சிவாலயம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நந்தி என்றால் அது மிகை ஆகாது. அது போல சிவாலய வழிபாடு என்றால் முதலில் நினைவுக்கு வருவது பிரதோஷ வழிபாடு ஆகும்.
பொதுவாக சிவாலயத்தில் சிவனை தரிசிப்பதற்கு முன்பு நந்திக்கு பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசித்து விட்டு நந்தியிடம் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக பிரதோஷ நேரத்தில் இதனை மிகவும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். பார்வதி தேவியே சிவபெருமானின் பாதுகாவலராக விளங்கும் நந்தியிடம் அனுமதி பெற்று சிவனை பார்க்க சென்றதாக நாம் புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.
ஆனால் பக்தர்கள், தங்கள் பிரார்த்தனையின் போது அதிலும் குறிப்பாக பிரதோஷ நாளில் நந்திக்கு அருகில் சென்று காதுகளில் தங்கள் பிரார்த்தனைகளை வைப்பது மற்றும் கோரிக்கைகளைக் கூறுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு செய்வது சரியானதா என்றால் இல்லை. பொதுவாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள எந்தவொரு சிலையையும் நாம் தொடுவதோ குறிப்பாக நந்தியின் காதருகில் வாயை வைத்து பேசுவதோ காதில் நமது கோரிக்கைகளை சொல்வதோ தவறானது.
அதிலும் பிரதோஷ நேரம் என்பது மிகவும் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் நந்திக்கு அபிஷேகம் நடக்கும். மற்றும் சிவனுக்கு அபிஷேகம் நடந்து பிரதோஷ நாயகராக சிவ பெருமான் நந்தியின் இரு காதுகளுக்கு நடுவில் நடனமாடுவதாக ஐதீகம். எனவே பிரதோஷ நேரம் நந்தி தேவருக்கு ஆராதனை நடக்கும் நேரம்.
எனவே பிரதோஷ நேரம் மட்டும் இன்றி எந்த நேரத்திலும் நாம் நந்தியைத் தொடுவதோ அல்லது அருகில் சென்று காதில் நமது பிரார்த்தனை அல்லது குறைகளைக் கூறிக் கொள்வது தவறான ஒன்றாகும்.
முறையாக செய்ய வேண்டியது யாதெனில் சிவபெருமானைக் காண நந்தி தேவரின் அனுமதி பெற நந்தி தேவருக்கு பின்னால் சிலையைத் தொடாமல் நின்று சிவனை தரிசித்து விட்டு நந்திக்கு பக்கவாட்டில் சென்று தொடாமல் ‘நந்திகேச மகாபாஹ, சிவத்யான பாராயணா, உமாசங்கர சேவோர்த்தம் அனுக்யாம் தாதுமர்ஹசி’ என்று பிரார்த்திக்க வேண்டும். அதாவது ‘மூச்சுக் காற்றால் மிகப்பெரும் சிவத்தொண்டு புரிகின்ற நந்தியம் பெருமானே.. உமாசங்கரனை வழிபட எனக்கு அனுமதி தந்தருள்வாயாக..’என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
Leave a Reply