கந்தர் அநுபதி பாடல் :
தமிழ்க் கடவுளாகவும், அழகின் அம்சமாகவும் முருகப்பெருமான் விளங்குகிறார். தமிழர்கள் மலைப்பகுதியை அதாவது இயற்கையை வணங்கி வந்தனர். இயற்கை என்றால் மரம், செடி, கொடி, அதில் உள்ள விலங்குகளையும் வணங்கி வந்தனர். அப்படி உலகத்தில் தோன்றிய மக்கள் முதலில் மலையில் ஒரு வகை வழிபாட்டைத் தொடங்கினார்கள். முருகு என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். மக்கள் அழகை உபசித்த ஒருவகை வழிபாடு முருக வழிபாடு. திருப்புகழில் அருணகிரிநாதர் ‘முழுதும் அழகிய குமரன்’ என எதையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அழகுடன் இருப்பவர் முருகன் என பாடியுள்ளார். அழகெல்லாம் ஒன்றாக சேர்ந்தால் அதன் பெயர் தான் முருகு. திருமுருகாற்றுப்படை தனித்த ஒரு சிறப்புடைய இலக்கியம். மேலும் பல ஆன்மிகம் தகவல் பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள்.மேலும் பல ஆன்மிகம் தகவல் பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள்
உலகின் தொன்மையான மொழிகளாக இரண்டு மொழிகள் உள்ளன. அவை தமிழ் மொழி மற்றொன்று வடமொழி. வடமொழி பேச்சு வழக்கு இல்லை, இலக்கிய வழக்கு மட்டும் உண்டு. ஆனால் தமிழ் மொழியோ பேச்சும், இலக்கிய வழக்கும் ஒன்றாக சேர்ந்து இன்றும் செழிப்பாக இருக்கும் மொழி.
தமிழில் கிடைத்திருக்கும் மிக பழமையான நூல்கள் என்றால் அது சங்க இலக்கியங்கள் தான். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்கணக்கு என மூன்று பகுதிகளாக உள்ளன. அதில் பத்துப்பாட்டு முதல் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அதிலும் முதலாவதாக திருமுருகாற்றுப்படை உள்ளது. இவ்வாறு தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் சிறப்புக்களை கூறிக் கொண்டே போகலாம். அவ்வகையில் முருக பக்தரான அருணகிரிநாதர் முருகனைப் போற்றி பல பக்தி நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்கியமானதும், சக்தி வாய்ந்ததுமாக கந்தர் அநுபதி பாடல் சிறப்பு பெறுகிறது.
அருணகிரி நாதர்:
அருணகிரி நாதர் வட தேசத்திலிருந்து வந்த திருவண்ணாமலை அருகில் முல்லந்திரம் மற்றும் பிற கிராமங்களில் குடியமர்ந்த கௌட பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தார். இளம் பருவத்திலேயே தமிழ், சமஸ்கிருத மொழிகளை கற்றுத் தேர்ந்திருக்கிறார். அவருக்கு கல்வி நன்கு போதிக்கப்பட்டது. நன்றாக வளர்க்கப்பட்டார். திருமணமாகி மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருந்தனர். இந்த நேரத்தில் விபச்சாரிகள் மோக வலையில் சிக்கினார். சிற்றின்ப சேற்றில் மூழ்கினார். தனது செல்வங்களை எல்லாம் அவர்களுக்காக செலவிட்டார். இதன் விளைவாக எல்லாவற்றையும் இழந்து, பெரு வியாதிக்கு ஆளானார். ஒரு கால கட்டத்தில் தான் செய்த தவறுகளை எண்ணி தானே வெட்கப்பட்டார்.
வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிந்தார். அப்போது ஒரு முதியவர் அவரைப் பார்த்து முருகனை வழிபடுவதிலும், தியானிப்பதிலும், அவரிடம் பிரார்த்தனை செய்வதிலும் நேரத்தை செலவிடுமாறு அறிவுரை கூறினார். அதன்படி திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் அடியில் அமர்ந்து தியானித்தார். ஆனாலும் மனம் அமைதி பெறவில்லை. இறுதியில் தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடவும், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்தார். கோவில் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்றார். முருகனை பிரார்தித்தார். கோபுரத்திலிருந்து கீழே குதித்தார். அவர் பூமிக்கு அருகில் வரும் போது முருகப்பெருமான் தனது கரங்களால் தாங்கிப் பிடித்துக் கொண்டார். பின்னர் தனது வேலால் அருணகிரி நாதரின் நாவில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை எழுதினார். ஒரு ஜெப மாலையையும் தந்து, தனது புகழை பாடுமாறு அருளானைப் பிறப்பித்தார். பாடுவதற்கு ஏதுவாக ‘முத்தைத்தரு’ என்ற முதலடியையும் எடுத்துக் கொடுத்தார். பாவியான அருணகிரிநாதர் நொடிப்பொழுதில் இறைஞானம் பெற்ற பரமஞானியாக மாற்றம் பெற்றார். அன்றிலிருந்து எப்போதும் முருகப்பெருமானின் புகழைப் பாடும் பணியை மேற்கொண்டார். முருகன் குறித்த பல பக்தி நூல்களை படைத்தார். அதில் ஒன்று தான் சக்தி வாய்ந்த கந்தர் அநுபூதி பாடல்.
