வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி. (பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).
தை மாதத்தில் கொண்டாடப்படுவது ச்யாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி, இல்லங்களில் கொண்டாடப்படும் இனிய திருவிழா ஆகும். புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
கொலு வைத்து கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழா பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்றாலும் நவராத்திரி திருவிழா, விழாவாக மட்டுமன்றி விரதமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்றால், நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். நவராத்திரி விரதம் பற்றி சில அறியாத தகவல்களை நாம் அறிந்து கொள்வோம் வாருங்கள். நவம் என்றால் ஒன்பது என்பதை நாம் அறிவோம். நவராத்திரியில் ஒன்பது நாட்களும் பகல் பொழுது முழுவதும் விரதம் இருந்து, பூஜை அர்ச்சனை, ஆரத்தி செய்து தேவியை வணங்கி, விருந்தினர்களை வீட்டிற்கு அழைத்து உபசரித்து அவர்களை மகிழ்வித்து, இரவில் விரதம் முடிப்பார்கள். அன்றைய நாட்களில் வீட்டிற்கு வரும் யாவரும் தேவியின் அமசமாகவே அறியப்படுகிறார்கள். குறிப்பாக சுமங்கலிப் பெண்களும், பூப்படையாத கன்னிப் பெண்களும் சாட்சாத் அம்மனின் அம்ஸமாகவே கருதப்படுகிறார்கள். ஒன்பது நாட்களும் இவர்களை உபசரிப்பதே விரதத்தின் ஒரு அம்சமாகும். முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியின் அம்ஸமாகவும், இரண்டாவது மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியின் அம்ஸமாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் அம்ஸமாகவும் பெண்கள் கருதப்படுகிறார்கள்.
வீட்டை தூய்மையாக வைத்துக் கொண்டும், தூய நல்ல ஆடைகள் உடுத்திக் கொண்டும். மனதில் நல்ல சிந்தனைகளை இருத்திக் கொண்டும் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். தேவியை போற்றிப் பாடும் பாடல்கள், சுலோகங்கள் போன்றவற்றின் மங்கள ஒலி வீட்டில் ஒலிக்கச் செய்வார்கள். இந்த நாட்களில் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகின்றது. சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து பாத பூஜை செய்து அவர்கள் மனம் மகிழும் வகையில் உணவளித்து மங்கலப் பொருட்களை அளித்து வாசல் வரை சென்று அவர்களை வழியனுப்பி வைப்பார்கள்.
அதே போல கன்னிப் பெண்களை அழைத்து, புத்தாடைகளை வழங்கி அவர்களை அணிய வைத்து அலங்கரிப்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும். அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கி, வளையல், பொட்டு போன்ற சில பரிசுகளையும் வழங்கி அவர்களை மகிழ்விப்பார்கள். அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றி கூறும் வகையில் வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பார்கள்.
அறியாமை இருள் நீங்கி மனதில் அருள் நிறைந்திருக்க வேண்டி அகண்ட தீபம் எனப்படும் அணையா விளக்கு ஏற்றுவது சிலருடைய குடும்ப வழக்கமாக இன்றும் வழக்கில் இருக்கின்றது. ஒன்பது நாட்களும் பகல் இரவு என 24 மணி நேரமும் விளக்கு அணையாத வகையில் ஏற்றி வழிபட்டு வாழ்வின் இருள் நீங்க வேண்டி நோற்கும் விரதமாகவும் நவராத்திரி விழா அமைந்துள்ளது.
நவராத்திரி விரதம் மேற்கொள்வதன் மூலம் தேவியானவள் மனம் மகிழ்ந்து அருள் புரிவாள் என்ற நம்பிக்கை தோன்று தொட்டு இருந்து வருகின்றது. அன்னையின் அபரிமிதமான அருளைப் பெரும் பேற்றை இந்த விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் பெறலாம்.
Leave a Reply