பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் வரும் சோமவாரம் விசேஷமானது. சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு திங்கள் என்று மற்றொரு பெயரும் உண்டு. சந்திரனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. அந்த கிழமையையே சோமவாரம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் மேற்கொண்டால் கயிலைநாதன் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரத்தை அருள்வார். காரணம், இந்த சோமவார விரதத்தின் சிறப்பை சிவபெருமானே அன்னை பார்வதி தேவிக்கு சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
சந்திரன் பெற்ற பாக்கியம்
ஒருமுறை கயிலாயத்தில் தனித்திருந்தார் சிவபெருமான். தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் என அனைவரும் அவரை சுற்றிலும் துதித்துக் கொண்டிருந்தனர். அவ்வேளை அன்னை பார்வதி அங்கு வந்து சிவனை வணங்கி நின்றார். புன்னகைத்த சிவபெருமானின் ஜடாமுடி அசைந்தது. அதில் சந்திரன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட அன்னை பார்வதிக்கு ஒரே ஆச்சர்யம், தனது சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு அவனுக்கு எப்படி வாய்த்தது? என்று. சிவனிடமே அன்னை பார்வதி, “சுவாமி தங்கள் ஜடாமுடியில் அமரும் பாக்கியத்தை சந்திரன் எவ்வாறு பெற்றான்?” என வினவினாள்.
சிவபெருமானும் முறுவலித்துக் கொண்டே, “சந்திரன் என்னை நோக்கி விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம்” என்றார். அதற்கு அன்னை பார்வதியும், மற்றும் அங்கிருந்தவர்களும் அந்த விரதம் குறித்து தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்றும், தாங்களும் பெருமானின் கடாட்சத்தை பரிபூரணமாய் பெற வழி செய்ய வேண்டும் என கேட்டனர். அதன்படியே சிவபெருமான் சோமவார விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார் என்று புராணம் கூறுகிறது.
சோமவார விரதத்தை எப்படி மேற்கொள்வது?
கார்த்திகை முதல் திங்கட்கிழமை தொடங்கி, கடைசி திங்கள் அன்று இந்த விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வருடம் கார்த்திகையில் ஐந்து திங்கட்கிழமைகள் வருகின்றன. சிவபூஜையை முறையாக செய்பவர்கள், காலை நன்னீராடி, தினசரி கடமைகளை முடித்துவிட்டு, வீட்டில் தீபமேற்றி, சிவபெருமானை குறித்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும். முதியோர்கள் இருவரை தம்பதி சமேதராக வரவழைத்து, அவர்களையே பார்வதி, பரமேஸ்வரனாக பாவித்து அவர்களுக்கு தானம் அளித்து, ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும்.
வீட்டில் சிவபூஜை செய்து பழக்கமில்லையெனில், அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பஞ்சாமிர்தத்தால் அபிஷேகமும், அர்ச்சனைகளும் செய்ய வேண்டும். அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். பின்பு வீடு வந்து ஒரு வேளை சைவ உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். இரவில் உறங்கி, மறுநாள் பொழுது விடிந்ததும் நீராடி, சோமவார விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விரதம் மேற்கொள்வதன் வாயிலாக சிவபெருமானின் அருளாசிகள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
நாரதர் சொன்ன சோமவார விரதம் சிறப்புகள்
ஒரு முறை சோமவார விரதத்தின் மேன்மையைப் பற்றி நாரத மகரிஷியிடம் வினா எழுப்பினான் பாண்டவ மைந்தன் தர்மராஜன். நாரதர், “பாண்டுவின் மைந்தனே சோமவார விரதம் அளவற்ற பயனை அளிக்கக்கூடியது. அதுவும் கார்த்திகை மாத சோமவார விரதம் இன்னும் சிறப்பானது. கார்த்திகை மாதத்தில் வரும் முப்பது நாட்களுமே சிறப்பு வாய்ந்தவை தான். இம்மாத சோமவாரத்தில் ஈசனின் சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுபவன், தன் குலத்தில் இருந்த பித்ருக்களை நரகத்திலிருந்து விடுவிக்கிறான். அவனது முன்னோர்கள் நற்கதியைப் பெறுவார்கள். இந்த தினத்தில் சிவபூஜை செய்பவனது அனைத்து பாவங்களும் அகலும். சோமவாரத்தில் சிவலிங்கத்தை ஒரு அந்தணருக்கு தானமாக கொடுத்தால் அதுவே உயர்ந்த தர்மமாகிறது. சிவபெருமானுக்கு கோயிலில் காட்டப்படும் தீபராதனை தீபத்தை தம் விரல்களால் தொட்டு உடலில் தடவிக் கொண்டால் குஷ்டரோகம் போன்ற கொடிய நோய் கூட நீங்கும்.
ஜுரம் முதலிய நோய்களும் நீங்கும்.
தர்மபுத்திரனே! நீ ஞானம் பெற்று, மோட்சத்தை அடையவும், சம்ஸாரத்தில் உள்ள சங்கடங்கள் நீங்க வேண்டும் என்றும் விரும்புவாயானால், சிவபெருமானுக்கு விளக்கேற்றி அர்ச்சிப்பாயாக” எனக் கூறினார் நாரதர்.
ஆகையால் பக்தர்களே, அனைவரும் சோமவார விரதத்தை கடைப்பிடித்து, வீடுகளில் அதிகாலையிலும், மாலை வேளையிலும் விளக்கேற்றி வழிபடுவோம். சகல ஐஸ்வர்யங்களையும் எம்பெருமான் ஈசனிடமிருந்து பெறுவோமாக. ஓம் நமசிவாய வாழ்க!. மேலும் பலன்கள் மற்றும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள
Leave a Reply