யுகங்கள் நான்கு. அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம்.
கிருத யுகம், சத்திய யுகம் என்றும் அழைக்கபடும். இந்த யுகத்தில் மனித இனம் கடவுளரால் ஆளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களின் ஒவ்வொரு வேலையும், வெளிப்பாடும் தூய இலட்சியத் தன்மைக்கு நெருக்கமாக இருந்தது. இது சில சமயங்களில் பொற்காலம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. இந்த யுகத்தில் தியானம் தவம் மேற்கொண்டு மக்கள் வாழ்ந்து முக்திக்கு வழி வகுத்துக் கொண்டனர்.
இரண்டாவதாக திரேதா யுகம். இந்த யுகத்தில் தான் ராமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த யுகத்தில் இறைவனே மனிதனாக அவதரித்து மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியதாக நாம் அறிகிறோம்.இந்த யுகத்தில் யாகம் வளர்த்து இறை பக்தியை வெளிப்படுத்தி இறை வழி நின்று முக்திக்கு வழி கோலிக் கொண்டனர்.
மூன்றாவதாக துவாபர யுகம். இந்த யுகத்தில் தான் கிருஷ்ணாவதாரம் நடை பெற்றது. இந்த யுகத்தில் மக்கள் பக்தி ரசம் சொட்டச் சொட்டச் பஜனை, பாடல்கள் என்று தங்களது பக்தி நெறியில் நின்று முக்திக்கு வழி வகுத்துக் கொண்டனர்.
நான்காவதாக கலியுகம். இந்த யுகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த யுகத்திலே தவம் இயற்ற தியானம் மேற்கொள்ள நமக்கு நேரம் இல்லை. நமக்கு வழிகாட்ட எந்த கடவுளின் அவதாரமும் இல்லை. பஜனை பாடல் என இறை வழியில் நாட்டம் செலுத்த நேரமும் இல்லை. இந்த நவீன யுகத்திலே நாம் அவசர கதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கலியுகத்திலே நாம சங்கீர்த்தனமே உயர்ந்த தவமாகக் கருதப்படுகிறது.
பிரகலாதன், துருவன், சுகர், அஜாமிளன், தத்தர் போன்றோர் ஹரி நாமத்தால் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டார்கள். ஹரி நாமத்தை ஸ்மரிக்கும் அடியவரின் திருவடியே ஹரி ப்ராப்திக்கு வழி வகுக்கும் சத்தியமான சாதனம் ஆகும். இந்த உலகில் ஹரியை அடைவதற்கு நாம சாதனத்தை தவிர வேறு எந்த சாதனையும் தேவை அற்றது.
நாமசங்கீர்த்தனம் என்பது அனைவரும் அறிந்ததே.சம்சார சாகரத்தைக் கடந்து முக்தி பெற நாம சங்கீர்த்தனம் ஒன்றே இந்த கலியுகத்தில் எளிய வழி ஆகும்.
நாம சந்கீர்தனத்திற்கு பெரிய அளவில் கலைஞராக இருந்து பாடல் பாட வேண்டும், பஜனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. வேத மொழியான சமஸ்கிருதம் அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மிக எளிய நாமங்களைக் கூறினாலே போதும். அவற்றைப் பற்றிக் காண்போம்.
ராம நாமம் நல்ல நாமம். நன்மையின் ரூபமாய் நானிலம் போற்றும் ராம நாமம் நல்ல நாமம். ராம நாமம் எளிய வழியில் கூறலாம்.
“ராம்” ராம் என்று சொன்னாலே போதுமானது.
நாம் “ரா” என்று சொல்லும் போது நமது வாய் திறந்து நம்முள் இருக்கும் எதிர்மறைகள் வெளியேறும். மீண்டும் உள்ளே வராமல் இருக்க “ம்” என்று கூறி அதனை முற்றிலுமாக அகற்றாலாம். இவ்வாறு மீண்டும் மீண்டும் கூறி நாம் பல ஜென்மாக்களில் செய்த பாவங்களை அகற்றி முக்திக்கு வழி செய்து கொள்ளலாம்.
ஸ்ரீ ராம ஜெயம் – இந்த நாமத்தைக் கூறுவதும் எழுதுவதும் முக்திக்கு வழி வகுக்கும்.
“நமசிவாய” என்னும் பஞ்சாட்சரத்தை உச்சரிக்க நமது பாவங்கள் அகலும்.
நமசிவய என்ற ஐந்தெழுத்தை
யநமசிவ
வயநமசி
சிவயநம
மசிவயந என்றும் உச்சரிக்கலாம்.
“ஓம் நமோ நாராயண “ இந்த எட்டெழுத்து மந்த்திரத்தை எளிமையாக உச்சரித்து முக்திக்கு வழி வகுத்துக் கொள்ளலாம்.
இது மட்டும் இன்றி, கிருஷ்ணா, கோவிந்தா, கோபாலா, என்று நமக்கு தெரிந்த எத்தனை எளிய நாமங்கள் இருக்கின்றனவோ அவற்றை தினமும் முடிந்த போதெல்லாம் கூறி இறை அருளைப் பெறலாம்.
ஆலயம் செல்வது சாலவும் நன்று என்பார்கள். என்றாலும் ஆலயம் செல்லக் கூட நேரம் இல்லாத இந்தக் காலக் கட்டத்தில் மேற்கூறிய எளிய நாமங்களை தினமும் கூறி இறைவனடியை அடையும் முக்திக்கு நாம் வழி வகுத்துக் கொள்ளலாம்.
Leave a Reply