மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி என்பது சிவபெருமான் வழிபட்டுக்கு உகந்த, மிகப் புனிதமான இரவுப் பொழுதாகும். இந்தக் காலப் பொழுதில், சிவபெருமானே நம் உலகிற்கு இறங்கி வருகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனுக்கும், சிவ வழிபாட்டுக்கும் உரியதாக விளங்குவதால், இது சிவ ராத்திரி என்றே அழைக்கப்படுகிறது. அவ்வாறே மிகவும் பக்தியுடன் மக்களால் கொண்டாடப் படுகிறது.
சிவபெருமானே தன் முழு ஆற்றலுடன் நம்மிடையே இருக்கும் அந்தப் புண்ணிய இரவு, இதனால் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. எனவே சிவராத்திரி, நம் பாவங்களைக் களையக் கூடியது; நோய்களையும், கடன்களையும் தீர்க்க வல்லது; மேலும், வளத்தை அளித்து, நம் விருப்பங்களை நிறைவேற்றக் கூடியது என புரணக் கதைகள் கூறுகின்றன.
சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் நாளாகும். இது, தேய்பிறை காலங்களில் வரும் சதுர்தசி நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிவராத்திரி தமிழ் மாதமாகிய மாசியில் (பிப்ரவரி மத்திய காலம் முதல் மார்ச் மத்திய காலம் வரை) வரும் பொழுது, அது மிகவும் புனிதத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாசி மாத சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என்று மக்களால் நாடெங்கும் அனுசரிக்கப் படுகிறது. அன்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள், சிவ ஆலயங்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.
மகா சிவராத்திரி வரலாறு
மகா சிவராத்திரி எவ்வாறு பிறந்தது என்பதை, புராணங்கள் மிகவும் சுவையாக வர்ணிக்கின்றன. இந்த சிவராத்திரி வரலாற்றை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
பிரளயம் என்பது பேரழிவைக் குறிக்கும் நிகழ்வாகும். அப்பொழுது, மிகப் பெரும் வெள்ளமாகப் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் உயிருள்ளவை, உயிரற்றவை என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு, அழிந்து போகின்றன.
இவ்வாறு ஓர் இரவில் நிகழ்ந்த பிரளயத்தில், ஒருமுறை, படைப்புக் கடவுள் பிரம்ம தேவரால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் முற்றிலுமாக அழிந்து, ஒழிந்து போயின. இவ்வாறு ஜீவராசிகள் அனைத்தும் முடிந்து போனதைக் கண்டு, சிவபெருமானின் தேவியும், லோக மாதா எனப்படும் உயிர்களுக்கெல்லாம் தாயாகிய உமாதேவி மிகவும் வருத்தமடைந்தாள். அனைத்தையும் முடித்து, பேரழிவைக் குறிக்கும் அந்த இரவை புனிதமான ஒன்றாக மாற்றுவதற்கும் சபதம் பூண்டாள்.
இந்த உயரிய நோக்கத்துடன், அன்னை, அன்று இரவு முழுவதும், சிவபெருமானை மனதில் நிறுத்தி, மிகக் கடுமையாகப் பூஜை செய்தாள். ஆகம விதிகளை அனுசரித்து, அவருக்கு அர்ச்சனையும் செய்தாள்.
இந்த வழிபாடு முடிந்ததும், தன் நாயகனை வணங்கிய அம்பிகை, அவரை மனமுருகி வேண்டி, தனது பிராத்தனையை அவரிடம் சமர்ப்பித்தாள்.
அன்னை, அந்த இரவில் இறைவனை எவ்வாறு பூஜித்தாரோ, அது போலவே அந்தப் புனிதமான காலப் பொழுதில் சிவபெருமானை உரிய முறையில் பூஜை செய்து வணங்குபவர்கள் அனைவருக்கும், அவர்கள் வேண்டுவதையும், எல்லா நலன்களையும் தடையின்றி வழங்க வேண்டும் என வேண்டினாள். இறுதியில் அவர்கள் அனைவருக்கும், விடுதலைப் பேறு எனப்படும் கிடைத்தற்கு அரிய மோட்சத்தையும் அருள வேண்டும் என கோரிக்கையும் வைத்தாள்.
மேலும் அம்பிகை சிவனைப் பூஜித்த அந்த இரவு அவரது பெயராலேயே வழங்கப் பட வேண்டும் என்றும் கோரினாள்.
அன்னையின் வழிபாட்டினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமான், அவர் வேண்டிய வரன்கள் அனைத்தையும் தந்து அருளினார்.
