Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

தஞ்சை பெரிய கோவில் ‎வரலாறு (Thanjai Periya Kovil History In Tamil)

May 25, 2022 | Total Views : 8,423
Zoom In Zoom Out Print

ஆலயம் தொழுவது சாலவும் நன்று: கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; போன்ற சொற்றொடர்கள்  ஆலயத்தின் சிறப்பை நமக்கு பறை சாற்றுகின்றன.  நமது  முன்னோர்கள், குறிப்பாக  நமது நாட்டை ஆண்ட அரசர்கள் ஆலயத்தின் சிறப்பு மற்றும் ஆலய வழிபாட்டைப் பற்றி நன்கு அறிந்து வைத்து இருந்தனர். 
நாட்டு மக்களை காக்க செல்வம், கல்வி, வீரம், வணிகம் மட்டும் இன்றி ஆன்மீகமும் அவசியம் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்து இருந்தனர்.  அதனால் தான் வரலாற்றில் அழிய முடியாத வகையில் ஆலயங்களை அமைத்துச் சென்றுள்ளனர். அத்தகைய புகழ் வாய்ந்த சரித்திரப் புகழ் பற்ற ஆலயங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி இக் கட்டுரையில் காண்போம். இக் கோவில் பற்றிய பல்வேறு கருத்துகளுள் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம். 

தஞ்சையில் உள்ள  இராஜராஜேஸ்வரம் என்னும் வானளாவிய கோபுரம் கொண்ட பெரிய கோவில் நமது முன்னோர்களின் பழங்கால வாழ்வியலின் வெற்றி சின்னம். நதிக்கரை நாகரீகத்தின் வெளிப்பாடு. சோழ சாம்ராஜ்யத்தின் அருமை பெருமைகளை  ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பறை சாற்றும் பொக்கிஷமாக இந்த ஆலயம் விளங்குகின்றது. .

தஞ்சை பெரிய கோவிலின் பல்வேறு பெயர்கள்:

இராஜராஜேஸ்வரம்,  தஞ்சைப் பெருவுடையார் கோயில்,  பிரகதீசுவரர் கோயில்  அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.

கோவில் அமைவிடம் மற்றும் அமைப்பு  :

தஞ்சைப் பெருவுடையார் கோயில்  அல்லது தஞ்சைப் பெரிய கோயில் பிரகதீஸ்வரர் கோவில், என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். கோட்டைச் சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்து அடுக்கு கோபுர வாயிலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் என்று பெயர். அடுத்து 3 அடுக்குகளுடன் ராஜராஜன் திருவாயில் அமைந்துள்ளது. இவை தவிர, தென்புறம் இரண்டும் வடபுறம் இரண்டுமாக நான்கு வாசல்கள் உள்ளன.  பெரிய கோயில் கோபுரத்தைவிட பெருவுடையாரின் விமானம் பிரம்மாண்டமானது! சுமார் 216 அடி உயரத்துடன் திகழும் இந்த விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம், தஞ்சைப் பெருவுடையார் கருவறை விமானம்தான்!

கலைக்கு ஒரு கோவில்:

சிற்பக்கலை, கட்டிடக் கலை ஓவியக் கலை என ஆலயம் சார்ந்த அத்தனை கலைகளையும் சிறப்பாக பறை சாற்றும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ள கோவில் தஞ்சை பெரிய கோவில் என்றால் அது மிகை ஆகாது. கோபுர கட்டமைப்பு, ஆலய கட்டமைப்பு தற்கால விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு. கற்களை மட்டுமே பயன்படுத்தி நுட்பமான முறையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் பழமை மாறாமல் புதுமையாக அதனை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றது. 

சந்நிதிகள்:

பெருவுடையார் சந்நிதி -பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். 12 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் பெருவுடையார். ஒரே கல்லால் ஆன லிங்கமூர்த்தம் இது.
பெரியநாயகி அம்மன் சந்நிதி - இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார்.பெயருக்கு ஏற்ப பெரிய நாயகி பக்தர்களை பெரிய அளவில் காத்து ரட்சிக்கிறாள் என்பதில் எள்ளளவும்  ஐயம் இல்லை.

வராகி அம்மன் சந்நிதி – இங்கு குடிகொண்டிருக்கும் வாராகி அம்மனின் தனிச் சிறப்பு யாதெனில்  அம்மனுக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது எனலாம். .  
கருவூர் சித்தர் சந்நிதி - இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது.

இவை மட்டும் இன்றி இந்தக் கோவிலில்   நடராசர்,  முருகர், விநாயகர், மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் ஆலய வளாகத்துள் அமைந்துள்ளன.

