ஹோமம் என்பது ஒரு யாகம் அல்லது அக்னி வளர்த்துச் செய்யும் வழிபாடு. இதில் பல வகைகள் உண்டு. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற வைதீக ஹோமங்கள், ஆகம முறைப்படி செய்யப்படுகின்ற ஆகம ஹோமங்கள், தாந்த்ரீக முறைப்படி செய்யப்படுகின்ற தாந்த்ரீக ஹோமங்கள், சாக்த முறைப்படி செய்யப்படுகின்ற சாக்த ஹோமங்கள் நவகிரகங்களுக்கு செய்யப்படும் நவகிரக ஹோமங்கள் மற்றும் சாந்தி பரிகார ஹோமங்கள் என ஹோமங்களை வகைப்படுத்துவதை நாம் அறிகிறோம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அக்னியில் பல்வேறு பொருட்களை வழங்குவதை உள்ளடக்கிய ஒரு பூஜையாகும். ஹோமம் என்பது ஒரு பழங்கால சடங்கு மற்றும் தெய்வீக வழிபாடாகும். இது நம்மை அண்ட சக்திகளுடன் இணக்கமாக வைத்திருக்கவும், அதன் மூலம் வாழ்க்கையின் துயரங்களை சமாளிக்கவும், நமது ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தவும், உலக அமைதியை மேம்படுத்தவும் உதவுகிறது.
சமித்துக்கள் :
சமித்து என்பது ஹோம குண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள். ஒவ்வொரு ஹோமத்திற்கும் அதற்கென தேவைப்படும் மரக் குச்சிகள், பட்டைகள், வேர்கள் தான் சமித்துக்கள் என்று கூறப்படுகின்றன. பிரத்யேக ஹோமத்திற்கு பிரத்யேக குச்சிகள் பயன்படுத்தப்படும்.
ஹோம ஆகுதி என்றால் என்ன?
ஹோமம் செய்வதற்காக அக்னி வளர்த்து அதில் நெய் ஊற்றுவதை ஆகுதி என்பார்கள். மேலும் நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம்.
ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :
பொதுவாக ஹோமம் செய்வதன் மூலம் சக்தி வாய்ந்த ஆன்மீக அதிர்வுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்படுகின்றன. இந்த ஆன்மிக சக்திகள் நம் வாழ்வில் உள்ள எதிர்மறையான தாக்கங்களை நீக்கி, நமக்கு மன அமைதியையும், பொருள் வளத்தையும் அளிக்கிறது. நமது உண்மையான இயல்பை பெறவும், தெய்வீக ஆற்றலைப் பெறவும். உதவும் நேர்மறை ஆற்றலை நம்மைச் சுற்றி உருவாக்குகிறது. மேலும் ஹோமத்தில் ஆகுதி செய்யப்படும் சமித்துக்கள் காரணமாக எழும் புகை மற்றும் வாசனை நமது சுற்றுப்புறச் சூழலை புனிதமாக்குகிறது. நேர்மறை ஆற்றலை அளிக்கிறது. ஹோமம் செய்வதன் மூலம் அல்லது அதில் பங்கு கொள்வதன் மூலம் இந்த ஆற்றல் மிக்க சடங்குகளால் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும், சூழலியல் ரீதியாகவும் பயனடையலாம். தீய கிரக தாக்கங்களால் ஏற்படும் துன்பத்தைப் போக்க ஹோமங்களைச் செய்யலாம். ஹோமத்தில் நாம் நேரடியாகக் கலந்து கொள்ளலாம். நமக்கு அன்பானவர்களின் சார்பாகவும் நாம் ஹோம நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம். விஞ்ஞான ரீதியாக, ஹோமங்கள் வளிமண்டலத்தை சுத்தப்படுத்துகின்றன, மனதையும் உடலையும் குணப்படுத்தும் விளைவை ஏற்படுத்துகின்றன.
