். இந்த வடிவ பைரவரைத் தொழ வாழ்வில் பயம் நீங்கும். மகிழ்ச்சி பொங்கும். செல்வங்கள் பெருகும்.
காலத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கடவுளாகக் கால பைரவர் விளங்குகிறார். பஞ்ச பூதம், எட்டு திக்குகள், நவ கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், காலம் என அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கடவுளாகக் கால பைரவர் விளங்குகிறார்.
அஷ்டமி விரதம்
பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது நாள் அதாவது தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்து கால பைரவரை வழிபட நம் வாழ்வில் நலன்கள் யாவும் பெருகும். கால பைரவ அஷ்டமி விரதம் நாம் வாழ்வை சிறக்கச் செய்யும் என்று கூறினால் அது மிகையாகாது.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. அன்று பைரவரை வணங்கினால் அவரின் பரிபூரண அருளை நாம் பெறலாம்.
சனி பகவானின் குரு பைரவர்:
நாம் வணங்கும் நவகிரகங்களில் ஒரு கிரகமாக, முக்கிய கிரகமாக சனி பகவான் விளங்குகிறார். சனி பகவான் நவ கிரகங்களுள் ஒரு கிரகமாக இடம் பிடிக்க பைரவரே காரணம் என்று கூறுவார்கள்.
ஒரு சமயம் சனி பகவானை, சூரியனின் மகனாகிய எம தர்ம ராஜன் அவமானப்படுத்தி விட்டார். இதனால் மனம் வருந்திய சனி பகவான் இதனை தன் தாய் சாயா தேவியிடம் கூறினார். சாயா தேவியும் நீ மனம் வருந்தாதே! பைரவரை வணங்கு. உனக்கு நல்லதே நடக்கும் என்று அருள் பாலிக்கிறார். அதன்படி சனி பகவான் பைரவரை வணங்கி வழிபட்டார். பைரவரும் அவருடைய வேண்டுதலை செவி மடுத்து அவருக்கு நவகிரக ஸ்தானத்தைப் பெற்றுத் தந்தார். மேலும் நீதி தவறாமல் தண்டனை வழங்கி அதன் மூலம் பக்தர்களை நல் வழிப்படுத்தும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்கினார். தேவர்கள், அசுரர்கள் உள்பட பிரபஞ்சத்தில் இருக்கும் அனைவரும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குருவாகவே ஸ்ரீபைரவர் விளங்குகிறார். மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் மும்மூர்த்திகள் உள்பட அனைவருக்கும் நல்லது தீயது செய்யும் சக்தியை சனி பகவானுக்கு அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார். அதன்படி சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்யவேண்டும் என்பதாகும். இதன் பிறகு சில காலம் கழித்து ஈஸ்வரரை பிடிக்க முயன்ற சனி, சனிஸ்வர பட்டமும் பெற்றார். பைரவரை தன் நண்பராகவும் குருவாகவும் மதித்தார் சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.
அஷ்டம சனி
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். எட்டாமிடத்தில் சனி இருந்தால் அஷ்டம சனி எனப்படும். அதாவது ஒருவருடைய ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்தால் அஷ்டம சனி என்று கூறப்படும். அட்டமத்து சனியில் தொட்டது துலங்காது, அட்டமத்து சனி தசையில் நட்டதெல்லாம் பாழ் என்றெல்லாம் சொல்வார்கள். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதும் சனிதான். சனி பகவான் கர்ம காரகன் என்பதன் காரணத்தால் அவரவர் செய்த வினைப் பயனுக்கு ஏற்ப நல்லதையும் தீயதையும் இம்மி பிசகாமல் அளிப்பவர் ஆவார். நமது தீவினை காரணமாக நாம் சனி பகவானின் பாதிப்பிற்கு ஆளாக வேண்டியிருந்தாலும் பைரவரை வழிபட்டால், சூரியனைக் கண்ட பனி போல கஷ்டங்கள் விலகும்.
கால பைரவ அஷ்டமி விரத பலன்
அஷ்டமி அன்று அதிகாலையில் குளித்து வீட்டில் விளக்கேற்றி பைரவரை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட வேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று, அங்கிருக்கும் பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபாடு நடத்தலாம். தேய்பிறை அஷ்டமியில் சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற மலர்களால் அர்ச்சித்தால் நல்ல பலன்களை பெறலாம்.
காலபைரவாஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கினால் அவர் எண்ணற்ற பலன்களை நமக்கு அருள்வார். குறிப்பாக சனி தசையில் சனியின் தோஷத்தை குறைத்துக் கொள்ளவும் சனி பகவானின் பாதகமான பலன்களில் இருந்து விடுபடவும் இந்த விரதம் உகந்தது.
Leave a Reply