கோவிலின் கட்டிடக் கலை

இந்த ஆலயம் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக மட்டுமின்றி தமிழர்களின் தமிழ் மீதான பற்றையும் குறிக்கின்றது. இக்கோவிலில் தமிழின் சிறப்புகளை அமைப்பு மற்றும் கட்டுமானத்தின் வாயிலாக  மாமன்னர் இராஜ ராஜ சோழன் வெளிப்படுத்தியுள்ளார். தாய் மொழியின் அற்புதத்தை தரணி போற்றும் வகையில்  அமைத்து தனது பற்றை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு ஆகும்.   சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இக் கோவிலில் 15 தளங்கள் உள்ளன. உயரம் சுமார் 60  மீட்டர். இது சமவெளிப் பகுதியில் கட்டப்பட்ட கற்கோவில் ஆகும். இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி உயரம் ஆகும். 

நந்தியின் சிறப்பு:

கோயிலின் நந்தி மண்டபத்துக்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள நந்தியே இராஜராஜனால் அமைக்கப்பட்ட நந்தி ஆகும். தற்போது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ராஜராஜ சோழனால் அமைக்கப்பட்டது அல்ல. நயாக்கர் மன்னர்களால் அமைக்கப்பட்டது என்கிறது வரலாறு.பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. அதன் உயரம் 14 மீட்டரும், நீளம் 7 மீட்டார், அகலம் 3 மீட்டராகும். இந்த நந்தி, லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பிரதோஷ நிகழ்வின் போது  இந்த நந்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்படுகிறது.

கோவில் கல்வெட்டுகள் :

கோவில் கல்வெட்டு மூலம் நாம் பல விஷயங்களை அறிய முடிகிறது. இதனை அடுத்த தலைமுறைக்கு  பத்திரமாக அளித்த பெருமை மன்னன் இராஜ இராஜ சோழனையே சாரும். நடராஜர் சிவனின் அம்சம் ஆவார். இதனை கருத்தில் கொண்டு இங்குள்ள மூலவரை மன்னர் ஆடல்வல்லான் என்று குறிப்பிடுவது கல்வெட்டு வாயிலாக நாம் அறியலாம். ஆடியபாதம் கொண்ட நடராஜர் மீதான மன்னன் பற்றை இதன் வாயிலாக அறியலாம். மேலும் தேவரடியார்கள் என்று இறைவனுக்கு தம்மை அர்ப்பணித்தவர்கள் இங்கு வந்து நடனம் ஆடியதையும் நாம் கல்வெட்டு வாயிலாக அறிய இயலும். இந்தக் கோவிலைப் பற்றிய மேலும்  பல்வேறு தகவல்கள் நமக்கு கல்வெட்டுக்கள் வாயிலாக கிடைக்கப் பெற்றுள்ளன.  குறைந்தது எண்பத்தைந்து கல்வெட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. 400 ஆடல் அழகிகளின் பெயர்களும் அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் இருக்கின்றன. ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் எல்லாம் கல்வெட்டுகளில் உள்ளன. கோவிலின் அமைப்பு, அதன் கட்டுமானப் பணி விபரங்கள், கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்ட நாள், கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள், கோவிலுக்கு என்று நியமிக்கப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள், அவர் தம் பணிகள், ஒரு அதிகாரியோ, பணியாளரோ விடுப்பு எடுத்தால் செய்யப்பட வேண்டிய மாற்று ஏற்பாடுகள், என்று பல்வேறு செய்திகள் இந்த கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன என கூறப்படுகின்றது.   கல்வெட்டுகள் மூலமாக கோவில் காட்டும் பணியில் ஈடுபட்ட சிற்பிகளின் தலைவர் பெயர் குஞ்சர மல்லன்   ராஜராஜ பெருந்தச்சன் என்று அறிகிறோம். வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவன் இந்தக் கோயிலைக் கட்டிய கலைஞன்! இவனுக்கு பக்கபலமாக, மதுராந்தகனான நித்திவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகிய இருவரும் இருந்ததாக  வரலாறு மூலம் அறிய முடிகிறது.

கோவிலின் சிறப்பம்சம்:

இந்தியாவில் அமைந்துள்ள மிகப் பெரிய கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். பாரம்பரியச் சின்னமாக விளங்குகின்றது. தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகின்றது.  இந்தக் கோவில் 7 ஆணடுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 2010 வது ஆண்டோடு 1௦௦௦ ஆண்டுகள் நிறைவடைந்தன. தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாததலமாக இந்தக் கோவில் விளங்குகிறது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

சுற்றுலாத்தலமாக தஞ்சை பெரிய கோவில் 

இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

ஆலய விழாக்கள்:

  • பிரம்மோற்சவம் -
  • ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா
  • திருவாதிரை
  • சித்திரை திருவிழா
  • திருத் தேரோட்டம்  
  • ஆடிப்பூரம்
  • கார்த்திகை
  • பிரதோசம்
  • சிவராத்திரி
banner

Leave a Reply

Submit Comment