அன்னை வராஹி இந்து தெய்வம். எங்கும் வியாபித்து இருக்கும் சக்தியின் அம்சமாக அவள் கருதப்படுகிறாள். சப்த மாதர்களில் இவரும் ஒருவர். ஸ்ரீ வாராஹி தேவி விஷ்ணுவின் பன்றி அவதாரமான வராஹ அவதாரத்துடன் தொடர்பு உடையவள். இவரை மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சொல்லுவது உண்டு. வாராஹி வடக்கு திசையின் அதிபதி என்றும் கருதப்படுகிறாள். வாராஹி தேவியின் வழிபாடு பெரும்பாலும் இரவில், இரகசிய வாமமார்க தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. அவள் நேபாளத்தில் பராஹி என்று அழைக்கப்படுகிறாள், மேலும் பௌத்த தெய்வங்களான வஜ்ரவராஹி மற்றும் மரிச்சி தேவியின் ஒரு வடிவம் என்று பரவலாக நம்பப்படுகிறது. பன்றியின் முகம், பெண்ணின் உடல் கொண்ட வாராஹி தீய சக்திகள், கடன்கள் போன்ற துயரங்களை நீக்குகிறார்.
கலி காலத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்கும் அவளை வணங்காதவர்களே இல்லை எனலாம்.தனது பக்தர்கள் தன்னை நினைத்துவுடன் ஓடி வந்து அருள் புரிபவள். இவள் வணங்குதற்கும் எளியவள். அன்னையை தினமும் வழிபடலாம் என்றாலும் அவளை வழிபடுவதற்கு சில நாட்கள் உகந்ததாக இருக்கும். அந்த வகையில் அம்மனுக்கு உரிய நாளாக பஞ்சமி திதி குறிப்பிடப்படுகிறது. இன்று தேய்பிறை பஞ்சமி. மற்றும் இறை வழிபாட்டிற்கு உரிய மார்கழி மாதம். இன்று வாராஹி அன்னையை வழிபட்டு அவளது அருளைப் பெறலாம். தேய்பிறை வழிபாடு நமது கஷ்டங்கள் நீங்கவும், நாம் துன்பங்களில் இருந்து விடுபடவும் உதவும். நமது தீய கர்ம வினைகள் நீங்கும். வாராஹி அன்னையை வீட்டிலும் வழிபடலாம். ஆலயம் சென்றும் வழிபடலாம். தேய்பிறை பஞ்சமி நாளான இன்று வாராகி அன்னையை எவ்வாறு வழிபட்டால் நமது துன்பங்கள் சூரியனைக் கண்ட பனி போல விலகும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்.
இந்த வழிபாட்டை இரவில் மேற்கொள்ளலாம். இந்த பூஜைக்கு வாராஹி விக்கிரகம் அல்லது படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை நன்றாக சுத்தமாக துடைத்து சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பூவை சாற்றுங்கள். 27 என்ற எண்ணிக்கையில் விரலி மஞ்சள் எடுத்து மஞ்சள் நிற நூலில் மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். அவ்வாறு கட்டும் போது உங்கள் துன்பங்கள் நீங்க வேண்டும் என்று அம்மனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்த நாள் இந்த மஞ்சளை எடுத்து நீங்கள் சமையலுக்கு கூட உபயோகித்துக் கொள்ளலாம். வீட்டில் விக்கிரகம் மற்றும் படம் இல்லாதாவர்கள் அருகில் இருக்கும் ஆலயம் சென்று விளக்கேற்றி மாலை சமர்பிக்கலாம்.வீட்டில் இருக்கக்கூடிய சிலை படமாக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்றார் போல் கட்டிக்கொள்ள வேண்டும். கோவிலில் இருக்கக்கூடிய வாராகி அம்மனுக்கு தருவதாக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்றார் போல் சற்று இடைவெளி விட்டு விரலி மஞ்சளை கட்டிக்கொள்ளுங்கள். எண்ணிக்கை 27 இருக்க வேண்டும்.பூஜைகள் முடிந்த பிறகு “ஓம் வாராஹியே நமஹ” என்று 108 முறை ஜெபியுங்கள். இந்த வழிபாட்டின் மூலம் உங்கள் துன்பங்கள் நீங்கும். உங்கள் வேண்டுதல் நிறைவேறும். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டு வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்றிடுங்கள்.
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026