ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை தன்வந்திரி பகவான்:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக நம் தேசத்தில் தோன்றியதே ஆயுர் வேத மருத்துவம். இந்த மருத்துவமுறையை இறைவனே மனிதர்களுக்கு வழங்கினார் என்பது ஐதீகம். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் இவற்றோடு ஐந்தாவது வேதம் ஒன்றும் உண்டு. அது தான் இந்த ஆயுர்வேதம் என்று சொல்லப்படுகிறது. ஆயுர்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவமாகும். சமஸ்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத என்பது கல்வி தொடர்பானது அல்ல, அறிவுத்துறை என்று பொருள்படக் கூடியது. எனவே ஆயுர்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்று பொருள் தருகிறது. மிக நீண்ட வரலாற்று பின்னணியைக் கொண்ட இம்மருத்துவ முறையானது தெற்காசிய நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற, செல்வாக்குமிக்க ஒரு மருத்துவ முறையாகும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஆயுர்வேத மருத்துவத்தை மனிதர்களுக்கு வழங்கியவரே தன்வந்திரி பகவான். விஷ்ணுவின் அவதாரமே தன்வந்திரி பகவான். அதாவது இறைவனே மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும், ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது. ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
தன்வந்திரி பகவான் அவதாரம்:
பகவான் விஷ்ணு எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரம் என்கிறோம். இவற்றைத் தவிர தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற பல அவதாரங்களையும் விஷ்ணு பகவான் எடுத்து மனித குலத்துக்கு நல்ல உபதேசங்களைச் செய்துள்ளார். தன்வந்திரி விஷ்ணுவின் 17வது அவதாரம். தன்வந்திரி அவதாரம் குறித்து ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் பல குறிப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரு சமயம் துர்வாச முனிவரின் சாபத்திற்குள்ளான தேவேந்திரன் தனது செல்வங்களை இழந்தான். அவற்றையெல்லாம் மீண்டும் பெறுவதற்காக விஷ்ணுவிடம் வேண்டினான். அப்போது விஷ்ணு பகவான் கூறிய அறிவுரையின்படி அசுரர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தனர். பாற்கடலை கடைய கயிறாக பயன்படுத்திய வாசுகி என்னும் நாகம் ஆலகால விஷத்தை உமிழ ஆரம்பித்தது. இதைக் கண்ட தேவர்கள் பயந்து சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் கருணை கொண்டு தேவர்களை காக்கும் பொருட்டு அந்த விஷத்தை தானே அருந்தி நீலகண்டன் ஆனார்.
மீண்டும் தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அதிலிருந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் யானை போன்ற பல்வேறு விதமான புனிதப் பொருட்கள் தோன்றின. இறுதியாக பாற்கடலில் இருந்து தன்வந்திரி பகவான் அமிர்த கலசத்தோடு தோன்றினார். அந்த அமிர்தத்தை அருந்தி தேவர்கள் சாகாவரம் பெற்றும், தாங்கள் இழந்த பொருட்களையும் பெற்றுக் கொண்டு தேவலோகம் சென்றார்கள்.
தன்வந்திரி பகவானின் வடிவம்:
பகவான் விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பன்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும், முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்தியவாறும், முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கையில் அட்டைப் பூச்சியை ஏந்தியும் காட்சியளித்தார். முந்தைய மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. அதை இப்போதுள்ள தற்கால மருத்துவமும் ஏற்றுக் கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
யுத்த சாஸ்திரம் அறிந்த தன்வந்திரி பகவான்:
யுத்த சாஸ்திரம் ரண வைத்தியம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அதாவது போரில் காயமடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் உடலில் காயங்களை குணப்படுத்துவது சஸ்திர சாஸ்திரம் எனப்படுகிறது. தனுஷ் என்றால் யுத்தம், யுத்த சாஸ்திரம், சஸ்திர சாஸ்திரம் என்றும் பொருள்படும். இந்த சாஸ்திரத்தை முழுமையாக அறிந்தவர் தன்வந்திரி பகவான். தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலை தைத்தல் என்கிற பொருள் உண்டு எனக் கூறப்படுகிறது. எனவே தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சையில் சிறந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம் எனப்படுகிறது.
நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி பகவான்:
இன்றைய காலச் சூழ்நிலையில் பல்வேறு நோய்களால் மனித குலம் படும் இன்னல்கள் ஏராளம். இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல்களும், பொருளாதார நெருக்கடிகளும் ஏராளம். அதிலும் மருந்துகளே கண்டு பிடிக்க முடியாத பல தொற்று நோய்களில் சிக்கி மனித குலம் அவதியுறும் காலம் இது. எத்தனையோ மருத்துவ முறைகளை நாடி நாம் சென்றாலும், அதோடு இறை நம்பிக்கையோடு கடவுளை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழலாம். நோய்கள் தீர வணங்க வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான்.
மனிதர்களுக்கு நோய் நொடிகள் அவரவர் கர்ம வினைப்படியே வருகின்றன. இதிலிருந்து நம்மை முழுமையாக காப்பாற்ற வல்லது தன்வந்திரி பகவான் வழிபாடாகும். இவரை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கி, ஆரோக்கியம் உண்டாகும். ஏனென்றால் ஸ்ரீரங்க நாதருக்கே வைத்தியம் பார்த்தவர் தன்வந்திரி பகவான்.
தன்வந்திரி பகவான் வழிபாடு:
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தன்வந்திரி பகவானுக்கு தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது. அதோடு வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் தன்வந்திரி பகவானுக்கென்று தனி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் கலிகாலத்தில் அழியாமல் இருப்பதற்காக ஐம்பத்தி நான்கு கோடி தன்வந்திரி மகா மந்திர ஒலிகளுடன் கூடிய தோன்றிய மகத்தான தலம் என்ற இத்தலத்திற்கு உண்டு. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டத்திலும் தன்வந்திரி கோயில் அமைந்திருக்கிறது.
தன்வந்திரி பகவானை வீட்டிலிருந்தும் வழிபடலாம். நோயாளிகள் தான் வழிபட வேண்டும் என்றில்லை. நோயுற்றவர்களுக்காக யார் வேண்டுமானாலும் வேண்டிக் கொள்ளலாம். பொதுவாக திரயோதசி எனப்படும் பிரதோஷ நாள் சிவபெருமானுக்கு உகந்த நாள் என்பது போல், நரசிம்மருக்கு உகந்த நாள் என்பது போல, தன்வந்திரி பகவானுக்கும் திரயோதசி நாள் மிகவும் விசேஷமானது. அதிலும் அமாவாசைக்கு முன்னதாக வரும் தேய்பிறை திரயோதசி மிகவும் சிறப்பு எனக் கூறப்படுகிறது. இது தவிர எந்த நாளிலும், எந்த நேரத்திலும் தன்வந்திரி பகவானை வழிபடலாம்.
நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ.
என்பது தன்வந்திரி பகவான் மந்திரம்.
இந்த மந்திரத்தை நோய்வாய்பட்டவர்களுக்காக தன்வந்திரி பகவானை வேண்டி தினமும் 21 முறை சொல்லுங்கள். நீங்கள் யாருக்காக இந்த பிரார்த்தனையை செய்தீர்களோ அவர்களுடைய தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். நீண்ட காலம் சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
Leave a Reply