இவ்வாறு, இறைவனை அன்னை பூஜித்த அந்தப் புண்ணிய இரவு, சிவராத்திரி என்றே வழங்கப் படுகிறது. பல நலன்களை வழங்கும் புனிதமான கால கட்டமாக, பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது.
சிவராத்திரி மகிமை
சிவராத்திரி குறித்து சொல்லப்படும் பல புராணக் கதைகள், இதன் சிறப்பை விளக்குகின்றன. இந்தப் புண்ணிய இரவு தொடர்பான, அது போன்ற ஒரு கதையை நாம் இங்கு காணலாம்.
வேட்டையாடுவதற்காக ஒரு முறை காட்டுக்குச் சென்ற வேடன் ஒருவனுக்கு, விலங்கு ஏதும் கிடைக்கவில்லை. பகல் முழுவதும் காடெங்கும் அலைந்து திரிந்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இவ்வாறு இரவும் வந்து சேர்ந்தது. பசியினாலும், களைப்பினாலும் வாடிய வேடனை, அந்த நேரம் புலி ஒன்றும் துரத்த ஆரம்பித்தது. தன் உயிருக்கு பயந்த அவன், அந்தக் கொடிய விலங்கிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இங்கும் அங்கும் ஓடினான். இறுதியில் மரம் ஒன்றின் மீது ஏறிக் கொண்டான்.
ஆனால் அவனை விடாமல் துரத்தி வந்த அந்தப் புலி, அந்த மரத்தின் கீழேயே வந்து சேர்ந்தது. அவனை எப்படியாவது பிடித்துத் தின்றுவிட வேண்டும் என்று, அந்த மரத்தைச் சுற்றிச், சுற்றி வர ஆரம்பித்தது.
மரத்தின் மீது அமர்ந்திருந்த திருடன் நடுங்கிப் போனான். மரத்தில் இருந்தால் தான் அவன் தப்பிக்க முடியும். ஆனால் அதுவோ இரவுப் பொழுது. மேலே இருந்தவாறே அறியாமல் தூங்கி விட்டால், அவன் கீழே விழுந்து விடுவான். உடனே புலிக்கும் இரையாகி விடுவான். எனவே, தூங்காமல் இருப்பதற்காக, அந்த மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே போட்டவாறே, தூங்காமல் இரவு முழுவதையும் கழித்து விட்டான்.
பொழுது விடிந்தது. புலியும் அங்கிருந்து போய் சேர்ந்தது. இவ்வாறு அவன் தப்பித்து விட்டான். ஆனால் அவனையும் அறியாமல்,அன்று இரவு அவன் பெரும் புண்ணியத்தைச் செய்து விட்டான்.
சிவராத்திரி பூஜை
அந்த இரவு மகா சிவராத்திரி இரவாக இருந்தது. அவன் ஏறி அமர்ந்திருந்த மரம் வில்வமாக இருந்தது. அந்த மரத்தின் கீழே ஒரு சிவ லிங்கமும் இருந்தது. இவ்வாறு, புனிதமான சிவராத்திரி இரவு முழுவதும், தூங்காமல் பட்டினி கிடந்து, அவருக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலைகளால், சிவ பூஜையே அவன் செய்து விட்டான்.
அறியாமல் செய்தது என்றாலும், அந்த வேடன் செய்த பூஜையால் மிகவும் மகிழ்ந்து போன சிவபெருமான், அவனது காலம் முடிந்த பொழுது, அவனுக்கு, அரிதிலும் அரிதான மோட்சம் அளித்து அருளினார்.
சிவராத்திரி வழிபாடு
எனவே சிவராத்திரி அன்று பக்தர்கள் விழித்திருந்து, விரதமும் இருந்து சிவனை வழிபடுகிறார்கள். சிவ ஆலயங்களில், இரவு முழுவதும், அதாவது நான்கு காலங்களிலும் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை, பூஜை, அர்ச்சனை ஆகியவற்றில் கலந்து கொண்டு, பெருமானின் அருளை வேண்டுகிறார்கள்.
இதனால், அறிந்து செய்தது, அறியாமல் செய்தது என அனைத்து வகைப் பாவங்களும் நம்மை விட்டுத் தொலைகின்றன என்பது நம்பிக்கை. இத்துடன், உண்மையான விருப்பங்கள் நிறைவேறி, இறுதியில் மோட்சம் எனப்படும் வீடுப்பெறும் கிடைக்கும் என்று புனித நூல்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
Leave a Reply