பைரவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். இவரை வைரவர் என்றும் அழைப்பார்கள். இவர் நாயை வாகனமாக வைத்துள்ளார்.
பொதுவாக அஷ்டமி திதி என்பது பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாள். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறறலாம் என்பது ஐதீகம். அன்று பைரவரை வழிபடுவதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் நீங்கி சகல விதமான நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் பைரவருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து நன்மைகளைப் பெறலாம்.
ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். மேலும் நலன் பெருகும்.

திங்கட்கிழமை அன்று வில்வம் கொண்டு பைரவரை அர்ச்சித்தால் சிவனருள் கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வந்தால் நாம் இழந்த பொருளைத் திரும்பப் பெற பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்.
புதன் கிழமை பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட மனநிம்மதி உண்டாகும் பூமி லாபம் கிட்டும்.
பைரவருக்கு பிரதி வியாழக்கிழமை அன்று மனமார விளக்கேற்றி வழிபட்டால் ஏவல், பில்லி மற்றும் சூனியம் விலகி மன நிம்மதி கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரங்களில் வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். திருமண தடை தீரும்
சனி பகவானுடைய குரு பைரவர். ஆகவே சனிக்கிழமைகளில் இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம் பருப்பு பொடி கலந்த அன்னம் செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் சகோதர ஒற்றுமை மேம்படும்.
செவ்வாய்க்கிழமை பைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில் நெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
புதன்கிழமை பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்பு பாயாசம் போன்றவற்றை படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்படும் தடைகள் விலகி சிறந்து விளங்கலாம்.
நாகதோஷம் நீங்க :
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து புனுகுபூசி நாகலிங்க பூ மாலை அணிவித்து பால் சாதம், பால் பாயாசம் நைவேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வந்தால் நாகதோஷம் நீங்கும்.
மாங்கல்ய தோஷம் விலக :
செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் கொம்பு மாலை சூட்டி, மஞ்சள் கயிறு(தாலிக்கயிறு) சமர்ப்பித்து சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், பானகம் படையலிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டு சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்குமம் தந்து ஆசீர்வாதம் பெற்றால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.
கிரக தோஷங்கள் நீங்க அந்ததந்த கிரகங்களுக்கு உரிய பைரவரை அந்தந்த நாளில் வணங்கி வழிபடலாம்.
சந்திரன் – கபால பைரவர்
செவ்வாய் – சண்ட பைரவர்
புதன் – உன்மத்த பைரவர்
குரு – அசிதாங்க பைரவர்
சுக்கிரன் – ருரு பைரவர்
சனி – குரோதன பைரவர்
ராகு – சம்ஹார பைரவர்
கேது – பீஷன பைரவர்
April 23, 2026