அட்சய திருதியை
நவீன யுகத்தில் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மெய் ஞானமும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. தற்போதைய தலைமுறைக்கு முன் இருந்தவர்கள் ஆன்மீக வழிகாட்டுதல்களை காரணம் ஏதும் கேட்காமல் பின்பற்றி வந்தார்கள். ஆனால் இக்காலத்தில் இருக்கும் புதிய தலமுறையினர் காரணம் தெரியாமல் எதையும் ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை என்பது நிதர்சனமான உண்மைகள். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போது மெய்ஞான விஷயங்களும் விஞ்ஞான ரீதியாக அதன் அடிப்படையில் தான் பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றது. அதுவும் தமிழகத்தில் மாதப் பிறப்பு சந்திரனை ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளதும், சூரியன் மற்றும் சந்திரன் காரணமாக ஏற்படும் பருவ கால மாற்றங்களுக்கேற்ப நமது விழாக்களும் பண்டிகைகளும் அவற்றில் நாம் கடை பிடிக்கும் விரத அனுஷ்டானங்களும் அமைந்துள்ளது என்பதும் பாராட்டுக்குரிய, வரவேற்கப்பட வேண்டிய, கட்டாயமாக பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.
அந்த வகையில் இன்று நாம் காணவிருப்பது அட்சய திருதியை ஆகும். இந்த திரு நாள் சித்திரை மாதத்தில் வருகின்றது. கொளுத்தும் கோடையில் நமக்கு என்னென்ன தேவையோ அவை தான் நமது முன்னோர்களால் அறியப்பட்டும் கடைபிடிக்கப்படும் வந்து அதனை நாமும் கடை பிடிக்க நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
வளம் பல தரும் அட்சய திருதியை
சித்திரை மாதம் தமிழ் மாதத்தின் தொடக்கம் ஆகும். இதனைத் தொடர்ந்து மற்ற மாதங்கள் வருகின்றன. இவ்வாறு ஒரு ஆண்டு வரையிலும் நமது வாழ்வில் அனைத்து வளங்களும் பெருக இந்த நாளை கொண்டாடுகிறோம். அக்ஷய என்றால் வளர்தல் என்று பொருள். குறையாதது என்றும் கொள்ளலாம். அள்ளக் அள்ளக் குறையாமல் இருப்பதை தான் அட்சயம் என்று கூறுவார்கள். அதாவது பெருகுதல், மேன்மை அடைதல் என்று பொருள். நாம் வாழ்வில் வளர்ச்சி காணவும் மேன்மை அடையவும் இந்த நாளில் சிறப்பான, நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் நம் வாழ்வில் நலன்கள் பலவும் பெருகும்.
அட்சய திருதியையின் சிறப்புகள்:
பிரம்மன் உலகத்தை அதாவது முதல் யுகத்தை தோற்றுவித்த நாள் என்று அறியப்படுகின்றது திரேதா யகம் தோன்றிய நாளும் இந்த நாளே என்று அறியப்படுகின்றது. பகீரதன் கங்கை நதியை பூமிக்கு வரவழைத்த நாள் என்று கூறப்படுகின்றது. விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமன் அவதாரம் எடுத்த நாள் அட்சய திரிதியை என்று கூறப்படுகின்றது. வியாசர் கூற விநாயகர் மகா பாரத்தை எழுத ஆரம்பித்த நாள் அட்சய திருதியை நாள் என்று கூறப்படுகின்றது. சிவனின் கையில் ஒட்டியிருந்த கபாலம் நீங்க சிவன் லக்ஷ்மி தேவியிடம் உணவைப் பெற்றது இந்த நாள் தான் என்று புராணங்கள் மூலம் நாம் அறிய முடிகின்றது. திரௌபதியின் மானம் காக்க துரியோதனன் சபையில் அவளின் ஆடையை கண்ணன் வளரச் செய்த நாள் அட்சய திருதியை நாள் தான் என்று கூறப்படுகின்றது.
அட்சய திருதியையில் புனித நீராடல்:
உடல் தூய்மையும் உள்ளத தூய்மையும் நமக்கு என்றும் மிக அவசியம். எனவே தினமும் நமது உடலை தூய்மை செய்து கொள்ள வேண்டியது அவசியம். அட்சய திருதியை போன்ற சிறப்பு நாளில் கங்கை யமுனை காவிரி போன்ற புனித தலங்களில் நீராடுவது புண்ணிய பலனைத் தரும். செல்ல முடியாதவர்கள் அதற்குரிய சுலோகங்களைக் கூறி மானசீக வழிபாடு செய்து குளிப்பது சிறந்தது. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
அட்சய திரிதியை பூஜா விரதம்:
அட்சய திருதியை அன்று விஷ்ணு பூஜை, லக்ஷ்மி பூஜை மற்றும் சிவன் பார்வதி பூஜை செய்வது சிறப்பு. அது மட்டுமன்றி அவரவர் இஷ்ட தெய்வ பூஜையும் செய்யலாம். அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதிபரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை நாளில் வளமும் நலமும் பெருக:
மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறப்படுகின்றது. புதிதாக தொழில் தொடங்குவது புதிதாக ஒரு கலையை கற்பது, புதிதாக அட்சர அப்யாசம் செய்வது, பூமி பூஜை செய்வது போன்ற பல முக்கிய நிகழ்வுகளை இந்த நாளில் தொடங்கினால் அதன் மூலம் நமை பெருகு என்ற நம்பிக்கை காலம் காலமாக நம்மிடையே நிவுகின்றது.
தனம் தான்யம் பெருக தான தர்மங்கள்:
இவ்வுலகில் நம்முடன் பல மனிதர்கள், உறவினர்கள், பொருட்கள் என்று நம்மைச் சுற்றி இருந்தாலும் பர உலகில் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் தான் நம்முடன் இருக்கும் என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து ஆகும். அந்த வகையில் நாம் செய்யும் தான தருமங்கள் நம்மைக் காக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது
அட்சய திருதியை அன்று பூஜை விரதங்கள் மேற்கொண்டு தான தருமங்கள் செய்வதன் மூலம் நம் வாழ்வில் வளங்கள் பெருகும். ஏழைகள், முதியவர்கள், உதவி தேவைப் படுபவர்கள் எனத் தேடி அவர்களுக்கு தானம் அளிக்கலாம். அவ்வாறு தானமாக அளிக்க உகந்த பொருட்கள்:
அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை பிதர்மகடம்` எனப்போற்றுவர். அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்றுநம்மால் இயன்ற தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை அன்று இறைவனை தூய மனதுடன் வழிபட்டு வாழ்வில் வளம் பல பெறுங்கள். நலமுடன் ஆழுங்கள். அட்சய திரிதியை தின நல வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Leave a Reply