எளிய வகையில் எந்த செலவும் இல்லாமல் பித்ரு சாபம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கான வழி முறை

இந்து மதத்தில் 13 வகை சாபங்கள் உள்ளன. அவை பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம்,ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என இந்த சாபங்கள் மனிதர்களை பாதிக்கின்றன.இவற்றுள் இந்தப் பதிவில் நாம் காண இருப்பது பித்ரு சாபம் மற்றும் அதில் இருந்து செலவு இல்லாமல் விடுபடுவதற்கான வழி.
பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். அவர்கள் மனம்நொந்து விடும் பெருமூச்சே சாபமாக மாறி விடும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் திருமணத்தடை மற்றும் திருமண வாழ்வில் தீராத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதியின்மை, நிம்மதியின்மை இருக்கும். மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் தடைகளை சந்திக்க வேண்டி வரும்.
செலவே இல்லாமல் பித்ரு சாபம் அல்லது பித்ரு தோஷம் நீங்க மந்திரம் :
பித்ருகாரகன் என்று சூரிய பகவானை நாம் போற்றுகிறோம். சூரிய பகவானை வணங்குவதன் மூலம் பித்ரு சாபம் மற்றும் பித்ருதோஷம் நீங்கும். எனவே தான் நமது முன்னோர்கள் சூரிய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சூரியன் உதிக்கும் நேரத்தில் தான் சூரிய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.சூரியனை நாம் வணங்க வணங்க நமது பித்ரு சாபங்கள் மற்றும் தோஷங்கள் விலகும். ஆண்கள் குளித்து முடித்து ஈரத்துணியுடன் சென்று சூரிய நமகாரம் செய்ய வேண்டும். பெண்கள் குளித்து முடித்து வீட்டில் விளக்கேற்றி மந்திரம் சொல்லி விட்டு பிறகு சூரியனை நோக்கி வணங்க வேண்டும். சூரிய உதய நேரத்தில் வெட்டவெளி அல்லது மாடிக்கு சென்று சூரியனைக் கண்டு கைகூப்பி தண்ணீர் விட்டு, சிகப்பு நிற மலரை சமர்ப்பணம் செய்து வணங்கலாம். அவ்வாறு வணங்கும் பொழுது
“ஓம் ஆதித்யாய நமஹ”
என்னும் மந்திரத்தை 7 முறை 9 முறை அல்லது 11 முறை கூற வேண்டும்.
அல்லது
ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்! சஹ சிவ சூர்யாய வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா
இந்த எளிய மந்திரத்தை தினமும் 108 முறை கூற வேண்டும். ஞாயிற்றுக் கிழமை அமாவாசை அன்று ஆரம்பித்து தினமும் கூறிவர வேண்டும். தினமும் கூற இயலாவிடில் அமாவாசை அன்று மட்டுமாவது கூறுவதன் மூலம் பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபங்கள் நீங்கும்.
