கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 10ஆம் வீடு, 12ஆம் வீடு, மற்றும் 2 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 10 ஆம் வீடு என்பது, வேலை, தொழில், செயல்கள், பூஜை, கௌரவம், சமுதாய நிலை, சாதனைகள், வெற்றிகள் போன்றவற்றையும், 12 ஆம் வீடு, மோட்சம், நஷ்டம், செலவுகள், ரகசியங்கள், வெளிநாடுகளில் குடியேறுதல், முதலீடு, தான தர்மம் ஆகியவற்றையும், 2 ஆம் வீடு என்பது செல்வம், குடும்பம், பேச்சு மற்றும் குரல், எண்ணங்கள், ஆரம்பக் கல்வி, உலக உடைமைகள், சொத்து, ஆடைகள், கோபம், வாத விவாதங்கள் போன்றவற்றையும் குறிக்கிறது.
சிம்ம ராசி அன்பர்கள் இந்த குரு பெயர்ச்சி காலக் கட்டத்தில் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நோய் தொற்றுகள் ஏற்படாத வகையில் உங்களை காத்துக் கொள்ளுங்கள். பிறரின் போட்டி பொறாமைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் சாத்தியம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
இந்தக் காலக் கட்டத்தில் உங்கள் நிதிநிலையும் உங்களுக்கு சாதகமாகவோ திருப்திகரமாகவோ இருக்காது. செலவுகள் யாவும் உங்கள் கட்டுக்குள் இருந்தாலும் எதிர்காலத்திற்கு சேமிக்க இயலாது. செலவுகள், பொதுவாக, நல்ல விஷயங்களுக்காகச் செய்யப்படுபவையாகவும் இருக்கும். உங்கள் பொருளாதார நிலையை நன்கு உணர்ந்து, அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இது சரியான நேரமாக இருக்கும். இப்பொழுது கடன் வாங்கவோ அதற்கு விண்ணப்பிக்கவோ வேண்டாம். அப்படி வாங்கினால், அதை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது கடினமாக இருக்கக் கூடும். பணப்பற்றாக்குறை காரணமாக, உங்கள் பழைய கடன்களையும் அடைக்க முடியாமல் போகலாம். பணியைப் பொறுத்தவரை இந்தக் காலக் கட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கும். ஊக்கத் தொகை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நீங்கள் விரும்பிய இடமாற்றம் போன்றவை நீங்கள் விருப்பும் வகையில் இருக்கும். கடின உழைப்பு, உங்கள் வேலை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். உங்கள் தலைமைப் பண்பு பலராலும் நன்கு போற்றப்படும் அதே நேரம், உங்கள் புகழும், கௌரவமும் கூட அதிகரிக்கும்.
வேலை, தொழில்
பணியில் முன்னேற நீங்கள் முழு மூச்சுடன் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வெற்றியும் பெறுவீர்கள். நீங்கள் வேலை செய்பவராக இருந்தாலும் சரி தொழில் முனைவோராக இருந்தாலும் சரி, உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீங்கள் கவனத்துடனும், பொறுமையுடனும் கையாளுவீர்கள். சிக்கலான தருணங்களையும், நீங்கள் நன்கு சமாளிப்பீர்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் சேவைகளை வழங்குவார்கள். தொழிலில் பொதுவாக, சராசரி பலன்கள் கிட்டும். வேலைவாய்ப்பு, நிதி, மருத்துவம், ஏற்றுமதி, வெளிநாட்டு வியாபாரம் போன்ற தொழில்கள் சிறந்து விளங்கும். அதே நேரம், மொழி, தகவல் தொடர்பு, கமிஷன், ஒப்பந்தம், தொழிலாளர் தொடர்பானவை அதிக முன்னேற்றம் காணாமல் போகலாம்.
