விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் ஸ்ரீ ராமாவதாரம் ஆகும். ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். சீதாதேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்து, தந்தைக்கு கொடுத்த சத்தியத்திற்காக வனவாசம் சென்று, ராவணனை சம்காரம் செய்து சீதையை மீட்டு, ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்த அவதாரம் இது. இந்து மதத்தின் படி, ஸ்ரீ ராமர் சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷ (வளர்பிறை)நவமி அன்று அவதரித்தார். ராமர் அவதரித்த நாளே ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.
ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. அன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். ராம அஞ்சநேய வழிபாட்டால் பிரிந்த தம்பதியர்கள் கூட ஒன்று கூடுவார்கள்.
ஸ்ரீ ராம நவமி பூஜை முறை
ஸ்ரீ ராம நவமி அன்று அதிகாலை எழுந்து வீட்டை தூய்மை செய்ய வேண்டும். முதல் நாளே செய்து கொள்வது நல்லது. பிறகு குளித்து முடித்து தூய ஆடை அணிய வேண்டும். பூஜை அறையில் ஒரு மனை மீது ராமர் படத்தை வைக்க வேண்டும். பூஜை அறை இல்லாதாவர்கள் தூய்மையான இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தில் படத்தை வைக்க வேண்டும். தனிப் படமாக இல்லாமல் ராமர் பட்டாபிஷேக படத்தை வைக்கலாம். பிறகு அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு துளசி மாலை அணிவிக்க வேண்டும். அதன் பின் பழம், வெற்றிலை, பாக்கு, பூ வைத்து ஸ்ரீராம நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் தூப தீபாரதனைகளை செய்ய வேண்டும் வழிபாட்டின் போது நிவேதனமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயசம், வடை போன்றவற்றை படைக்கலாம். அன்றைய தினம் ராமர் அர்ச்சனை முடிந்தபின் நிவேதனமாக சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
விரத முறை
அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தலாம். கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் ராம பக்த ஆஞ்சநேயரையும் ராம நாமத்தைச் சொல்லி வணங்கலாம். ராம என்ற நாமம் அல்லது ஸ்ரீ ராம ஜெயம் என்று 108 முறை அல்லது 1008 முறை எழுதுவதோ ஜெபிப்பதோ நல்லது. ராம நாமம் தாரக மந்திரம் என்று கூறுவார்கள். அட்டாட்சர மந்திரத்தில் வரும் “ரா” என்ற எழுத்தும் பஞ்சாட்சர மந்திரத்தில் வரும் “ம” என்ற எழுத்தும் இணைந்து “ராம” என்று வரும் நாமம் சைவ வைணவ ஒற்றுமையைக் குறிக்கும் நாமம் ஆகும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து, அன்பும் அறிவும் உண்டாகும். மன அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.
பலன்கள்
நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
திருமண நிகழ்சிகள் கை கூடும்.
பிரிந்த தம்பதிகள் இணைவார்கள்.
எதிரிகள் தொல்லை ஒழியும்.
நோய்கள் அகலும் நீளாயுள் கிட்டும்.
செல்வங்கள் பெருகும்
ஆஞ்சநேயரின் அருள் கிட்டும்.
Leave a Reply