சித்தர் காக புஜண்டர் வரலாறு | Siddhar Kagabujandar:
சித்தர்கள் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இவர்கள் எண்வகை யோகங்கள் மற்றும் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள். இத்தகைய மாபெரும் சித்தர்கள் பாரம்பரியத்தில் வந்த சித்தர்களுள் சிறந்த சித்தராகக் கருதப்படுபவர் காகபுசண்டர் ஆவார். இவர் தமிழ் நாட்டின் மயிலாடுதுறை எனப்படும் மாயூரத்தில் பிறந்தவர் என்று கருதப்படுகிறார். மயூரநாதனின் அருளால் சாகா வரம் பெற்று காகமாகப் பல ஆண்டுகள் வாழ அருள் பெற்றதால் காகபுசுண்டர் என்ற பெயர் பெற்றார். இவருக்கு ரோமச முனிவர் என்ற ஒரு மகன் இருந்தார். இவரை காகபுருடர் என்றும் காகபுஜண்டர், காகபுசுண்டி என்றும் கூறுவார்கள். இவர் காக்கை வடிவில் இருந்துகொண்டு பாடல்களைப் பாடியதாக இவரே தம் பாடல்களில் குறிப்பிடுகிறார்.புராணத்தின் படி இவர் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். வில்லுபுரம் மாவட்டத்தின் சின்ன சேலம் அருகே அமைந்துள்ள தென்பொன்பராபி கிராமத்தில் உள்ள சோர்ணபுரீஸ்வர் கோவிலில் ஸ்ரீ காகபுசுண்டரின் ஜீவ சமாதி உள்ளது அவரது பிறந்த நட்சத்திரம் ஆயில்யம். இவர் காக்கை வடிவத்தில் இந்த பிரபஞ்சத்தில் சாகா வரம் பெற்றவராக வாழ்ந்து வருகிறார். புராண கதைகளின்படி, காக புஜண்டர் பல பிரளயங்கள் ஏற்பட்டு உலகம் அழிந்ததையும், மீண்டும் பிரபஞ்சம் தோன்றியதையும் கண்டுள்ளார். ஸ்ரீ ராம பிரானின் குருவாக இருந்த வசிஷ்ட முனிவருக்கு இவர் உபதேசம் செய்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பல ஆன்மீக கதைகள், ஜோதிட(Tamil Astrology) தகவல்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
காகபுஜண்டர் தோன்றிய வரலாறு
காகபுஜண்டர் பிறப்பு பற்றி இரு வேறு கதைகள் உள்ளன.
கதை1: பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாரிஷி என்னும் ஒரு முனிவர் வசித்து வந்தார். அந்த முனிவர் மீது ஒரு பெண் காதல் கொண்டாள். அந்தப் பெண் கணவனை இழந்தவள். கணவனை இழந்த நிலையில் அவள் வேறு ஒருவர் மீது அதாவது அந்த முனிவர் மீது காதல் கொண்டதால், முனிவர் அவள் செயலில் கோபமுற்று உன் வயிற்றில் குழந்தை பிறக்கட்டும் என்று கூறிவிட்டார். இதன் படி அந்த பெண்ணிற்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அந்தக் குழந்தை தான் வளர்ந்து பிற்காலத்தில் காகபுஜண்டர் என்னும் சித்தராக ஆகியது என்பது ஒரு வரலாறு.
கதை 2: தேவலோகம் என்றாலே பரவச நிலை எப்பொழுதும் இருக்கும். பாட்டு நடனம் கேளிக்கை என்று ஆனந்த களிப்பு எங்கும் நிறைந்து இருக்கும். ஒரு சமயம் சிவனும் பார்வதியும் தேவகணங்களும், பறவைகளும் நிறைந்து இருந்த சபையில், அனைவரும் மகிழும் வண்ணம் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பாடலுக்கும் தாளத்திற்கும் ஏற்ப சக்தி கணங்கள் நடனம் ஆட அங்கிருந்த அன்னப்பறவைகளும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளுள் ஒரு அன்னப்பறவையின் அழகில் லயித்தது. அன்னமும் காமும் களிப்பில் இருக்க அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. எனவே நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.
காகபுஜன்டர் அழியா வரம் பெற்ற கதை:
காகபுஜண்டர் தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு எதுவும் அறியாதவர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்காதவர். எங்கும் சிவம் எதிலும் சிவம் என்று இருக்கும் காகபுஜன்டரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் நினைத்தார். அவரது திருவிளையாடல் ஆரம்பம் ஆனது. காகபுஜன்டரின் குரு, காகபுஜண்டரிடம் திருமாலையும் வணங்கச் சொன்னார்.ஆனால் புஜண்டர் மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் குருவின் வற்புறுத்தல் அதிகமானது. எனவே ஒரு தடவை சிவனை வழிபாடு செய்யும் போது குரு வருவதை அறிந்தும் கண்டும் காணாமல் இருந்தார். இதனால் கோபமுற்ற சிவன், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ இந்த பூமியில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார். அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அலைந்தார்.