கந்தர் அநுபூதி பாடல்:
கந்தர் அநுபூதி நுல் அருணகிரி நாதரால் பாடப்பட்டது. 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. ‘அனு’ என்பது அனுபவம். ‘பூதி’ என்பது புத்தி. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. எல்லாப் பாடல்களுமே நிலைமண்டில ஆசிரியப்பா வகையில் அமைந்துள்ளன. பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.
திருமூலர் இடையனின் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அது போல அருணகிரி நாதர் கிளி உடலுக்குள் இருந்து கொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர். பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக இந்த நூல் கொள்ளத்தக்கது எனச் சமயவாணர்கள் கூறுகின்றனர். அதோடு சிறந்த பாராயணப் பாடலாகவும் கூறப்படுகிறது.
கந்தர் அநுபூதியின் பலன்:
வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார். இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நூலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.
''சுவாமி.... எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை. லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்'' என்றார்.
பரமாச்சாரியார் அவரிடம், ''முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்” என்றார்.
“கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?” என்றார் முருகனடியார்.
சுவாமிகள் புன்முறுவலுடன், ''வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்'' என்றார்.
அடியவர் கடைசி அடியை ராகத்துடன் 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.
“அதற்கு என்ன பொருள்?”
'குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்' பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ''வருவாய் அருள்வாய் என்றால் 'வா, வந்து அருள்புரிய வேண்டும்' என்பது ஒரு பொருள். இது தவிர, 'வருவாய் தா' என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் 'வருவாய் பெருகும்' என்பதில் இன்னுமா சந்தேகம்? வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும் என்றார் பரமாச்சாரியார். நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது.
கந்தர் அநுபூதி:
காப்பு:
விபூதி தியானம்
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
நூல்
1. மதயானையை வெல்ல
ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே.
2. வணங்காரை தண்டிக்க
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே.
3. கல்வியில் மெச்ச
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே.
4. துறவு பெற
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே.
5. மாயை ஒழிக்க
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே.
6. மாதரைத் தழுவ
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே.
7. தீராப்பணி தீர
கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
8. குடிகளை தன்வசமாக்க
அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே.
9. பெண்ணாசை ஒழிக்க
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே.
10. நமனை விலக்க
கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே.
11. தணிகை சேர்க்க
கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே.
12. களவு வெல்ல
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.‘
13. இருள் வழி நடக்க
முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே.
14. பாரி தரிசனம் செய்ய
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே.
15. அஷ்டாவதனம் செய்ய
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே.
16. பேராசை விலக்க
பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலந் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே.
17. தன்னடத்தை மேன்மையாக்க
யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே.
18. கற்பழியாதிருக்க
உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே.
19. இல்வாழ்க்கை நீக்க
வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌவீப் படினே.
20. அனுக்கிரகம் பெற
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண்
உரிதா வுபதேச முணர்ந் தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே.
21. திருவடி வணங்க
கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே.
22.தவம் பெற
காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே.
23. சலிகை சொல்ல
அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே.
24. மாதர் வலையில் விழாதிருக்க
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே.
25. மகாவினை ஒழிக்க
மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே.
26. யாருமற்ற பேருக்கு ஆதாரமாக
ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே.
27. பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க
மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே.
28. தான் அவனாக
ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.
29. கடவுள் முன் கோபம் மாற்ற
இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
30. வழக்கு பேச
செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.
31. கடவுள் முன்னிலையில் ஞானம் பெற
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
32. கொலை மறக்க
கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே.
33. வியாகூலம் ஒழிக்க
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே.
34. பெண்களைத் தாயாக நினைக்க
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே.
35. சரீர வாஞ்சை ஒழிக்க
விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே.
36. கடவுளைக் காண
நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே.
37. தனது அகந்தையை ஒழிக்க
கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே.
38. பிசாசம் ஒழிக்க
ஆதாளிணீய யொன் றறியே னையறத்
தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே.
39. ஜனனம் எட்டாதிருக்க
மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே.
40. மாயை தெளிய
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே.
41. நித்திய தேகம் பெற
சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே.
42. நின்ற நிலை நிற்க
குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே.
43. ஆசானாகி அனுக்கிரகிக்க
தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே.
44. குரு மந்திரம் பெற
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே.
45. கல்வியிற் சம்பாவிக்க
கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே.
46. மனவருத்தம் தீர
எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.
47. ஆனந்த நடனம் காண
ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.
48. தற்சொரூபம் காண
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.
49. தன்னை அறிந்து கொள்ள
தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே.
50. அவா அறுக்க
மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.
51. நினைத்தபடி தரிசனம் கொடுக்க
உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே.
கந்தர் அநுபூதி முற்றிற்று.
Leave a Reply