குங்குமம் வைப்பது எதற்கு?
நமது இந்து மதத்தில் தொன்று தொட்டு நிறைய பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. நமது முன்னோர்கள் கூறிச் சென்ற பல நல்ல விஷயங்களை நாம் கருத்தில் கொண்டு பின்பற்ற முயற்சி செய்கிறோம் என்று தான் கூற முடியும். ஏனெனில் நாம் அவர்கள் கூறிய அனைத்தையும் பின்பற்றுவதில்லை. காரணம் அவசர கதியிலான யந்திரத்தனமான நமது வாழ்க்கை. மேலும் விஞ்ஞான வளர்ச்சி பெற்ற யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் மூட நம்பிக்கை என்று நினைத்து அவர்கள் கூறிச் சென்ற பல விஷயங்களை பின்பற்றாமல் விட்டு விடுகிறோம். அதனை புறக்கணிக்கிறோம். அலட்சியம் செய்கிறோம் என்று கூறினால் கூட மிகை ஆகாது. அவற்றுள் ஒன்று தான் நெற்றியில் குங்குமம் வைப்பது. அதனைப் பற்றி இக் கட்டுரையில் காண்போம்.குங்குமம் மகிமை பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்.
முற்காலத்தில் திருமணமான பெண்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவர்கள் சில மங்கல அடையாளங்களை தரித்திருபார்கள். தாலி, மெட்டி, குங்குமம், சிந்தூரம் என திருமணமான பெண்களை அடையாளம் காண்பதற்கென்று சில பிரத்தியேக அடையாளங்கள் இருக்கும். திருமணம் ஆன பெண்கள் வகிட்டில் கூட குங்குமம் வைப்பார்கள். எனவே இவற்றைக் கொண்டு திருமணம் ஆன பெண்ணை எளிதில் அடையாளம் காண இயலும்.
சரி, அப்படியானால் குங்குமம் வைப்பது வெறும் அடையாளம் காண மட்டும் தானா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். நமது முன்னோர்கள் கடைபிடிக்கச் சொன்ன ஒவ்வொரு செயலும் நமது ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வை கருத்தில் கொண்டு கூறப்பட்டவை என்றால் அது மிகை ஆகாது.
ஆன்மீக நலம் பெருக்கும் குங்குமம்
உடலே கோவில். உள்ளமே ஆலயம் என்று கூறுவார்கள். நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுவது பக்தி தான். பக்தி என்பது நம்மை நாம் அறிந்து கொள்ள உதவுவது. நமக்கு மேலே நம்மை மீறிய சக்தி தான் நம்மை இயக்குகின்றது என்பதனை உணருவது. அப்படிப்பட்ட உண்மையை, இறைவனை போற்றும் வகையில் தரிப்பது தான் குங்குமம் ஆகும். குங்குமம் இட்டுக் கொள்வதால் பெண்களுக்கு தைரியம். வசீகரம், ஆரோக்கியம் கிடைக்கின்றது. தீர்க்க சௌபாக்கியம் அளிக்கின்றது. மங்களகரமாக இருக்கின்றது. அதனால் தான் ஆலயத்தில் இறைவனிடம் வைத்து, அர்ச்சனை செய்த குங்குமத்தை பிரசாதமாக அளிக்கிறார்கள். அதனை உரிய வகையில் பெற்று பாதுகாத்து நெற்றியில் தரிக்கும் போது, அது நமது அதீத பக்தியைக் காட்டுகின்றது.
அழகைக் கூட்டு குங்குமம்:
ஆன்மீக பயன்பாட்டிற்கு மட்டுமன்றி குங்குமம் அழகு சாதனப் பொருளாகவும் விளங்குகின்றது. தன்னை அலங்கரித்துக் கொள்வது என்பது பெண்மைக்கே உரிய பண்பு.திருமணமான பெண்கள் பலரும் பல அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும் இந்த குங்குமத்தை தனது அழகைக் கூட்டும் வகையில் இட்டுக் கொண்டு பெருமைப் படுகிறார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அழகாக குங்குமம் வைத்துக் கொள்வதும், நெற்றியில்அதனை லாவகமாக வைத்துக் கொள்வதும், வகிட்டின் முன் பகுதியில் அதனை வைத்துக் கொள்வதும் எனப் பல வகைகளில் தங்களை அலங்கரித்துக் கொள்ள இந்தக் குங்குமத்தை வைத்துக் கொள்கிறார்கள்.இதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை பெருகுகின்றது. மேலும் அவர்களைக் காணும் போது லட்சுமிகரமான அவர்களின் தோற்றம் காண்பவர்களுக்கு உற்சாகம் மற்றும் ஆனந்தம் அளிக்கின்றது.