காகபுஜண்டர் சிறப்பும் அவர் நிகழ்த்திய அற்புதங்களும் :
எல்லையற்ற ஆயுளும், விரிந்த அறிவும், முக்கால ஞானமும் கொண்ட சிரஞ்சீவி காகபுஜண்டர். உங்கள் ஆயுட்கால அனுபவத்தை ஞானத்தை தத்துவத்தை அறியவே வந்துள்ளேன் என்று கேட்டு வந்த வசிஷ்டருக்கு கற்பகத் தருவின் உச்சியில் இருந்த காகபுஜண்டர் பின்வருமாறு பதில் கூறியள்ளார்.
அவர் தம் வாயால் கூரை அருளிய சுயவரலாறு கேட்பவர் எவரையும் அசர வைக்கும் வல்லமை கொண்டது. அகிலத்தையே அசைக்கும் பெருமை மிக்கது.
என் ஆயுள் வரலாறு எப்படிப்பட்டவருக்கும் மயக்கம் தரும். சீர்காழி மாயூரநாதனே எனக்கு அருள் தந்து, ஆயுள் தந்து, வடிவும் காத்து வருகிறார். நான்பல கோடியுகங்கள் கண்டவன்.என் நீண்ட ஆயுளில்
நான் கண்டதைச் சொல்கிறேன். செவிமடுத்துக் கேளுங்கள்.
மாயூரநாதனைத் தரிசிக்க உமாதேவி மயில் வடிவம் கொண்டுமாயூரம் வந்து பூஜை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஐந்து தலைகளோடு மாயூரம் வந்து சிவபூஜை செய்த பிரமதேவனை நான் பார்த்திருக்கிறேன். நடுத்தலை இழந்த பிரமன் ஒரு தலை கொய்யப்பட்டு நான்முகன் ஆனதையும் நான் பார்த்திருக்கிறேன். தேவர்கள் பாற்கடலைக் கடைந்ததைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.உலகம் தோன்றிய காலத்தில் பூமி ,சூரியன், சந்திரன் தோற்றத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இரண்யாட்சன் பூமியை எடுத்துச் செல்ல முயன்றதையும் பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டதையும் நேரில் கண்டு வியந்திருக்கிறேன்பாற்கடல் கடைந்ததையும் சிவபெருமான் ஆலகால விஷம் அருந்தியதையும் நான் பார்த்திருக்கறேன். சிவபெருமான் முப்புரம் எரித்ததை பார்த்திருக்கிறேன். விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பார்த்திருக்கறேன்
உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். மீண்டும் இந்த பிரபஞ்சம் தோன்றியதையும் அவர் பார்த்திருக்கிறார். காகபுஜண்டர் சென்ற உலகங்களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாகதாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர்.
ஒரு சிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள். சீர்காழி அருகே திருமணஞ்சேரியிலும், காரைக்கால் அருகே திருமலைராயன் பட்டினத்திலும்,திருப்பதி அருகே திருகாளஹத்தியிலும், கள்ளக்குறிச்சி அருகே தென்பொன்பரப்பியிலும்,திருச்சி அருகே உறையூரிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
காகபுஜண்டர் கீழ்க்கண்ட 16 பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
1.காகபுஜண்டன் (காக்கை வடிவில் இருக்கும் சித்தர்)
2.நாகபுஜண்டன் (கையில் பாம்புடன் காட்சி தருபவர்)
3.யோகபுஜண்டன் (கையில் யோக ரகசியங்கள் அருளும் மந்திரக் கோலுடன் காட்சி தருபவர் )
4.புஜங்கன் (கைகளில் பல தெய்வீக அம்சங்கலைக் கொண்டு காட்சி தருபவர்)
5.புஜண்டி (அனைவருக்கும் கருணையுடன் உதவி செய்பவர்)
6.காக்கையன் (அவருக்கு பிடித்தமான காக உருவம்)
7.நாகேந்திரமுனி (நாகங்களுக்கெல்லாம் சித்தராக இருப்பவர்)
8.மனுவாக்கியன் (மனுவிற்கு உபதேசம் செய்தவர்)
9.காலாமிருதன் (முக்காலமும் உணர்ந்தவன் & அமிர்தமாய் அறிவை வழங்குபவன்)
10.சிரஞ்சீவி முனி (அழிவில்லாத சித்தர்)
11.அஞ்சனாமூர்த்தி (கையில் மை வைத்து முக்காலம் உரைப்பவன்)
12.கற்பகவிருட்சன் (கற்பக மரத்தின் அடியில் வசிப்பவன்)
13.நற்பவி (அனைத்து உயிர்களுக்கும் நன்மை மட்டுமே செய்பவன்)
14.பிரம்மகுரு (பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவனுக்கு குருவாக விளங்குபவன்)
15.ஆதிசித்தர் (முதல் சித்தர்)
16.திரிகாலஜெயர் (முக்காலத்தை வென்றவர்)
Leave a Reply