நவகிரகங்களில் சிறப்பு வாய்ந்த அங்காரகன் எனும் செவ்வாய் தனது தசா புத்தி காலத்தில் பல்வேறு விதமான பலன்களை உருவாக்குகிறார். ஒருவரது வாழ்க்கையில் செவ்வாய் தெசை யானது 7 வருடங்கள் நடக்கும். உடல் வலிமைக்கும், இரத்த ஓட்டத்திற்கும், பூமிக்கும், நிர்வாக பதவி, அதிகாரம், உடன் பிறப்புக்கு காரகனாக செவ்வாய் விளங்குகிறார். மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகள் செவ்வாய் ஆட்சி செய்யும் வீடுகள். மகரம் செவ்வாயின் உச்ச வீடாகவும், கடகம் செவ்வாயின் நீச்ச வீடாகவும் இருக்கிறது. இயற்கையிலேயே பாவ கிரகமான செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11ல் அமையப்பெற்றிருந்தால் நற்பலன்களை வழங்குகிறார்.
செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் 10ஆம் வீட்டில் அமர்ந்து தெசை நடைபெற்றால் மிக உயர்ந்த பதவிகளை வழங்குகிறார். செவ்வாய் சாதகமாக அமையப் பெற்று அதன் தசா புத்தி நடைபெற்றால் பூமி யோகம், மனை யோகம், உயர் பதவிகளை அடையும், யோகம், அரசாங்கம் மூலம் உயர்வுகள், உடன் பிறந்தவர்களால் அனுகூலங்கள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பு உண்டாகும். உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.
செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்கள் ஜாதகத்தில் சாதகமாக அமைவது நல்லது. அப்படியல்லாமல் நீசம் பெற்றோ, பாவிகள் சேர்க்கை பெற்றோ அமைந்துவிட்டால் செவ்வாயின் தசா புத்தி காலங்களில் வயிற்றுக் கோளாறு, ரத்தம் தொடர்பான பாதிப்புகள், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப் பையில் பிரச்னைகள், வயிற்றில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய சூழலை உருவாக்கிவிடுவார்.
பொதுவாகவே செவ்வாய் பலமிழந்து தெசை நடைபெற்றால் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் வம்பு, வழக்குகள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய சூழல் உருவாகும். செவ்வாய் ராகு சேர்க்கை பெற்று பலம் இழந்திருந்தால் விபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் அதிபதி என்பதால் தெசை புத்தி காலங்களில் அனுகூலமான பலன்களைத் தருவார்.
செவ்வாய் கிரகத்துக்குரிய மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை முதல் தெசையாக வரும். ஜாதகத்தில் பலம் பெற்று குழந்தைப் பருவத்தில செவ்வாய் திசை நடைபெற்றால் நல்ல பலமும், நோய்கள் எளிதில் அண்டாத உடலமைப்பு ஏற்படும். எப்போதும் அக்குழந்தைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
இளம் வயதில் செவ்வாய் தெசை நடைபெற்றால் கல்வியில் மேன்மை, விளையாட்டு துறைகளில் சாதனை செய்யும் அமைப்பு, எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் உயர் பதவிகளை வகுக்கும் யோகம் நல்ல நிர்வாக திறன் ஏற்படும். முதுமையில் நடைபெற்றால் பயமற்ற நிலை, பூமி மனையால் அனுகூலம், நல்ல உடலமைப்பு, சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் கிட்டும் யோகம் உண்டாகும்.
இல்லறத்தில் செவ்வாய்:
திருமண பொருத்தத்தில் செவ்வாயின் பங்கு முக்கியமானது. ஆண் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்திருந்தால் இல்லறம் சிறப்பாக அமையும். பெண் ஜாதகத்தில் பூப்படைதல், மாதவிடாய், உறவில் இன்பம், பாலுணர்வு போன்றவற்றைத் தூண்டக்கூடியவர். ஆகையால்தான் மறைமுகமாக தோஷம் என்ற பெயரில் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண பந்தத்தில் இருவரின் உடல் சேர்க்கையே வம்சம் விருத்தியடைய முக்கியமானது. இருவருக்கும் அந்த இச்சையை தருவதில் செவ்வாய் உதவுகிறார்.
நன்மை தரும் செவ்வாய் தெசை :
ஆண் தன்மையுள்ள கிரகமான செவ்வாய் யாருக்கெல்லாம் நன்மை தீமை செய்யலாம் என பார்க்கலாம். செவ்வாய் கடகம், சிம்மம், தனுசு, மீனம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்வார். நட்பு கிரகங்கள் நன்மை மட்டுமே செய்யும். செவ்வாய் இவர்களுக்கு நண்பர். தன்னுடைய தெசையில் நன்மை செய்வார்.
சாதகம் பாதகம் தரும் செவ்வாய்:
மேஷம், விருச்சிகம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஆதிக்கம் என்பதால் இவர்களிடம் கோபம் அதிகமாக இருக்கும். மேஷத்தில் பிறந்தவர்களுக்கு விருச்சிகம் எட்டாமிடம். விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு மேஷ லக்னம் ஆறாவது இடம் கடன் நோய் உள்ள இடம் எனவேதான் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏழு ஆண்டுகளில் சாதக பாதகங்களைத் தருவார் செவ்வாய் பகவான்.
செவ்வாய்க்குரிய பரிகாரங்கள்:
செவ்வாய்க்கு அதிபதியாக முருகப்பெருமான் விளங்குகிறார். ஆதலால் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருத்தல், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற்கொள்ளுதல், தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தல் நல்லது. கோதுமை ரொட்டி, சர்க்கரை, வெள்ளை எள் கலந்த இனிப்பு வகைகள், துவரை போன்றவற்றை மணமாகாத ஆணுக்கு தானம் செய்வது, செண்பக பூவால் முருகனை அர்ச்சனை செய்வது, பவழ மோதிரம் அணிந்து கொள்வது நல்லது.
Leave a Reply