நிதி
சொத்து வாங்கல் விற்றல் மற்றும் பரம்பரை சொத்து மூலம் ஆதாயம் பெறுதல் போன்றவற்றிற்கான வாய்புகள் குறைவு. உங்கள் செலவுகள் கட்டுக்குள் இருந்தாலும் எதிர் காலத்திற்கு சேமிப்பு என்பது இயலாது போகும். செலவுகளைப் பொறுத்தவரை, உணர்ச்சி வசத்தில் செய்யும் திடீர் செலவுகளையும், ஆடம்பரங்களையும் கட்டுக்குள் வைப்பது அவசியம். சுப செலவுகளாகவே இருந்தாலும், இவற்றைக் கட்டுக்குள் வைப்பது, உங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நல்லது. கடன்களைப் பொறுத்தவரை மிகுந்த எச்சரிக்கை தேவை!
குடும்பம்
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி கலகலப்பாகச் செல்லும். குடும்ப விவகாரங்களை நீங்கள் சிறந்த முறையில் சமாளிப்பீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் நடந்து கொள்வீர்கள். சாதுர்யமாக நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் குடும்பத்தை சரியான வகையில் நடத்திச் செல்லலாம். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வேலையில் மும்மரமாக இருப்பதால் உங்களுடன் அவர்கள் நேரம் செலவிட முடியாமல் போகலாம். புரிந்து கொண்டு நடந்து கொண்டால் மனதில் கவலை எழாது.
கல்வி
ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கவனக் குறைவு ஏற்படும் என்பதால் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும். தீய சகவாசம் தீய பழக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். சக மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். வெளிநாட்டுக் கல்விக்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது கடினமான நேரமாகவே இருக்கும். ஆனால் கடும் முயற்சி, நல்ல பலன்களைப் பெற்றுத் தரலாம்.
காதலும், திருமண வாழ்க்கையும்
காதலர்கள், திருமணமான தம்பதிகள் மற்றும் திருமணத்திற்கு தக்க துணை தேடிக் கொண்டு இருப்பவர்கள் என அனைவருக்கும் இது சராசரியான பலன் கிடைக்கும் காலம் எனலாம். காதலர்கள் பரஸ்பரம் நல்லுறவை வளர்க்க முயல வேண்டும். கணவன் மனைவி பழைய சண்டைகள், பிரச்சைனைகள் ஆகியவற்றை நினைவு கொள்ளாமல், இனிமையான வாழ்க்கைக்கான புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது. திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் வரன் தேடுவதற்கு இது சுமாரான காலம் தான் என்றாலும், இந்த விஷயத்தில், உங்கள் உண்மையான முயற்சிகள் நல்ல பலன் தரும்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் பராமரித்தால் ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் இல்லாமல் காத்துக் கொள்ளலாம். சிலர் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தாலும், இது அடிக்கடியோ, தொடர்ந்தோ நேராது. ஆனால், தொற்று நோய் உங்களைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகுந்த பலனளிக்கும் எனலாம். பொதுவாக நீங்கள் பாதுகாப்புடன் இருப்பதும் நன்மை தரும். குறிப்பாக, வயிற்றின் கீழ்ப்பகுதி, முகம், தொண்டை ஆகியவற்றில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தினரின் உடல்நிலை சுமாராக இருக்கும். ஆனால் பெரிய நோய்நொடி எதுவும் வர வாய்ப்பில்லை.
எளிய பரிகாரங்கள்
- இந்தப் பெயர்ச்சி காலத்தில், கடவுள் மீது அதிக நம்பிக்கை வைக்கவும்
- சனிக்கிழமைகளில் ‘விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்யவும்
- கீழ்க்கண்ட குரு பகவான் மந்திரங்களை, வியாழக்கிழமை 108 முறை ஜபம் செய்யவும்:
- ‘ஓம் ஸ்த்ரீம் ப்ரஹம் பிருஹஸ்பதயே நமஹ’ ‘ஓம் சுராசார்ய வித்மஹே, சுரஸ்ரேஷ்டாய தீமஹி, தன்னோ குருஹ் ப்ரசோதயாத்’
- அர்ச்சகர்கள், முதியவர்கள், படித்த பண்டிதர்கள் போன்றவர்களை மதித்து நடக்கவும்
Leave a Reply