ஆரோக்கியத்தைக் காக்கும் குங்குமம்
சரியான முறையில் தயாரிக்கப்படும் குங்குமம், மருத்துவ குணம் வாய்ந்தது. கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சளானது குங்குமம் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. குங்குமம் தயாரிக்க பயன் படுத்தும் பிற பொருட்களோடு சேர்ந்து வினை புரிந்து இந்த மஞ்சள் இரும்புச் சத்தையும் அளிக்கின்றது. படிகாரம், சுண்ணாம்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு நீரின் உதவியால் குங்குமம் தயாரிக்கிறார்கள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் மருத்துவ குணத்தைப் பெறுகின்றது. சூரியன், சந்திரன் உள்ளிட்ட நவ கோள்களும் இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்களிலும் தமது தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. மருத்துவ குணம் வாய்ந்த இந்தக் குங்குமம் கிருமி நாசினியாகவும், தோலினை காக்கும் மருந்தாகவும் பயன்படுகின்றது. உடலின் உஷ்ணத்தைக் குறைக்கின்றது. பெண்கள் குங்குமம் வைத்துக் கொண்டு வெளியில் செல்லும் பொது சூரிய ஒளி அதன் மீது படுவதால், அது சூரியனின் சக்தியை கிரகித்துக் கொள்கின்றது. அதன் மூலம் சூரியனிடம் இருந்து விட்டமின் “டி” போன்ற சத்து பெற முடிகின்றது. எனவே உடலில் புத்துணர்ச்சியும் சக்தியும் கூடுகின்றது.
அதிர்ஷ்டம் குறையாமல் காக்கும் குங்குமம்:
கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது என்பார்கள். எனவே நெற்றியின் நடுவில் இருக்கும் குங்குமம் திருஷ்டியில் இருந்து காக்கின்றது.
மேலும் புருவ மத்தியில் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது அது ஆக்ஞா சக்கரத்தின் வலிமையை இழக்க விடாமல் காக்கின்றது. இதனால் ஆக்ஞா சக்கரம் வலுப் பெற்று உடல் ஆரோக்கியம் சீர் பெறுகின்றது.ஆக்ஞாசக்கரத்தை குங்குமம் மறைப்பதால் பிறர் நம்மை வசீகரம் செய்யவோ , ஆகர்ஷணம் செய்யவோ இயலாது போகின்றது. அதிலிருந்து விடுபட முடிகின்றது. தெய்வீக தோற்றம், மற்றவர்களிடம் மதிப்பு மற்றும் மரியாதையைப் பெற்றுத் தருகின்றது. உள்ளுக்குள் ஆன்மீக ஒளி பெருகுகின்றது. அதன் மூலம் சிந்தனையும் செயலும் ஒன்று படுகின்றது.
ஸ்டிக்கர் பொட்டோடு குங்குமும் வைக்கலாமே!!
இது போல பல நன்மைகள் அளிக்கும் குங்குமத்தை இன்று நாகரீகம் என்ற பெயரில் பல பெண்கள இட்டுக் கொள்வதில்லை. மேலும் அவசரம், அலுவலகம் செல்வது, வெயிலில் கலையாமல் இருக்க வேண்டும் என்ற பல காரணங்களுக்காக கடையில் விற்கும் ஸ்டிக்கர் பொட்டுகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மேலும் அவை பல வண்ணங்களில் கிடைப்பதன் காரணத்தால் தாங்கள் அணிந்து கொள்ளும் ஆடைக்கேற்ற நிறத்தில் வைத்துக் கொள்ள ஸ்டிக்கர் பொட்டையே நாடுகின்றனர். இது நவீன யுகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஆகி விட்டது. இருந்தாலும், குங்குமம் வைத்துக் கொள்வதையும் பழக்கமாக வைத்துக் கொண்டால் மேலே கூறிய பல நல்ல பலன்களை பெற்று வாழ்வில் மகிழ்ச்சி காணலாம்.
Leave a Reply