தெய்வங்களுக்கான ஹோமங்களும் அவற்றின் பலன்களும்:
கணபதி ஹோமம் – தடைகளை நீக்க வல்லது
குபேர லக்ஷ்மி ஹோமம் – சகல வளங்களை அளிக்க வல்லது
ருண விமோச்சன ஹோமம் – கடன் தொல்லை நீக்க வல்லது
சுதர்ஷன ஹோமம் – எதிரிகளை நீக்க வல்லது
லக்ஷ்மி ஹோமம் – செல்வம் அளிக்க வல்லது
சரஸ்வதி ஹோமம் - கல்வி அளிக்க வல்லது
ஹயக்ரீவ ஹோமம் – ஞானம் அளிக்க வல்லது
சந்தான கோபால ஹோமம் - குழந்தைப் பேறு அளிக்க வல்லது
மிருத்யுன்ஜய ஹோமம் – மரண பயம் நீக்க வல்லது
ஆயுஷ் ஹோமம் – நீண்ட ஆயுள் அளிக்க வல்லது
வாராஹி ஹோமம் – பில்லி சூனியம் நீக்க வல்லது
தனவந்தரி ஹோமம் – ஆரோக்கியம் அளிக்க வல்லது
பார்வதி ஹோமம் – ஆற்றல் அளிக்க வல்லது
பார்வதி சௌந்தர்ய ஹோமம் – வசீகரம் அளிக்க வல்லது
சுயம்வர பார்வதி ஹோமம் – திருமணத் தடைகளை நீக்க வல்லது
சில தெய்வங்களுக்கான ஹோமம் மற்றும் அவற்றின் பலன்களைப் பற்றிப் பார்த்தோம். இது போல இன்னும் பல உள்ளன.
ஹோமத்தில் பயன்படுத்தப்படும் சமித்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் :
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு ஹோமம் செய்யப்படும். கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பார்வதி ஹோமம், மகா விஷ்ணு ஹோமம், குபேர லக்ஷ்மி ஹோமம், சந்தான கோபால ஹோமம், புருஷ சுக்த ஹோமம், ஆயுஷ் ஹோமம், ருண விமோச்சன ஹோமம், இப்படி மற்றும் பல ஹோமங்கள் உள்ளன. நவக்கிரகங்களுக்கும் நவகிரக ஹோமம் உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஹோமம் செய்யும் போதும் அந்தந்த ஹோமத்திற்கென பிரத்யேக சமித்துக்கள் உள்ளன. அதற்கென உரிய பலன்களை அவை நமக்கு அளிக்கின்றன. உதாரணமாக தன்வந்தரி ஹோமம் என்பது ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் ஹோமம் ஆகும். அந்த ஹோமத்திற்கென சமர்பிக்கபப்டும் சமித்துக்கள் நமது சுற்றுச் சூழலில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது செல்வம் அளிக்க வல்லது. யோகங்களை அளிக்க வல்லது
துளசி செடி குச்சி : நாராயணனுக்குப் பிடித்தது. காரிய சித்தி தரவல்லது. திருமணத் தடை நீக்க வல்லது
ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும்.
கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி சூனியம் அகலும்.
மாமர குச்சி : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினியாகச் செயல்படும்
தாமரை புஷ்பம் : லக்ஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை குச்சி : வசீகரம் கிடைக்கும். தேஜஸ் பெறலாம்.
புரசங் குச்சி : குழந்தைகள் கல்வியும் ஞானமும் பெறுவர்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
நவகிரகங்களுக்கான சமித்துக்கள் :
எருக்கன் குச்சி - சூரியனுக்கு உகந்தது. எதிர்மறை ஆற்றலை அழிக்க வல்லது, வசியம் தர வல்லது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
செம்மர சமித்து : இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய சமித்தாகும். இதனால் ரணம் மற்றும் ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது, செல்வத்தை அளிக்க வல்லது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது. அரசாங்க ஆதாயங்களை அளிக்க வல்லது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது, மக்கட்பேறை அளிக்க வல்லது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது. தோஷங்களை நீக்க வல்லது
அருகம் புல் : விநாயகருக்கும் ராகுவுக்கும் பிடித்தது. விஷ பயத்தை போக்க வல்லது
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
இது மட்டும் இன்றி இன்னும் பல சமித்துக்கள் உள்ளன.
Leave a Reply