(மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை,புணர்பூசம் 1,2,3 ம் பாதம்)
வாழ்வின் நெளிவு, சுளிவுகளை நன்கு புரிந்து கொண்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளை சரியாக பயன்படுத்தி கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு 10 இல் இருப்பதால், தேவையற்ற கவலை, சோம்பலை தவிர்த்து, உங்கள் விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தனித்திறனை வெளிப்படுத்த கடின உழைப்பு தேவை. விவேகமும், மன உறுதியும் இருந்தால் வெற்றி பெறலாம்.
இந்த வருடம் 5/11/2019 வரை குருபகவான் 6 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், 5/11/2019 க்கு பிறகு 7 இல் சஞ்சரிப்பது மிகுந்த நற்பலனை தரும். சனிபகவான் 24/1/2020 வரை கண்டக சனியாகவும் பிறகு அஷ்டமச்சனியாகவும் சஞ்சரிப்பது நன்மை இல்லையென்றாலும், குருபகவான் சேர்க்கை நற்பலனை தரும். ராகு, கேது 1,7 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், கேதுவுடனான குருவின் சேர்க்கையும், ராகுவை குரு பார்ப்பதும் நன்மை தரும். இந்த வருடம் நீங்கள் 50 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.
குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 6 இல் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சீரான உணவு பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். உறவுகள், நண்பர்கள், மற்றவர்களிடம் பகைமை ஏற்பட வாய்ப்புள்ளதால் அளவுடன் பழகுவது நல்லது. சொந்த தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுமை அவசியம்.
குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் வெளி வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவுகள், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். திருமண முயற்சிகள் கை கூடும். குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 1,7 இல் சஞ்சரிப்பதால்மனதில் தேவையற்ற குழப்பமும், மனக்கவலையும் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சந்தேகமும், பயமும் ஏற்படும். சுயமாக முடிவெடுக்க இயலாது. எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்கும். திருமண வாழ்வில் பிரச்சினைகள் உருவாகும். வாழ்க்கை துணையுடன் மனக்கசப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நிலை பாதிப்பு ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே கருத்து மோதல் உண்டாகும். உங்களது தனித் திறமையை வெளிப்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்படும்.
சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் எதிலும் மந்த நிலை உருவாகும். தங்களது முன்னேற்றத்தில் சிறு சிறு தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது.
சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 8 இல் சஞ்சரிப்பதால் தனது செயல்பாடுகளில் தடைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்கும்.தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விலகி இருங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை தொடர்ந்து கண்காணித்து உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து செயல்பட்டால் உங்கள் முன்னேற்றத்திற்கான இடர்பாடுகளை தவிர்த்து வெற்றி பெறலாம். உங்கள் நோக்கத்தில் கவனச் சிதறல்களை தவிர்க்கவும். உடல் நலத்தில் அக்கறை தேவை.
வியாபாரிகளே:
5/11/2019வரை வியாபாரத்தில் நிலையற்ற தன்மையும், பிரச்சினைகளும் உருவாகும். பணப்புழக்கம் குறையும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் பிரச்சினை உருவாகும் என்பதால் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. 5/11/2019 க்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களே:
5/11/2019 வரை உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் பிரச்சினைகள் உருவாகும். சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் சிறு, சிறு பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். 5/11/2019 க்கு பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மாணவ மாணவியர்களே:
5/11/2019 வரை உடல் ஆரோக்கிய பாதிப்பால் படிப்பில் கவனக்குறைவு ஏற்படாமல் பார்த்து கொள்ளவும். காதல் போன்ற விசயங்களால் வீண் பிரச்சினையில் சிக்க வேண்டாம். நண்பர்கள், ஆசிரியர்களிடம் நல்ல உறவை வளர்த்து கொள்ளுங்கள். விடாமுயற்சி வெற்றி தரும். 5/11/2019 க்கு பிறகு நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்
அரசியல்வாதிகளே:
5/11/2019வரை தலைமையுடன் மனகசப்புகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். சகாக்களால் மறைமுக பிரச்சினைகள் உருவாகும். பகைமையை தவிர்க்கவும். மக்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். தேவை இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தவறான செயல்பாடுகள் மற்றவர்களால் கவனிக்கப்படும் என்பதால் கவனம் தேவை. 5/11/2019 க்கு பிறகு சுமூகமான நிலை உருவாகும்.
கலைத்துறையினரே:
5/11/2019 வரை தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்பு கிடைப்பதற்கு தாமதம் ஆகலாம். பிரபலங்களை பகைத்து கொள்ள வேண்டாம். உங்கள் தனித்திறனை வெளிப்படுத்த இயலாமல் போகலாம். பொறுமையும், கவனமும் அவசியம். 5/11/2019 க்கு பிறகு நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
பரிகாரம்:
- ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழி படுவதும் நன்மை தரும்.
- ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- குழந்தை மற்றும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல். ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குதல்.
Leave a Reply