இந்த பூமியில் வாழ்க்கை என்னும் பாதையில் நாம் அனைவரும் பயணம் செய்தாலும் நமது இலக்கு, திசை, நோக்கம் வெவ்வேறாகத் தான் இருக்கின்றது. இதனை நாம் யாரும் மறுக்க இயலாது. நமது உடல் இயக்கமும், நமது உள்ளம், உணர்வு சார்ந்த அத்தனை இயக்கங்களும் இறையருளால் தான் நடக்கின்றது. நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்றால், அது உங்கள் சக்திக்கும் மீறிய ஒரு இயற்கை சக்தி என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் வகுத்த பாதையில் நாம் நமது வசதிக்கென்று காலத்திற்கு தக்கவாறு பல மாற்றங்களை செய்து கொண்டு வாழ்வில் முன்னேற நினைக்கிறோம். எது நம்மை வழி நடத்துகின்றது? எது நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றது? இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியாய் இருக்கும் நமது வாழ்வில் நமது அத்தனை இயக்கங்களும் கிரகங்கள் மூலமாக, நட்சத்திரங்கள் மூலமாக வழிநடத்தப்படுகின்றன என்று கூறினால் அது தான் நிதர்சனமான உண்மை. ஒருவருடைய ஜாதகப்படி, பிறக்கும் போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தின், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களை முக்கியமாகக் கருதினார்கள். அவற்றுள் மூன்றாவதாக வரும் நட்சத்திரம் கிருத்திகை நட்சத்திரம் ஆகும்.
இது வான் மண்டலத்தில் 26 பாகை 40 கலை முதல் 40 பாகை வரை வியாபித்து உள்ளது. இது ஆறு நட்சத்திரங்களைக் கொண்டது. இது கத்தி போல் தோற்றமளிக்கும் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதங்கள் கொண்டது. இதன் முதல் பாதம் மேஷ ராசியிலும் மீதி மூன்று பாதங்கள் ரிஷப ராசியிலும் உள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆவார்.
ஒரு மனிதனின் குண இயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு இருக்கின்றது. அதே சமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெற அல்லது நிவர்த்தி செய்து கொள்ள இறையருளால் இயலும்.
அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கென்று, தேவதை, உருவகம், பறவை, மிருகம், விருட்சம் என்று உள்ளது. அந்த வகையில் கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் . இதன் அதி தேவதை அக்னி. அக்னியின் இயல்பு ஊடுருவிச் செல்லக் கூடியது. காயம் ஏற்படுத்தக் கூடியது. எனவே இவர்கள் குறை கூறுபவர்களாகவும் விமர்சகர்களாகவும் இருப்பார்கள்.
இந்த நட்சத்திரம் பெண் பாலினத்தை சார்ந்தது. இதன் நிறம் சிகப்பு ஆகும். இராட்சஸ கணத்தை சார்ந்தது. இதன் பறவை மயில் ஆகும். இதற்கு வணங்க வேண்டிய, வளர்க்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய மரம் அத்தி மரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் தோன்றியவர் கார்த்திகேயன் எனப்படும் முருகன் ஆவார். இந்த நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் : எரி நாள், நாவிதன், அங்கி, இறால்.
கிருத்திகை நட்சத்திரம் குணங்கள்:
இவர்கள் அறிவாற்றலும் திறனும் மிக்கவர்கள். தூக்கத்துக்கான நேரம் இவர்களைப் பொறுத்தவரை குறைவாகவே இருக்கும். இவர்கள் திடமான புத்தி உடையவர்கள். ஆனால் உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் மீது விரோதம் காட்டுவார்கள். இவர்கள் பெரும்பாலும் நேர்மையும் நாணயமும் உடையவர்களாக இருப்பார்கள்.
அரசியல் செல்வாக்கும் அதனால் ஆதாயமும் பெறக் கூடியவர்கள். அனுசரித்து போக விரும்ப மாட்டார்கள். இதனால் கருத்து வேற்றுமை மற்றும் சண்டை சச்சரவுகளை சந்திப்பார்கள். உறுதி பிடிவாதம் கர்வம் உடையவர்கள். இவர்கள் பெருகின்ற வெற்றிகள் அதிகம்,. வாழ்வில் புகழும் முக்கியத்துவமும் அடைவர்.
அதீதமான தெய்வ பக்தி இருக்கும். அதே நேரம் அந்த தெய்வ பக்திக்கு நிகரான தாய், தாய் நாடு, தாய் மொழி பற்று, பாசம் இருக்கும். 33 வயதிற்குப் பிறகு இவர்களின் வாழ்வில் ஏற்றங்கள் உண்டாகும். முன் பின் அறிமுகமில்லாதவர்களின் நட்பால் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
உங்கள் நட்சத்திரக் குறியீடும் உங்கள் குணங்களும்:
ஒரு நபரின் வாழ்க்கை ரகசியம் அவர் பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்ஸங்களையும் பொருத்து அமையும். உதாரணமாக கிருத்திகை நட்சத்திரத்தின் உருவம் கத்தி ஆகும். எனவே இவர்களிடம் போர்க் குணம் காணப்படும். அடிக்கடி போர், சண்டை சச்சரவுகளை சந்திப்பார்கள். அக்னி குறியீடு என்பதால் இவர்கள் நன்கு சமையல் செய்வார்கள். இவர்களுக்கு ஜீரண சக்தியும் அதிகம் இருக்கும். கார்த்திகை பெண்களால் முருகன் வளர்க்கப்பட்ட காரணத்தால் இவர்கள் தங்கள் குழந்தைகளை மட்டுமின்றி பிற குழந்தைகளையும் தாய் போல வளர்ப்பார்கள். அவர்கள் மீது அக்கறை காட்டி பாதுகாப்பார்கள்.
