Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

Kanakadhara Stotram Lyrics in Tamil Meaning and Benefits - ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

May 23, 2020 | Total Views : 5,291
Zoom In Zoom Out Print

கனகதாரா ஸ்தோத்திரம்:

கனக என்றால் “பொன்” அல்லது “தங்கம்” என்று பொருள். தாரா  என்றால் “பொழிதல்” என்று பொருள். எனவே கனகதாரா என்றால் தங்க மழை பொழிதல் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த ஸ்தோத்திரப் பாடல் ஸ்ரீ ஆதி சங்கரர் அவர்களால் இயற்றப்பட்டுள்ளது. இந்த ஸ்தோத்திரம் குறித்த,  அதாவது  இந்தப் பாடல் எழுதக் காரணமான ஒரு சுவாரசியமான கதை கூறப்படுகின்றது.

ஆதி சங்கரர்

இந்தப் பாடலை இயற்றிய ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்கள் எட்டாம் நூற்றாண்டில் காலடி என்ற தலத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலத்தில் பக்தி மார்க்கம் தழைத்து இருந்த போதிலும் கடவுள் பெயரில் சில கருத்து வேறுபாடுகள் மக்களிடையே காணப்பட்டன.  இவர் பல தலங்களுக்கும் யாத்திரை புரிந்து இந்து மதத்தின் புனிதத் தன்மையையும் கடவுளைப் பற்றியும் பல பாடல்கள் அருளியுள்ளார்.  வாழ்வில் பற்றற்ற துறவு நிலை காரணமாக இவர் தல யாத்திரை மேற்கொள்ளும் போது அடியவர்கள் வீட்டில் அன்னமும் தண்ணியும் பிட்சையாக கேட்டுப் பெறுவதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஏழைப் பெண்மணி செல்வந்தராக மாறிய கதை :

அவ்வாறு ஒரு சமயம் இவர் தனக்கு அன்னம் இட வேண்டி ஒரு வீட்டின் வாயிலில் நின்று கேட்டார். அந்த வீட்டின் பெண்மணி மிகுந்த ஏழை என்ற போதிலும் கடவுள் பக்தியும், அடியவர்களின் மீது மரியாதையும் கொண்டவள். தன்னிடம் பிட்சை கேட்டு வருபவர்களுக்கு இல்லை இன்று கூறாமல் தன்னிடம் உள்ள சிறியஅளவு உணவையும் வழங்கும் தன்மை உடையவள். ஆனால் துறவியாக சங்கராச்சாரியார் வந்து பிட்சை கேட்ட சமயத்தில் அந்த ஏழைப் பெண்மணியின் வீட்டில் தருவதற்கு ஏதும் இல்லாத காரணத்தால் அவள் மனம் மிகவும் வருந்தியது. துறவிக்கு அளிப்பதற்கு ஏதாவது இருக்கின்றதா என்று அவள் தேடிய போது ஒரு  காய்ந்த நெல்லிக்கனி தான் அவளுக்கு கிடைத்தது. அந்தக் காய்ந்து  போன நெல்லிக்கனியை அளிக்க அவள் மனம் வெட்கியது. என்றாலும் கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாது ஏதாவது அளிக்க வேண்டும் என்று அவள் நினைத்த காரணத்தினால் அந்த நெல்லிக்கனியை அவருக்கு  அளித்தாள்.

அந்த பெண்மணியின் ஏழ்மை நிலையை நீக்க வேண்டி லக்ஷ்மி தேவியைப் போற்றிப் பாடி வேண்டினார். அதற்கு லக்ஷ்மி தேவி செல்வத்தைப் பெரும் அளவிற்கு அவள் சென்ற பிறவியில்  புண்ணியம் ஏதும் செய்ததில்லை என்று சங்கரரிடம் கூறி மறுக்க, இந்தப் பிறவியில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் தான தருமம் செய்யும் அவளின் பண்புகள் போற்றத்தக்கது என வாதாடி அவளுக்கு லக்ஷ்மி தேவி அருள் செய்தே ஆக வேண்டும் என்று கனகதாரா ஸ்தோத்திரம்  பாடி நெல்லிக்கனி அளித்த அந்தப் பெண்மனியின் இல்லத்தில் தங்க மழை பொழியச் செய்து அவள் வாழ்வை வளமாக்கினார்.கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் லக்ஷ்மி தேவியின் அருளால் வாழ்வில் சக வளங்களையும் பெறலாம்.

