கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவார விரதமாகும்.
விரதம் என்றால் என்ன?
விரதம் இருப்பது என்றால் சிலருக்கு மனதில் சந்தேகங்கள் எழும். இந்த விரதம் நம்மால் இருக்க இயலுமா? அவ்வாறு இருப்பது என்பது கடினமான செயலா என்றெல்லாம் மனதில் கேள்வி எழும். நம்மால் சரியாக செய்ய இயலுமா என்றெல்லாம் நினைக்கத் தோன்றும். ஆனால் விரதம் என்பது நம் மனதையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் செயலாகும். நம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் தூய் மையாக வைத்துக் கொள்வதும் அதன் மூலம் இறை ஆற்றலையும் அருளாசியையும் பெறுவதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வதற்கும் நாம் எடுக்கும் முயற்சிகள் ஆகும். நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை வித்திதுக்கொள்வதன் மூலம் நம் மன ஆற்றல் அதிகரிக்கும். இந்த ஆற்றல் நம்மைத் திறம் பட இயங்க வைக்கும். நாம் மேற்கொள்ளும் முயற்சிகளை எளிதாக்கும். அதனை நோக்கிய நம் பயணம் இனிதே முடியும்.
சோம வார விரதம் யாருக்கு?
சோம வார விரதம் சிவபெருமான் குறித்த விரதம் ஆகும். சந்திரனை பிறை நிலவாகத் தனது தலையில் சூடி சந்திரசேகராக விளங்கும் சிவ பெருமானுக்கு திங்கட்கிழமை மிகவும் பிரியமான நாள் ஆகும். அதிலும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தைப் போல வேறு எந்த விரதத்திலும் சிவன் திருப்தியடைய மாட்டார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சோமவார விரதத்தை எளிமையாகக் கடைப்பிடிக்கும் முறை:
நாம் அன்றாடம் செய்வது போலவே சோமவார விரத நாளிலும் காலையில் சீக்கிரம் எழுந்து உடலையும் உள்ளத்தையும் இல்லத்தையும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். இறைவனுக்கு பூஜைகள் மற்றும் அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்யும் போது இறைவனின் திரு நாமங்களை வாயால் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். சஹஸ்ர நாமம் என்று சொல்லப்படும் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தல் வேண்டும். இவை யாவும் எளிய செயல்களே ஆகும். இதற்கு எந்த விதமான கடினமான பயிற்சியும் தேவையில்லை. அருகில் இருக்கும் ஆலயம் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். இறைவனுக்கு செய்யப்படும் அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும். ஆண்களும் இந்த விரதம் இருக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமணமானவர்கள் என்றால் உறவில் நல்லிணக்கம் மேம்படும்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.
சோமவார விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை:
• சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவஸ்தலங்களை தரிசிப்பது நல்லது
• சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது
• சங்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது
• சிவனுக்கு பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது
• அன்னதனாம் நிகழ்சிகளில் பங்கு கொள்வது நன்று
• ஆலயத்தில் சந்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது.
சோம வார விரத பலன்கள் :
• திருமணம் கை கூடும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும்
• கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.
• திருமண உறவில் இருந்துவரும் கசப்புகள் நீங்கும்.
• பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.
• மனதில் அமைதி குடிகொள்ளும்
• குழந்தை பாக்கியம் கிட்டும். வம்சம் தழைக்கும்
• பாவங்கள் யாவும் அகலும்
• கல்வி மற்றும் செல்வா வளங்கள் கிட்டும்
• நம்பிக்கை பிறக்கும். பயன்கள் அகலும்
• ஆயுள் விருத்தி அடையும்
சோமவாரம் முழுவதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை இடைவிடாது ஜெபித்துக் கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். எனவே, நாமும் எளிய விரதமான இந்த கார்த்திகை மாத சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து சிவசக்தியின் அருளைப் பெறுவோமாக.
Leave a Reply