உங்கள் நட்சத்திர விருட்சமும் உங்கள் குணங்களும்:
உங்கள் நட்சத்திர விருட்சம் அத்தி மரம் ஆகும். அத்தி மரம் முழுக்கவும் அரிவாளால் கொத்தப்பட்ட தழும்புகளைப் பார்க்கலாம். அது போல இவர்கள் பிறரால் காயப்படுத்தப் படுவார்கள். உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் மீது விரோதம் காட்டுவார்கள்.அத்தி மரத்தில் பூ பூப்பது கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அது போல வசதிகள் பல இருந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல் எளிமையாக வாழ்வார்கள்.
கிருத்திகை நட்சத்திரத்தின் அடையாளங்கள் :
கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை
கிருத்திகை தொழில் ஆர்வங்கள்:
சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்கும். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள்
விருப்பமான செயல்கள் :கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலைகளிலும் சாரணர் இயக்கத்திலும் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர்கள்.பிரயாணங்கள், மருந்துப் பொருட்கள், ஆபரணங்கள் தயாரித்தல், கட்டிடக் கலை பற்றிய படிப்பு, வாங்கல் விற்றல், யானை, குதிரை சவாரி, வண்டி மற்றும் வாகனங்கள் ஒட்டுதல்.
நோய் :மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுக்கடுப்பு, வெள்ளைவாதநோய், மலக்கட்டு, ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு காதுவலி
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியிலும் மீதமுள்ள மூன்று பாதங்களும் ரிஷப ராசியில் அமைகின்றது. ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் வெவ்வேறு குணநலன்கள் காணப்படும். அதனை இப்பொழுது காண்போம்.
கிருத்திகை பாதம் 1
கிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் பூமி, நிலம் வீடு என்று சுக சௌகரியங்கள் உடையவர்களாக இருப்பார்கள். மாடு கன்று என்று கூட வைத்திருப்பார்கள். மிருகங்களிடம் அன்பானவர்கள். செல்வந்தர்களாக யாருப்பர்கள். முன் கோபிகளாக இருப்பார்கள். ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுபவர்கள். சுய கௌரவங்கள் உள்ளவர்கள். பலவீனமான ஆரோக்கியம் கொண்டவர்கள் என்பதால் இவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுவார்கள். கல்வியில் அதிக ஈடுபாடு காட்ட மாட்டார்கள். திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். புத்தி கூர்மை மிக்கவர்கள்.
கிருத்திகை பாதம்2:
இவர்கள் விடா முயற்சி உடையவர்கள். கோபம் பொறாமை, பழி வாங்கும் குணம் போன்றவை இருக்கும். இவர்கள் எளிதில் தன்னம்பிக்கை இழப்பவர்கள். மத நம்பிக்கை இல்லாதவர்கள். அது சம்பந்தமான கடமைகளை சரிவர செய்யாதவர்கள். அதாவது ஆச்சார அனுஷ்டானங்களை நம்பிக்கையுடன் பின்பற்றாதவர்கள். விஞ்ஞானம் மற்றும் புராணங்கள் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள். மூர்க்க குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் கெட்ட அல்லது தீய சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். பிறருக்கு ஆத்திரம் ஊட்டுபவர்களாக இருப்பார்கள்.
கிருத்திகை பாதம்3 :
இவர்கள் தைரியமானவர்கள். இவர்களிடம் பேராசை, பணவெறி, எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும். இவர்கள் பிறருக்கு தொல்லைகள் தருபவர்களாக இருப்பார்கள். இவர்கள் கேட்டவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். மந்தமான இயல்பு உடையவர்கள்.
கிருத்திகை பாதம்4:
இவர்கள் ஏழ்மை உடையவர்களாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் குறைவாக இருக்கும். இவர்கள் எப்பொழுதும் துக்கத்திலேயே வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.கல்வியில் ஊக்கம் இருக்காது. அடக்கம், ஒழுக்கம், நட்பு, பாசம் போன்ற நல்ல இயல்புகள் இவர்களிடம் இருக்கும். தர்ம சிந்தனையும், இரக்ககுணமும் தெய்வ பக்தியும் இந்தப் பாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பு அம்சங்கள்.
காயத்திரி மந்திரம்
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
இந்த நட்சத்திரத்தில் செய்யும் சுப காரியங்கள்
ஹோமம் செய்தல், சமையல் செய்தல்,கடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் போன்ற கலைகள் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற் கொள்ள பழைய வாகனங்களை விற்க இந்த நட்சத்திர நாள் நல்லது.
இந்த நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவைகள்:
கடன் கொடுத்தல், கடன் வாங்குதல், பிராயாணம் செய்தல், ஆபரேஷன் செய்தல் கூடாது.
இந்த நட்சத்திரத்தின் எழுத்துக்கள் :
முதல் பாதம் அ
இரண்டாம் பாதம் இ
மூன்றாம் பாதம் உ
நான்காம் பாதம் எ
Read more : https://www.astroved.com/tamil/
Leave a Reply