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் (Kanakadhara Stotram Lyrics in Tamil) : 

அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்

அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா

மாங்கல்ய தாஸ்து மம   மங்கள தேவதாயா: 1

மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, ஆனந்தத்தையே ஆபரணமாய் அணிந்திருக்கும் திருமாலின்  திருமார்பில் அக மகிழ்ந்து  மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் அனைத்து  மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:

ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி

மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா

ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா:    2

பாற்கடலில் உதித்த  ஸ்ரீ லட்சுமி தேவி  திருமாலின் திருமுகத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளை நினைவு படுத்துகின்றது.  பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை தரிசிக்க ஸ்ரீ தேவியின் கண்கள்  ஆசையோடு செல்வதும், வெட்கம் காரணமாக  திரும்புவதுமாக இருக்கின்றன. அருள் நிறைந்த அவள், தனது   கடைக்கண் பார்வையால்  என்னையும் பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்

ஆனந்த கந்த மநிமேஷ மநங்கதந்த்ரம்

ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்

பூத்யை பவேன்மம புஜங்க சயாங்கனாயா     3
 

ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போதும் யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவை இமையாது நோக்கும் தாயே ! உனது கரு விழியின் ஒளி  மிகுந்த  கடைக்கண் அருட்  பார்வை என் மீது விழுந்து சதா சர்வ காலமும் எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.

பாஹ் வந்தரே மதுஜித: ச்ரித கெளஸ்துபே யா

ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி

காமப்ரதா பகவதோ(அ)பி கடாட்ச மாலா

கல்யாண மாவஹதுமே கமலாலயாயா:       4

ஸ்ரீ மகா விஷ்னுவின் திருமார்பில் திகழ்கின்ற மாலை உன் பார்வை பட்டு இந்திர நீல நிறமாக காட்சி அளிக்கும். அத்தகைய ஒளி நிறைந்த உன் கடைக்கண் பார்வை என் மேல்  பட்டு எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:

தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ

மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி

பத்ராணி மேதிசது பார்கவநந்தநாயா:   5

மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த, நீருண்ட மேகம் போல திகழும் திருமாலின் திருமார்பில் கொடி மின்னலாய் விளங்கும் தாயே! பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்

மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந

மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்

 மந்தாலஸம் சமகராலய கந்யகாயா:   6

மங்களங்கள் அனைத்தும் தங்கும் இடமாகத் திகழும் திருக்கண்கள் கொண்டவளே! உன் பார்வை திருமாலுக்கே வலிமை தரக் கூடியது. அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்களின் கடைக்கண் பார்வையின் ஒரு சிறு துளி என்மேல் பட்டு மங்களங்களை அளிக்கட்டும்.

விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்

ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி

ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்

மிந்தீவரோதர ஸஹோதர  மிந்திராயா 7   

உன் பார்வை விளையாட்டாய் கூட எவர் மீது பட்டாலும் அவர் விண்ணுலக வாழ்வை பெற்று இந்திரனுக்கு சமமாக வாழ்வான். நீலோத்பல மலர் மகுடம் போன்ற உன் திருமுகத்தின் விழிகளின் கடைக்கண் பார்வை ஒரு க்ஷணம் என் மீது பட்டாலும் உன் கருணைக்கு ஆளாவேன் தாயே!

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர

திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே

திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா  8


அசுவமேத யாகம் போன்ற மகா  யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை என் மேல் பொழிந்திடுவாய் தாயே!.

தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம் புதாரா

மஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷண்ணே

துஷ்கர்ம கர்மமபனீய சிராயதூரம்

நாராயண ப்ரணயநீ நயனாம் புவாஹ:  9

காற்றின் காரணமாக கார் மேகங்கள் வானில் திரண்டு பூமிக்கு மழையை அளிக்கின்றது. பூமி செழிப்பாகின்றது. கார் மேகம் அளிக்கும் மழை நீர் பூமியை  செழிப்பாக்குவது போல, ஸ்ரீ மகா விஷ்ணுவின் பிரியத்திற்குரிய லட்சுமி தேவியின் கடைக்கண் பார்வை என்மீது பட்டவுடன் எனது வறுமை எல்லாம் நீங்கி என் வாழ்வில் வளங்கள்பெருக நான் செல்வந்தனாவேன்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி

சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி

ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயா

தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை!
 

ஆக்கல், காத்தல், அழித்தல் என்று கூறப்படும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற நிலைகளில், வேதத்தின் நாயகியாம் சரஸ்வதி தேவியான வாணியாகவும், கருட வாகன ஸ்ரீ விஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மியாகவும்,  பிறை சந்திரனை அணிந்த ஈசனொரு பாகமான ஈஸ்வரியாகவும் காட்சி அளிக்கும் ஸ்ரீ மகா லட்சுமிக்கு வணக்கங்கள்.

ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை

ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை

சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை

புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை            11

ஈடு இணையற்ற சிறந்த பேரழகு கொண்டவளும், மதுரமான குணங்களை கொண்டவளும், மகா சக்தியாக விளங்குபவளும், ஸ்ரீ மகா விஷ்ணுவின் பிரியத்திற்கு  உரியவளும், நல்ல கர்ம வினைப் பயனுக்கு பலன்களை அள்ளி வழங்குபவளும் கருணைக் கடலாக விளங்கும் ஸ்ரீ மகா லட்சுமி தேவியின் அருளை வேண்டுகின்றேன்.

நமோஸ்து நாலீக நிபாநநாயை

      நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை

நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை

      நமோஸ்து நாராயண வல்லபாயை:          12

பாக்கியம் நல்கும் திருமுகம் கொண்டவளே! பாற்கடலில் உதித்தவளே! மங்களங்களை சேர்க்கும் சந்திரனை உடன் பிறப்பாய் பெற்றவளே! பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே உன் பாதம் சரணம் எனப் பணிந்தேன்.

நமோஸ்து தேஹேமாம்பூஜை பீடிகாயை

நமோஸ்து பூமண்டல நாயிகாயை

நமோஸ்து தேவாதிதயபராயை

நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை

தங்கத் தாமரை ஆசனத்தில் அமர்ந்தவளே ! தரணிக்கே தாயாகத் திகழ்பவளே!  முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு கருணை வெள்ளத்தைப் பொழிபவளே!  பெருமை மிக்க சாரங்கபாணியின் மனையாளே சரணம்.

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை

      நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை

நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை

      நமோஸ்து தாமோதர வல்லபாயை           14

பிருகு முனியின் திருமகளே சரணம்! ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் உறைபவளே சரணம்! தங்கத் தாமரை ஆசனத்தில் உறைபவளே சரணம்! தாமோதரனின் மனம் கவர்ந்தவளே சரணம் !

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை

      நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை

நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை

      நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை:        15

ஜோதி வடிவாகத் திகழ்பவளே! தாமரை போன்ற கண்கள் உடையவளே! சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய  நந்தநானி

ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாணி

த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதானி

மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே 16

எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி

      ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்

ஸந்தனோதி வசனாங்க மானஸை

      த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே:     17

உந்தன் கடைக் கண் பார்வை வேண்டி நித்தமும் உன்னை தொழுது பூஜை புரிபவர்க்கு தங்கு தடையில்லாமல் செல்வ வளம் தருபவளே! மடை திறந்த வெள்ளமென பெருகும் வகையில்  நல்வரங்களை நல்கும் முராரியின் இதயம் கவர்ந்த நாயகியே| தன்னை வழிபடும் பக்தர்கள் மீது கடைக்கண் பார்வையால் கருணையை பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே

தவல தமாம்சுக கந்த மால்ய சோபே

பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே

த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்     18

தாமரை மலரில் அமர்ந்தவளே! தாமரை போன்ற கரம் உடையவளே! சந்தன மாலையை அணிந்து ஜோதியாக திகழ்பவளே! சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

திக்தஸ்திபி கனக கும்ப  முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாகினி விமலசாரு  ஜலாப்லு தாங்கீம

ப்ராதர் நமாமி ஜகதாம்    ஜனனீமசேஷ

லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்   19                   

யானைகள் தங்கக் குடத்தில் உய்ய நீராட்டும் உடலை உடைய தெய்வத் தாயே! திருமாலின் திருமார்பில் திகழ்பவளே! பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்தற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் செல்வியே!உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

கமலே கமலாட்ச வல்லபேத்வம்

      கருணாபூர தரங்கிதைரபாங்கை

அவலோகய மாமநிஞ் சனானாம்

      ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா        20

தாமரை மலரில் இருப்பவளே! கமலக் கண்ணனாம் ஸ்ரீ விஷ்ணுவின் காதலியே! கருணை வெள்ளமே! உன் கடைக் கண் பார்வை வேண்டி உன்னை துதிக்கும் இந்த வறியவனின் பிழை பொறுத்து தரித்திரத்தை நீக்க வழியைக் காட்டியருள வேண்டும்.

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரந்வஹம்

      த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்

குணாதிகா குருதர பாக்ய பாகினோ

      பவந்தி தே புவி புத பாவிதாசயா:   21

மறைகள் மூன்றின் வடிவமாகவும், மூவுலகம் தொழும் தேவியாகவும் திகழும்  ஸ்ரீ மஹாலட்சுமியே உன்னை மேற் கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால் துதித்துப் போற்றுவோருக்கு நிறை செல்வம், கீர்த்தி,  ஆரோக்கியம், நிறை ஆயுள், புத்தி,  மற்றும் வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அளித்து  பூரண நலமும் அளிப்பாய் தாயே

banner

Leave a Reply

Submit Comment