ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவம் தீர்த்தவாரி:
ஐப்பசி மாதம் வந்துவிட்டாலே ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் அம்மா மண்டபத்தில் இருந்து தங்கக் குடத்தில் காவிரி நீர் எடுத்து கொண்டு போய் நம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த ஊஞ்சல் உற்சவத்தையொட்டி உற்சவம் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடி மரத்தில் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்த கோடிகளுக்கு காட்சியளிப்பார். ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
உற்சவத்தின் 7ம் நாளன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருள்வார். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைவார்.
அன்றைய தினம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு மூலஸ்தானம் சென்றடைவார். விழாவின் நிறைவு நாளில் சந்திர புஷ்கரணியில் காலை தீர்த்தவாரி நடைபெறும். அப்போது நம்பெருமாள் சாளக்கிரம மாலை அணிந்து சேவை சாதிக்கிறார்.
தீர்த்தவாரியுடன் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவ சேவை நிறைவுபெறும். அடுத்த வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் தயாராவது வழக்கம்.
Leave a Reply